அப்பாடா என ஆசுவாசமான மதி வைத்தியர் சொன்னதை அப்படியே ஹஸ்தனிடம் அவனுடைய மொழியான சமஸ்கிருதமும் மகதமு கலந்த மொழியில் சொல்ல..அவ்வாலிபன் பேசிய மொழி கேட்டு தன்னை மறந்து தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சந்தோஷத்தில் ஹோ என்று கத்திவிட்டான் ஹஸ்தன்.
ஆஹா..ஆஹா..வாலிபரே நீங்கள் பேசும் மொழி என் மொழியாயிற்றே..?இம் மொழி நீங்கள் அறிவீரா? கேட்கவே இனிமையாய் உள்ளது..பேசுங்கள் பேசுங்கள்..நிறைய பேசுங்கள்..என்று சொல்லிக்கொண்டே எழுந்து நிற்க முயற்சித்தான்..அவன் உடல் தள்ளாடியது..அப்படியே விழப்போனான்.விழப்போனவனை தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது மதிக்கு.ஆனாலும் வைத்தியர் இருக்கையில் அவ்வாறு செய்ய தயக்கமாய் இருந்தது மதிக்கு.உணர்ச்சிவசப்படாமல் இருக்கவேண்டுமென்ற எண்ணமும் அவளின் தயக்கத்திற்குக் காரணமாய் இருந்தது.
சட்டென்று சுவற்ரைப் பிடித்துக்கொண்டு விழாமல் சமாளித்தான் ஹஸ்தன்.பின்னர் தன்னைக் கொஞ்சம் நிதானப் படுத்திக்கொண்டு..வாலிபரே நீங்கள் இம்மொழியை எவ்வாறு அறிவீர்கள்?யாரிடம் கற்றீர்கள்? வைத்தியரோடு வந்திருக்கும் நீங்கள் யார்?எனக் கேட்டான்.
ஹஸ்தனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் வைத்தியரைப் பார்த்தாள் மதி..வைத்தியரே குப்த இளவரசர் என்னை யார் எனக் கேட்கிறார்...நான் என்ன பதிலளிப்பது?எனக் கேட்டாள்.
சொல்லு சந்திர சேனா..நீ அந்தணரின் பேரன் என்றும் என்னிடம் மருத்துவம் கற்றுக்கொள்ளும் மாணவன் என்றும் எனக்கு உதவி செய்யவே என்னுடன் வந்திருப்பதாகவும் சொல்..என்றார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
வாலிபனைப் போல் மாறியிருந்த மதிவதனியும் ஹஸ்தனிடம் அவ்வாறே சொல்ல அவனுக்கு அவளின் பதிலால் முகத்தில் சிறிது மகிழ்ச்சி ஏற்பட்டது போல் தோன்றியது.
திடீரென வைத்தியர் இங்கும் அங்கும் எதையோ தேடுவதைபோல் பார்த்தார்.வேட்டியின் இடுப்பு முடிச்சிலும் கொண்டுவந்திருந்த மருந்துப் பெட்டியிலும் பரபரப்பாய்த் தேடினார்.
ஹஸ்தனுக்கும் மதிக்கும் அவர் எதனைத் தேடுகிறார் எனப் புரியவில்லை.
வைத்தியரே எதையோ தேடுவதைப் போல் தெரிகிறதே..?எதனைத் தேடுகிறீர் என்று கேட்டாள் மதி.
இல்லை..இவருக்குத் தருவதற்காக தெம்பேற்றும் குளிகைகள் கொண்டுவந்திருந்தேன்.அந்த பொட்டலத்தைக் காணவில்லை.அதனைத்தான் தேடுகிறேன்.ஒருவேளை சிறைக்கு வெளியே நடந்து வரு பாதையில் விழுந்திருக்குமோ என்னவோ? நான் போய்ப் பார்த்துவருகிறேன்.நீ இவரோடு பேசிக்கொண்டிரு என்று சொல்லியபடி அவ்வறையைவிட்டு வெளியே சென்றார் வைத்தியர்.அவர் இங்கிதம் தெரிந்தவர்.இளவரசியும் ஹஸ்தனும் தனியாய்ப் பேசிக்கொள்ளட்டும் என நினைத்தே பொய்யான காரணத்தைச் சொல்லிவிட்டு வெளியே சென்றார்.ஆனாலும் இப்படிச் செய்ய மகாராணியால் ஏற்கனவே அவருக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது என்னவோ உண்மை.போகும் போது சந்திரசேனா சர்வ ஜாக்கிரதையாக இரு..என அழுத்தமாகச் சொல்லியபடியே சென்றார்.அதில் பொதிந்திருந்த அர்த்தம் மதிக்குப் புரியாமல் இல்லை.
