(Reading time: 23 - 46 minutes)

குப்பென்று வியர்த்தது மதிக்கு.காரணம் சிறையில் காற்று வருவதற்கான ஜன்னல்கள் ஏதும் இல்லை.

சிறைச் சுவரின் மிக மேலே உயரத்தில் ஒரே ஒரு சாரளம் மட்டுமே இருந்தது.அதனாலேயே வெளிச்சம் கூட குறைவாகவே இருந்தது.ஐயோ இதென்ன கொடுமை..?இப்படியான ஒரு கொடுஞ்சிறையிலா மகோன்னதமான குப்த ராஜ்ஜியத்து இளவரசர் அடைபட்டுக் கிடக்கிறார்?என்ன கொடுமை இது?இவ்வாறு வேதனையோடு நினைத்தபடி மேலும் ஐந்தாறடி நடந்தவளின் கண்களில் சுவற்றைப் பார்த்தபடி படுத்துக்கிடந்த உருவம் தென்பட அப்படியே பந்துபோன்று ஏதோ ஒன்று அடி வயிற்றிலிருந்து கிளம்பி நெஞ்சை வந்து அடைத்தது.இது.. இது..அவராகத்தான் இருக்க வேண்டும்...அவராகத்தான் இருக்க வேண்டும்..என்ற எண்ணம் தோன்றியது மதிக்கு.கண்களில் பட்ட முதுகுப் பக்கம் அவன் இளைத்துப்போயிருப்பதைக் காட்டியது.தலை முடியும் காடாய் வளர்ந்திருப்பதைக் காட்டியது. கண்களில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது மதிவதனிக்கு.

வைத்தியரும் மதிவதனியும்  நடந்து வரும் காலடியோசை ஹஸ்தனை எவ்வித பாதிப்புக்கும் ஆட்படுத்த வில்லையோ என்னவோ அவன் சிறிதும் அசைவின்றி சுவற்றைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தான்.அவன் விழித்திருக்கிறானா?உறங்குகிறானா?என்றும் புரியவில்லை.

ஹஸ்தா என்று சப்தம்போட்டுக் கத்த வேண்டும் போல் இருந்தது மதிக்கு.ஆனாலும் அப்படிச் செய்தல் கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

ம்கும்...கனைத்தார் வைத்தியர்.

ஹஸ்தனின் உடலில் சின்ன சலனம்.உடம்பு லேசாக ஆடியது.வலது கையைத் தலையில் வைத்து பரக் பரக் என்று சொரிந்து கொண்டான் ஹஸ்தன்.காலை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு மெள்ள..மெள்ள உடலைத் திருப்பினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

அப்படித் திரும்பியவனின் பார்வை முதலில் வைத்தியரிடம் சென்றுவிட்டு பின்னர் அவரருகே நின்றிருந்த ஆண் உருவில் நின்ற மதிவதனியிடம் நிலைத்தது.அவன் கண்களில் வியப்பு.எப்போதும் வைத்தியர் மட்டும் தானே தனியாய் வருவார் இன்று ஒரு வாலிபனுடன் வந்துள்ளாறே..?என்று நினைத்திருப்பானோ?

சுவற்ரைப் பார்த்தபடி படுத்துக்கிடந்த ஹஸ்தன் மெள்ளத் திரும்பிய போது அவனை நேருக்கு நேர் பார்த்த மதிவதனி அப்படியே தவித்துப் போனாள்.தாடியும் மீசையுமாய் காடாய் வளர்ந்திருந்த தலை முடியோடு இளைத்துக் கருத்து ஆளே மாறிப்போயிருப்பதாய்ப் பட்டது மதிக்கு.எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாறே என்று வேதனையோடு அவனையே பார்த்தாள் மதி.ஆனாலும் அந்த காந்தக் கண்களும் அவனின் கம்பீரமும் சிறிதும் மாறாமல் இருந்தது கொஞ்சம் ஆறுதல் அளித்தன.

