இஷானுடன், பிரம்மரிஷியும் வருவதைக் கண்டவள், ஒடி சென்று அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்…
“தாத்தா….” என அவள் அழ ஆரம்பிக்க, இஷான் தங்கையிடம் என்ன ஏது என்று விசாரிக்க முயன்றான்…
அந்த நேரம் மருத்துவர் வந்து சதியை தேட, சதி அவரிடம் சென்றாள்…
“டாக்டர்… அவர் நல்லாயிருக்குறார்ல… அவர் சரியாகிட்டார்ல…” என பரிதவிப்புடன் கேட்க
“நீங்க தான அவரைக்கொண்டு வந்து அட்மிட் பண்ணினது இங்க?...” எனக் கேட்டார் அந்த மருத்துவர்…
“சார்… நான் இஷான்… இவ என் தங்கை… யாருக்கு அடிபட்டிருக்கு?.. இவ யாரைக்கொண்டு வந்து சேர்த்தா?...”
இஷானின் போலீஸ் உடையை பார்த்துவிட்டு,
“ஜெய்ன்னு நேம் இருக்கு இஷான்… அவருக்கு பலமான காயம் ஏற்பட்டிருக்கு…” என்றார் மருத்துவரும்…
“வாட்?..............”
மருத்துவரின் பதிலில் உறைந்தே போனான் இஷான்…
“யெஸ் மிஸ்டர் இஷான்… கூரான ஆயுதம் கொண்டு அவரை தாக்கியிருக்குறாங்க… அது ஆழமா அவரோட இதயம் வரைக்கும் பாதிச்சிருக்கு… அதனால அவருக்கு நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருக்கு… இப்போதைக்கு எங்களால எதுவும் சொல்ல முடியாது…” என அவர் சொல்லி முடித்ததும், பட்டென்று மயங்கி சரிந்தாள் சதி…
அவள் முகத்தில் நீர் அடித்து எழுப்பியதும், விழித்தவள், எதிரே இருந்த பிரம்மரிஷியிடம் கெஞ்சினாள்…
“தாத்தா… அவருக்கு எதுவும் ஆக்க்கூடாது… எதாவது செய்ய சொல்லுங்க டாக்டரை… ப்ளீஸ்…”
“எங்க வேலையை நாங்கமேற்கொண்டு ப்ரொசீட் பண்ண, எங்களுக்கு இந்த பேப்பரில் சைன் வேணும்…” என்றவர், “இவங்க பேஷண்டுக்கு என்ன உறவு வேணும்?...” என இஷானிடம் சதியை கை காட்டி கேட்க, அவன் பதில் சொல்லும் முன்னமே,
“நான் அவரோட சரிபாதி… எங்க சைன் போடணும்… சொல்லுங்க…” என்றவள், அவர் வைத்திருந்த சில பேப்பர்களை பிடுங்கி, தனது பெயரின் பின் அவனது பெயரையும் எழுதி அவரிடம் கொடுக்க, அவர் அதனை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்…
“தாத்தா… என் உயிர் எனக்கு வேணும்… எனக்கு வேணும்… அவருக்கு இப்படி எதுவும் ஆகுறதுக்குத்தான் என்னை எல்லா வழிபாடும் செய்ய சொன்னீங்களா?... சொல்லுங்க… நான் செஞ்ச வழிபாடெல்லாம் தூங்குதா?... என் உயிரை எனக்கு திருப்பி தர சொல்லுங்க தாத்தா… தர சொல்லுங்க…” என கதறியவள், பிரம்மரிஷியின் கால்களிலேயே விழுந்து விட,
இஷான் தங்கையை தூக்க முயன்றான்… கண்ணசைவில் அவனைத் தடுத்தவர், அவளை எழ சொன்னார்…
அவள் அப்படியே கிடக்க, அவளை தூக்கி நிறுத்தி, “நீ செஞ்ச எல்லாமே அவன் உயிரை காப்பாத்தும்… அது எல்லாத்தையும் விட, உங்கிட்ட ஒரு மந்திரம் சொன்னேனே அது உனக்கு நினைவிருக்கா?...” எனக் கேட்டதும்,
“எப்படி தாத்தா மறப்பேன்… தினமும் நீங்க சொல்ல சொன்னீங்களே… ஆனா இன்னைக்கு… நான் அதை சொல்லத் தவறிட்டேன் தாத்தா… அதனால தான் அவருக்கு இப்படி ஆகிட்டா?...”
“அவனுக்கு இன்னைக்கு இது நடக்கணும்னு விதி… அதை மாத்த நம்மால முடியாது… ஆனா சிவாவோட ஆயுள் ஒருநாளும் குறையாது சதி…”
“எவ்வளவு ரத்தம் தெரியுமா தாத்தா?... என்னால அவரை அப்படி பார்க்கவே முடியலை தாத்தா…. எனக்கு என் உயிர் வேணும் தாத்தா… எங்கிட்ட கொடுத்திடுங்க…”
“உன் உயிர் என்னைக்கும் உன்னைவிட்டு பிரியாது சதி…”
“அப்போ அவரை எங்கிட்ட பேச சொல்லுங்க… கண்ணைத்திறந்து என்னைப் பார்க்க சொல்லுங்க தாத்தா…”
அப்போது இதய ஸ்பெஷலிஸ்ட் ஒருவர் ஜெய்யின் அறைக்குள் செல்ல முயல, இஷான் அவரின் அருகில் இருந்து பேசிக்கொண்டிருந்த அந்த மருத்துவரிடம்,
“ஜெய்க்கு என்னாச்சு சார்?... அவன் எப்படி இருக்குறான்?...” எனக் கேட்க,
“அவரை செக் பண்ணதுல, அவரோட இதய சுவர்கள் வரைக்கும் பாதிப்படைஞ்சிருக்கு… கண்டிஷன் ரொம்பவே கிரிட்டிக்கல் தான்… அதுக்குத்தான் ஸ்பெஷலிஸ்ட் வரவச்சிருக்கோம்… பார்க்கலாம்… எங்களால முடிஞ்ச அளவு முயற்சி செய்யுறோம்… அதுக்கும் மேல கடவுளை வேண்டிக்கோங்க…” என சொல்லிவிட்டு அந்த மருத்துவர் இதய ஸ்பெஷலிஸ்டுடன் ஜெய் இருந்த அறைக்குள் சென்றுவிட,
“ம்ருத்யூ…………………………” என கதறினாள் சதி…
“சதி… அவனுக்கு எதுவும் இல்லை… அதான் டாக்டர் சொன்னார்ல… முயற்சி செய்வோம்னு…”
“இல்ல அண்ணா…. அவ…………….ரு…..க்……..கு……”
“ஒன்னும் ஆகாதுடா… கவலைப்படாத…” என தங்கையை சமாதானப்படுத்தினாலும் அவனுக்குள்ளும் பதைபதைப்பு இருந்து கொண்டே தான் இருந்தது…
“சதி… அந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பி முழு மனசோட சொல்லு… உன் ம்ருத்யூ உனக்கு கிடைப்பான் பத்திரமா… சிவாக்கு எதுவும் ஆகாது…” என பிரம்மரிஷி ஒரு அழுத்ததோடு சொல்ல,
அங்கேயே தரையிலேயே அமர்ந்து அந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தாள் மெல்ல விழி மூடி…