'அட வாடா... இங்கே நின்னுண்டிருந்தேனா யாரனும் ஏதானும் சொல்லிண்டே இருப்பா வா..' அவன் கட்டளை இடும் தொனியில் சொல்ல... பேசாமல் அவன் பின்னால் நடந்தாள் வேதா. அவர்கள் இருவரும் ஒன்றாக மாடி ஏறுவதை பார்த்தபடியே நின்றிருந்தார் யசோதா.
'ஏதாவது ப்ரௌஸ் பண்றதுன்னா பண்ணு.. இங்கே யாரும் வர மாட்டா..' தனது மடிக்கணினியை அவளிடம் கொடுத்துவிட்டு அறை கதவை சாத்திக்கொண்டு நகர்ந்தான் முரளி. உள்ளமெங்கும் வார்த்தையில் விவரிக்க முடியாத நிம்மதி பரவியது அவளுக்கு.
அங்கே கோகுலின் அறை கதவை தயங்கி தயங்கி தட்டினாள் கோதை. அவன் கதவை திறப்பதற்குள் பல நூறு எண்ண அலைகள் அவளுக்குள்ளே.
'கோபமாக இருப்பானோ??? என் முகத்தை பார்க்க மாட்டானோ??? என் மீது கோபம் இருக்காது. ஒரு வேளை அப்பாவின் மீது கோபமாக இருப்பானோ.??? '
சட்டென 'கை யை விட்டா தானே போகமுடியும்... அவன் காலையில் விலகி சென்ற தருணம் நினைவுக்கு வர.. அதே நொடியில் அவன் கதவை திறக்க...
முகம் மலர்ந்த சிரிப்புடன்... 'கோதை பொண்ணு...' என்றான் கோகுல்.
அடுத்த நொடி சட்டென அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டாள் அவள். அவள் தவிப்பு புரிந்தவனாக புன்னகைத்தான் அவன்.
'ரொம்ப பயந்துட்டியாடா கோதை பொண்ணு..'
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்...
'ம்??? ம்ஹூம்... அதெல்லாம் இல்லை சும்மா உங்களை பார்க்கத்தான் வந்தேன். நான் கீழே போறேன். அம்மா உடனே வரச்சொன்னா..' அவன் முகத்தை பார்த்தால் கண்ணீர் கொட்டி விடும் என்று புரிந்தவளாக ஓடி விட நினைக்க..
'போலாம்... போலாம்..' கதவை கொஞ்சம் சாத்தியவன் அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டான். .
'உங்களுக்கெல்லாம் கோ... கோவம் போ.... போயிடுத்தா??? கரைந்து போன குரலில் தட்டு தடுமாறி அவன் முகம் பார்த்தபடியே அவள் கேட்க
'நேக்கு எப்பவுமே கோதை பொண்ணு மேலே கோவம் கிடையாதே...' என்றபடியே அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தான் கோகுல்
'இல்லை அப்பாக்கெல்லாம்.. எங்க மேலே கோவம் இல்லையா???' அவள் மெல்ல கேட்க..
'இருந்தது. இப்போ கொஞ்சம் சரியாயிடுத்து.. என்று சற்று முன் நடந்ததை சொல்ல துவங்கினான் கோகுல்.
முரளி வேதாவை அழைத்து வர சென்றிருந்த நேரத்தில் தான் அந்த விவாதங்கள் நடந்தன.
'என்ன தைரியம் அந்த ஸ்ரீதரனுக்கு???" குதித்துக்கொண்டிருந்தார் நந்தகோபாலன். 'நம்ம கோகுலையே சந்தேக பட்டுட்டார்...'
'என்னாலையும் அதை தான் தாங்கிக்க முடியலை.. என்றார் வாசுதேவன். 'கோகுலுக்குமே ரொம்ப மனசு கஷ்டபட்டு போயிடுத்து அதான் கல்யாணம் வேண்டாம்னு வந்துட்டான்.. போறும் இதோட நிறுத்திப்போம்...
'அப்பா... சட்டென எழுந்தான் சோபாவின் கண் மூடி சாய்ந்திருந்த கோகுல்
'நேக்கு யார் மேலையும் எந்த கோவமும் இல்லப்பா. ஒரு பொண்ணை காணோம்னு அவ அப்பா பதறிண்டிறுக்கறச்சே நான் கல்யாணம் பண்ணிக்கறது நியாயமில்லைன்னு தோணித்து.. அதான் கிளம்பி வந்துட்டேன்..'
இடம் வலமாக தலை அசைத்தார் வாசுதேவன் 'பதட்டம் வந்தா யாரை வேணுமானாலும் தப்பா பேசிடறதா??? நன்னா இருக்கே. போறும். கோகுல்... இந்த சம்மந்தம் வேண்டாம்..'
'அப்பா... காணாம போனது அவர் பெத்த பொண்ணு பா...யாரா இருந்தாலும் இப்படித்தான் பா பேசுவா..' கோகுல் சொல்ல..
'பொண்ணு என்ன.... கார் காணாம போனாலே இப்படி பேசறவாள நான்... பார்த்திருக்கேன்' இடையில் புகுந்து ஒலித்தது யசோதையின் குரல்...எல்லாரும் புரியாமல் நிமிர தொடர்ந்தார் அவர்.
'ரெண்டு மாசம் முன்னாடி உங்க அண்ணாவோட ஆடி கார் காணாம போயிடுத்துன்னு சொல்லி எப்படி தவிச்சேள் ரெண்டு பேரும்... இவன் எடுத்திருப்பானோ அவன் எடுத்திருப்பானோன்னு எப்படி எல்லாம் யோசிச்சேள்.. யார் மேலேயெல்லாம் போலீஸ் கம்பளைன்ட் குடுக்கலாம்ன்னு ராத்திரி பூரா தூங்காமா யோசிச்சிண்டிருந்தேள்.. கடைசியிலே கார்த்தாலே பார்த்தா கார் ஆபீஸ்லே இருந்தது. உங்க அண்ணா அதை அங்கேயே மறந்திட்டு யாரோ ஃப்ரெண்ட்டோட வந்துட்டுடிருந்திருக்கார்... அது வெறும் அறுபது லட்ச ரூபா கார்... அதுக்கே நாம அப்படி பதறினா ஒரு பொண்ணை பெத்தவர் பதற மாட்டாரா நன்னா யோசனை பண்ணி பாருங்கோ..'
யாரிடமும் பேச்சில்லை. 'எது எப்படின்னாலும் கோதை பாவம் அவளை ஏமாத்திடாதீங்கோ.. ப்ளீஸ்..' தேவகியும் இணைந்துக்கொள்ள.. கொஞ்சம் இளகியவராக அமர்ந்தார் வாசுதேவன்.
சில நிமிடங்கள் மெளனமாக கரைய.... எல்லார் மனமும் அலைபாய்ந்து ஒரு நிலைக்கு வர.... தனது அண்ணனை மெல்ல நிமிர்ந்து பார்த்தார் வாசுதேவன்.
'கோதை - கோகுல் நிச்சியத்தை இன்னைக்கே பண்ணிடுவோமா??? என்றார் சட்டென ஒரு பெருமூச்சுடன் கலந்த தலை அசைப்பு எழுந்தது நந்தகோபாலிடம்.
நடந்ததை எல்லாம் அவளிடம் விளக்கி விட்டு மிச்சமிருந்த அவள் கண்ணீரை துடைத்தான் கோகுல்.