படுத்திருந்த அவனருகில் அமர்ந்தார் வைத்தியர்.குப்த இளவரசே உங்கள் உடல் நிலை சரியாகிவிட்டது.உங்களுக்கு முக சவரம் செய்து முடிவெட்டிவிட்டால் நீங்கள் பழையபடி ஆகிவிடுவீர்கள்.

இனி உங்களுக்கு மருந்து தேவை இல்லை என்றார்.எல்லா தமிழில்தான் அவனுக்குப் புரிகிறதோ இல்லையோ அவரவர் தாய் மொழியில்தானே சொல்லவரும்?அப்படித்தான் சொன்னார் வைத்தியர்...வைத்தியர் என்ன சொல்கிறார் என்பது புரியாமல் எல்லாம் என் தலைவிதி..எங்கோ பிறந்து இங்கு வந்து அடிபட்டு காயப்பட்டு செய்யாத குற்றத்துக்குப் பழி சுமந்து சிறையில் அடைபட்டு சித்ரவதை அனுபவிக்கிறேன்.தினம் தினம் மருந்தைத் தின்று தின்று என் நாவே செத்துவிட்டது...நானும் சாகவேண்டியதுதான் பாக்கி...இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கக் காத்திருக்கிறதோ என்றான் மிகுந்த வேதனையோடும் சலிப்போடும்.

வைத்தியருக்கு அவன் சொல்லும் எதுவும் புரியவில்லை.ஆனால் மதிவதனிக்கு அவனின் ஒவ்வொரு வார்த்தையும் புரிந்தது.அப்படிப் புரிந்ததால் வேதனையாய் இகுந்தது.ஹஸ்தனின் வேதனையும் சலிப்பும் அவளைத் தவிக்கச் செய்தது.

வைத்தியர் வாலிப உருவில் இருந்த மதிவதனியைப் பார்த்து சந்திர சேனா இவர் என்ன சொல்கிறார் என்று வினவ..மதிவதனியும் தான் வைத்தியரின் கேள்விக்குப் பதில் சொன்னால் தன் பெண் குரல் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற எண்ணம் மறந்து ஹஸ்தன் வேதனையோடு சொன்ன அனைத்தையும் தமிழில் வைத்தியரிடம் சொல்ல...

ஹே..இது என்ன உன்னைப் பார்த்தால் ஆண்போல் இருக்கிறாய் வாலிபனாய்த் தெரிகிறாய்..ஆனால் பெண்போலப் பேசுகிறாயே..?உன் குரல் பெண்ணின் குரல் போலல்லவா இருக்கிறது..?உண்மையில் நீ பெண்ணா அல்லது ஆணா?என்று ஆச்சரியத்தோடும் சந்தேகத்தோடும் கேட்டான் ஹஸ்தன்.ஆனாலும் தான் அந்த வாலிபனிடம் நீ ஆணா பெண்ணா என தன்னுடைய மொழியில் கேட்டது அவ்வாலிபனுக்குப் புரிந்திருக்காது என்று எண்ணினான் ஹஸ்தன்...

அப்பொதுதான் தன் தவற்றை உணர்ந்தாள் மதிவதனி.என்னசெய்வதெனப் புரியாமல் மதி வைத்தியரை நோக்க..சந்திர சேனா இப்படிச் சொல்..விடலைப் பையனின் குரல் அவன் வாலிபனாய் மாறும் காலத்தில் சிறிது காலம் குரல் உடைந்து பிசறி கீச்சென்று பெண்ணின் குரல்போல் ஆகி பின்னர் ஆணுக்குரிய குரலாய் மாறும்..இதுபோல் சிலருக்கு நேர்வதுண்டு..அது போல் என் குரலும் தற்போது ஆகி உள்ளது வெகு விரைவில் ஆண் குரலாய் மாறிவிடும் என்று சொல் என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.