(Reading time: 22 - 44 minutes)

ஹாஹா… உன்னையே கலாய்ச்சிருக்கா பாரு… செம வாலு தான்ப்பா சதி….” என சிரித்த சோமநாதனிடம்,

“எனக்கே ஒரு நிமிஷம் அங்க என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியலைன்னா பார்த்துக்கோங்க அங்கிள்…” என இஷான் சொன்னதும்,

“நீ சரியான லூசுடா…” என்றான் ஜெய்…

“இதையே தான் சதியும் சொன்னா….” என்ற இஷானிடம்,

“ஹாஹா… இதுவேறயா?... எதுக்காக அவ அப்படி சொன்னா இஷான்?...” என்ற சோமநாதனின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் அவன்..

தைஜூவிடமும், தந்தையிடமும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தவள், தைஜூவை தன் அறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் சின்ன வயதில் எடுத்த ஆல்பத்தை காட்டி பார்க்க சொல்லிவிட்டு, மெல்ல பூனை போல் கீழே வந்து,

“சரி… சொல்லுங்க… எப்போ தான் இஷானுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்க?..” என்று கேட்டதும், இருவருமே அதிர்ச்சியுடன் பார்த்தனர் சதியை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“ஹேய்… முதலில் உன் கல்யாணம் நடக்கட்டும்… உன்னை முதலில் இன்னொரு வீட்டுக்கு துரத்திட்டு தான் நான் இந்த வீட்டுக்கு மருமகளை, இல்ல இல்ல மகளை தேடுவேன்…”  என்ற பிரசுதியிடம்,

“அப்படின்னா அண்ணா பாவம் தான்…” என சோகமாக சதி சொல்ல,

“ஏண்டி… உன் அண்ணன், அதான் என் பையன் எதுக்கு பாவம்னு சொல்லுற?..”

“அது கிடக்கட்டும்… முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க… இஷானுக்கு பார்க்கப்போற பொண்ணு அவனுக்கு மட்டும் பிடிக்கணுமா இல்ல எனக்கும் பிடிக்கணுமா?..” என மகள் கேட்டதுமே, “உனக்கு பிடிச்சாதாண்டா கல்யாணமே…” என்றார் தட்சேஷ்வர் அவசரமாய்…

“ஹலோ… பிடிக்க வேண்டியது என் பையனுக்கு உங்க அருமை பொண்ணுக்கு இல்ல…” என பிரசுதி முறைக்க,

“அம்மா… ஆரம்பிச்சிட்டீயா நீ?... சொல்லுறதை கேளும்மா…” என்றவள்,

“நீங்க யார் என்ன சொன்னாலும் சரி தான்… எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு… அந்த பொண்ணை தான் இஷானும் கட்டணும்…” என சட்டென்று அவளும் சொல்லிவிட, இருவரின் பார்வையும் கூர்மையாக அவள் மேல் பதிந்தது…

“நீ யாரை சொல்லுற சதி?...” என அன்னை கேட்டதுமே,

“அண்ணன் சின்சியரரா ஒரு பொண்ணை லவ் பண்ணுறான்ம்மா… இன்னும் அந்த பொண்ணுகிட்ட லவ் சொல்லலை… அவளுக்கும் அண்ணன்னா இஷ்டம் தான்… ஆனா அவளும் வெளிக்காட்டிக்கலை…” என சொல்லிவிட்டு இருவரையும் பார்க்க,

அவர்கள் மேலே சொல்லு என்பது போல் தலைஅசைக்க, “அந்த பொண்ணு வேற யாருமில்லம்மா… உன் க்ளோஸ் ஃப்ரெண்ட் காதம்பரி ஆன்ட்டியோட பொண்ணு, அதான் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் தைஜூ…” என பட்டென்று உடைத்ததும், பெரியவர்கள் இருவரும் சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தனர்…

பின்னர், இது கூட சரியான முடிவென்று அவர்களுக்கும் தோன்றிவிட, சதியிடத்தில் சம்மதம் தெரிவித்தனர்…

அவள் அதற்கு, “அம்மா ஒரு நல்ல காரியத்தை உடனே செஞ்சு முடிச்சிடணும்… தள்ளி எல்லாம் போடக்கூடாது… இன்னைக்கே போய் நிச்சயதார்த்ததுக்கு ஒரு நல்ல நாள் குறிச்சிட்டு வந்துடலாம்…” என சொல்ல, பெரியவர்களுக்கும் அது சரியென்றே பட்டது…

அந்த நேரம், “எல்லாம் சரி தான் சதி… ஆனா மாமா….” என இழுத்த பிரசுதியிடம்,

“யூ டோன்ட் வொரி மாம்… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்… நிச்சயதார்த்தம் நடக்கும்போது அவர் இங்க இருப்பார்… ஓகேயா?..” என கேட்க, அவரும் சரி என்றார் நிறைவுடன்…

“சரி… நீ இப்போ முதலில் போனை போட்டு உன் ஃப்ரெண்ட் கிட்ட பேசு…” என்றதும் பிரசுதி உடனே காதம்பரிக்கு போன் போட்டு பேச, அவர்களும் தங்களது முடிவினை கூறினர்…

“சரி.. இப்போ எங்கிட்ட போனை கொடு… மிச்சத்த நான் பார்த்துக்கறேன்…” என்றவள் அங்கே காதம்பரியிடம் பேசிவிட்டு, இங்கே தட்சேஷ்வரிடத்திலும் பிரசுதியிடத்திலும் தனது ப்ளானை கூற,

“எதுக்குடி இந்த ப்ளான்… சும்மா உனக்குத்தான் பொண்ணு பார்க்க போறோம்னு சொல்லி இஷானை கூட்டிட்டு போனா தான் என்ன?...” என்ற கேட்ட பிரசுதியிடம்,

“இத்தனை நாள் உன் மகன் என் ஃப்ரெண்ட் கிட்ட லவ் சொல்லாம டிமிக்கி கொடுத்தான்ல… இன்னைக்குப் பாரு வேடிக்கையை… அவனே அவன் வாயால சொல்லுவான் எல்லாத்தையும் நம்ம எல்லார்கிட்டயும்…” என்றவள் மெல்ல மாடிக்கு போய் தைஜூவை அழைத்துக்கொண்டு அவளை வீட்டில் விட சென்றாள்…

“செம… போ… இஷான்… உனக்கு உன் தங்கச்சி சதி தான் சரி… ஒருவழியா ஒரு நல்ல காரியத்தை பேசி முடிச்சிட்டாளே… ஒரே நாளில் பேசி நிச்சயம் வரைக்கும் கொண்டு வந்திருக்கான்னா நிஜமாவே கிரேட் தான்…” என்று பாராட்டிய சோமநாதனிடம் கண்டிப்பாக வரவேண்டும் என்ற கோரிக்கையோடு கிளம்பினான் இஷான்…

இஷான் சென்றதும். “என்னப்பா… நாளைக்கு உன் ஃப்ரெண்ட் நிச்சயதார்த்தமா?... செம ஜாலிதான்ல…” என அவர் கேட்க,

“இல்ல.. நான் வரலை… நீங்க போயிட்டு வாங்க…” என்றான் ஜெய் அமைதியாக…

“ஏன்ப்பா வரலை?...” என்று கேட்ட அவரிடத்தில்,

“வரலை… விடுங்களேன்….” என அவனும் அழுத்தி சொல்ல

“விடுங்கப்பான்னு சொல்லக்கூட வார்த்தை வரலையா ஜெய்?...” என்று கேட்டதும் பேச்சற்று போனான் ஜெய்… 

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.