இருவரும் அருகருகே நிற்க மதிவதனிக்கு அவனிடம் பேச்சை எப்படி ஆரம்பிப்பதெனத் தெரியவில்லை.
ஹஸ்தனைப் பார்க்க வேண்டும் பார்க்கவேண்டுமென தவித்துவிட்டு இப்படி அருகே நிற்குபோது பேசாமல் அமைதியாய் இருக்கிறோமே என தவித்தது அவள் மனம்.ஹஸ்தனுக்கும் தன் அருகே நிற்பது ஆணின் உருவத்தில் இருக்கும் தான் உயிராய் நேசிக்கும் தன் மனதைக்கவர்ந்த இளவரசி மதிவதனிதான் என்பது தெரியாததால் அமைதியாக இருந்தான்.ஆனாலும் அவன் மனதில் இவ்வாலிபனிடம் மதிவதனியைப் பற்றிக் கேட்கலாமா என்ற எண்ணமும் எழாமல் இல்லை.என்னெவென்று கேட்பது?ஒரு கைதி அதுவும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவன் வேற்று நாட்டினன் இன்னாட்டு இளவரசியைப் பற்றி விசாரித்தால் அது பெரும் குற்றமாகிவிடாதா?அது எதில் கொண்டுபோய் விடுமோ?வைத்தியரிடம் மருத்துவம் கற்கும் ஒரு சாதாரண வாலிபன் இளவரசியைப் பற்றி என்ன அறிந்திருக்கப் போகிறான்?இருக்கட்டுமே கேட்டுப் பார்ப்பதில் என்ன தவறு?..நம் மொழி அறிந்தவன் இவன்.வாலிபனாகவும் உள்ளான்.காதலின் உணர்வுகள் பற்றி அறிந்திருக்க மாட்டானா என்ன?கேட்கலாம்..ஆனால் இளவரசி நம்மை விரும்புகிறாரா எனறே தெரியவில்லையே?
அப்படியிருக்க இவனிடம் இளவரசியைப் பர்றிக் கேட்கப் போக அது பெரும் பிரர்ச்சனை ஆகிவிட்டால்?
இவ்வாரெல்லாம் ஹஸ்தன் எண்ணித் தவிக்க மதியின் எண்ணமோ வேறு விதமாய் இருந்தது.
நான்தான் இளவரசி மதிவதனி என்று இவரிடம் எப்படித் தெரியப்படுத்துவது?இவர் மனதில் நான் இருக்கிறேனா எனத் தெரிந்து கொண்டபிந்தான் நான் இன்னார் என்றுத் தெரியப்படுத்தவேண்டும்.
ஒருவேளை இவர் என்னை விரும்பாமலிருந்து நானாய் என்னை அவசரப்பட்டு இன்னாரென்று தெரிவித்தால் இன்னாட்டின் இளவரசி தன்னை வந்து பார்க்கவேண்டிய அவசியம் என்ன என நினைக்கமாட்டாரா?ஒரு பெண்ணுக்கு அதுவும் ஒரு நாட்டின் இளவரசிக்கு அது இழுக்கல்லவா?பின் எப்படி இவரின் எண்ணத்தைத் தெரிந்து கொள்வது?என் காதலைத் தெரிவிப்பது?எதற்காக இங்கு வந்தோமோ அது பலனற்றுப் போய்விடுமோ?பலவாறு சிந்தித்த மதிவதனி ஒரு முடிவுக்கு வந்தாள்.