'நான்தான் ஒரு கிராதகனை நல்லவன்னு நம்பி... நேக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்ததுன்னு தெரியலை ... லெட்டர் எழுதி வெச்சிட்டு ஆத்தை விட்டு, அப்பா தங்கையை விட்டுட்டு போனேன்....போறுமா??? அவசரம். எதையுமே சரியா யோசிக்க தோணலை நேக்கு.. ஏதோ ஒண்ணு என் கண்ணை மறைச்சிடுத்து...'
'வேதா.. போறும்... நீ உள்ளே வாயேன்..' என்றபடி முரளி இடையில் வர
'இல்ல முரளி நேக்கு பேசணும்...' என்றவள் தொடர்ந்தாள்....
'எங்கப்பா பாவம்... அவருக்கு வைதீகமும் பெருமாளும் தவிர வேறே ஒண்ணும் தெரியாது. என்னாலே இன்னைக்கு அவர் தலை குனிஞ்சு நிக்கறார்.. நான் பண்ணது ஒரு பாடம்... பெண்கள் எல்லாரும் எப்படி ஜாக்கிரதையா இருக்கணும் அப்படிங்கறதுக்கு ஒரு பாடம்...
அப்பாவின் கண்களில் கொஞ்சம் கண்ணீர் கட்டிக்கொள்ள எல்லாரும் இமைக்க கூட மறந்திருக்க ஒரு ஆழமான மூச்செடுத்து தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு சொன்னாள் அவள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
'நல்ல வேளை... பெரியவா புண்ணியம்... சரியான நேரத்திலே அந்த கண்ணன் எல்லாத்தையும் நேக்கு புரிய வெச்சான்... எப்படியோ அவா கிட்டே இருந்து தப்பிச்சேன்... அங்கிருந்து என்னை காப்பாத்தி கூட்டிண்டு வந்தது கோகுலும் முரளியும் தான்...'
'இதோ இத்தனையும் பண்ணிட்டு உங்க எல்லார் முன்னாடியும் தைரியமா வந்து நிக்கறேன்... இது வரைக்கும் இவாத்திலே யாரும் என்னை மரியாதை குறைவா கூட பேசலை.. ப்ளீஸ்.. அவா யாரையும் யாரும் தப்பா நினைச்சுக்காதீங்கோ... இப்போ என் தங்கைக்கு நிச்சயதார்த்தம் அது நன்னா சந்தோஷமா நடக்கட்டுமே ப்ளீஸ்...' அவள் கரைந்து போன குரலில் சொல்ல.. யசோதையின் முகத்தில் நிறையவே நெகிழ்ச்சி ரேகைகள் ஓட... நந்தகோபாலன் கூட கொஞ்சம் இளகித்தான் போயிருந்தார்...'
சில நிமிடங்கள் அங்கே இறுக்கமான மௌனம் சூழ்ந்திருக்க..
'சாரி.. முரளி... என்று சொல்லிவிட்டு.. அவனது தோழி அங்கிருந்து நகர.. சுற்றி இருந்தவர்கள் மெல்ல கலைந்து நகர.. ஒரு ஓரத்தில் சென்று நின்றுகொண்டவளின் கண்ணில் இப்போதுதான் கொஞ்சமாக கண்ணீர் துளி.. அவள் அருகில் வந்தான் முரளி..
'ஏன்டா...' என்றான் அவன் இதமாக.
'இல்லை ... முரளி... எல்லாருக்கும் தெரியட்டும் அது நல்லதுதான்...'
'என்னடா நல்லது??? இதுக்குதான் நான் உன்னை ரூம்லே இருக்க சொன்னேன்...'
'இல்ல முரளி... என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசினேன் . என்னாலே நீங்க எல்லாரும் தலை குனிஞ்சு நிக்கறது நேக்கு கஷ்டமா இருக்கு... எல்லாம் நல்லத்துக்கு தான் நாளைக்கு உங்களுக்கு வேறே பொண்ணு பாக்கறப்போ இது மாதிரி எந்த கேள்வியும் வரப்படாதோன்னோ??? அதுக்குதான் சொன்னேன்...'..
சொல்லிவிட்டு அவள் திரும்ப, அதற்குள் அங்கே மேடையில் ஏறி நின்றுவிட்ட கோதையையும் கோகுலையும் புன்னகையுடன் ரசிக்க ஆரம்பித்த வேதாவை ரசிக்க ஆரம்பித்தான் முரளி.....
'இனி எனக்கு வேறே ஒரு பெண்ணை பார்ப்பதா??? அது இந்த ஜென்மத்தில் நடக்கவே முடியாத ஒரு விஷயம்...'
சில மணி நேரத்தில் கோகுல் கோதை நிச்சியதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு திருமணம் என்று முடிவாகி இருந்தது.
அந்த இரண்டு மாத இடைவெளியில் வேதாவுக்கும் முரளிக்கும் இடையே ஒரு அழகான நட்பு உருவாகி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
முக்கியமாக அவள் மனதில் இருக்கும் எதையும் அவனுடன் தைரியமாக பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவளிடத்தில் வளர செய்திருந்தான் முரளி. அவர்கள் பேசிக்கொள்வது இரண்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் இல்லைதான்.
ஆனால் அதை தடுத்து நிறுத்தி விடவேண்டும் என்ற எண்ணங்கள் நந்தகோபால் உட்பட யாருக்குமே ஏனோ வரவில்லை. அவளை ஒன்றிரண்டு முறை பார்த்ததிலேயே இவள் நமது குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் தான் என்ற எண்ணம் அவருக்கும் வந்து விட்டதோ என்னவோ??? அவருக்கே தெரியவில்லை.
கோகுல் கோதை திருமண நாளும் வந்திருந்தது..
சந்தோஷ சிரிப்புடன் மனங்கள் கலகலக்க.. மண்டபத்தின் வாயிலில் வந்து இறங்கினார்கள் கோகுல் குடும்பத்தினர்.
வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டுமென்பதற்கு அடையாளமாக வாயில் கதவில் இருந்த வாழைமரங்கள், மாவிலை தோரணங்கள், வாசலில் இருந்த கோலங்கள், பூ, பன்னீர், கல்கண்டுடனான வரவேற்பு அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்க, கையில் ஆரத்தி தட்டுடன் எதிர்ப்பட்டாள் வேதா...
அவளும், கோதையின் அத்தையுமாக ஆரத்தி எடுக்க... தவிர்த்து தவிர்த்து பார்த்து மெல்ல மெல்ல நிமர்ந்த அவள் கண்கள் முரளியை தேட அவன் அவள் கண்ணில் தென்படவில்லை... ஆனால் அவளுடைய தவிப்பு புரிந்தது அந்த அன்னைக்கு... யசோதைக்கு...
'இங்கேருந்து...எட்டி எட்டி எல்லாம் பார்க்க வேண்டாம்... மாப்பிள்ளை வந்தாச்சு... நேர்லே போய் அவாளுக்கெல்லாம் ஒரு ஹாய் சொல்லிட்டு வா..' கண்ணடித்து சொன்ன அக்காவை பார்த்து அழகாக புன்னகைத்தாள் கோதை...
'இவளுக்கும் சீக்கிரம் இது போன்றதொரு திருமணம் நடக்க வேண்டும்'