“உனக்கெதுவும் ஆகலல்லடா… கையில ரொம்ப அடியாம்மா?... எங்க காட்டு…” என தங்கையின் கையைப் பிடித்து அவன் பார்க்க, அதில் இருந்த காயம் அவனை வருத்தியது…
“ரொமப வலிச்சதாம்மா?... வா டாக்டர்கிட்ட காட்டி மருந்து போட்டுக்கலாம்…” என தங்கையிடம் அவன் அக்கறையுடன் விசாரித்து விட்டு சொல்ல, அவள் சிரித்தாள்…
“இன்னைக்கு பட்ட வலிக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல அண்ணா…” என்றவளுக்கு பட்டென கண்கள் கலங்க, இஷான் தங்கையின் கண்ணீர் கண்டு கலங்கினான்…
“எவ்வளவு தைரியம் அவனுக்கு?... எல்லாம் அந்த குமாரால வந்தது தான?... அவனை இப்போ போய் கவனிச்சிக்குறேன்…” என இஷான் பொறும,
“அண்ணா அவன் பேரு குமாரா?...” என அவள் யோசிக்க,
“ஆமாடா… இப்போதான் எனக்கும் நினைவு வருது… அன்னைக்கு காலேஜில் உனக்கு அடிபட பார்த்துச்சுல்ல, கடவுள் புண்ணியத்துல உனக்கு எதுவும் ஆகலை… தேங்க்காட்… அது கூட அந்த குமாரோட வேலைதாண்டா… ஆனா அது எங்க இரண்டு பேருக்கும் வச்ச குறி…” என்றான் அவனும்…
குமாரா?... அவனை பைரவ் என்று தானே ஜெய் கூப்பிட்டார்… என யோசித்துக்கொண்டிருந்தவளை இஷானின் குரல் கலைத்தது…
“எதுக்குடா கட்டு கூட போடாம இருக்குற?... வா டாக்டர் ரூமுக்கு போகலாம்… அப்புறம் போய் நீ ஜெய்யைப் பாரு…”
“இல்ல அண்ணா நான் கட்டு போட்டிருந்தேன்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த களேபரத்துல அது கீழே விழுந்துட்டு போல…”
“பாரு… போலீஸ்காரனா இருந்துட்டு கேட்க வேண்டிய கேள்வியையே நான் மறந்துட்டேன்… ஜெய்க்கு எப்படிடா இப்படி ஆச்சு?... என்ன நடந்துச்சுடா?... அண்ணங்கிட்ட சொல்லு…”
அவன் கேட்டதும், அவளுக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவு வர, அவள் உடல் நடுங்கியது…
“சொல்லுடா சதி… என்னாச்சுடா?...” என அவன் சற்றே பதட்டத்துடன் கேட்டுக்கொண்டிருக்கையில், அதுவரை அமைதியாக இருந்த பிரம்மரிஷி வாய் திறந்தார்…
“இஷான்… போதும்… இப்போ இதைப்பத்தி பேச வேண்டாம்… அவகிட்ட கேட்டு அவளை மறுபடியும் கஷ்டப்படுத்த வேண்டாம் நாமும்…” என பேரனிடம் அவன் கூற,
“இல்ல தாத்தா… இதை இப்படியே விட முடியாது…” என்றவனின் வாயை அடைத்தார் பிரம்மரிஷி தன் பதில் கொண்டு…
“இதை விடணும்னு நான் சொல்லலை… இப்போ விட்டுட்டுன்னு தான் சொல்லுறேன்… புரியுதா?...”
அவரின் அழுத்தம் நிறைந்த பதில் அவனது அடுத்து அதுபற்றி பேச விடாமல் செய்தது…
“சரி தாத்தா…” என்றவன், தங்கையிடம்,
“இன்னைக்கு காலையில ஏண்டா ஒருமாதிரி இருந்த?... உன்னைப் பார்த்துட்டு ஒன்னுமே ஓடலை ஒரு செகண்ட் எனக்கு…”
“அது ஒன்னுமில்லண்ணா… ஜெய்கிட்ட சொன்னேன் என் காதலை… அவர் மறுத்துட்டார்… அந்த விரக்தியில தான் அப்படி இருந்திருப்பேன்…”
அவனிடம் அழகாக பேசி சமாளித்தவள், பிரம்மரிஷியைப் பார்க்க, அவர் விழி மூடி இமைத்தார்…
“எது மறுத்துட்டானா?... இன்னைக்குத்தான் சொல்லவும் செஞ்சியா?... என்ன சதி சொல்லுற?... நீ சொல்லுறதை என்னால நம்ப முடியலை…”
ஆயிரம் தான் அவனை ஏமாற்ற அவள் பிசிறு இல்லாமல் பேசி சமாளித்தாலும் போலீஸ்காரனின் மூளை கணக்குப் போடாதா ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று…
“நான் எதுக்கு அண்ணா உங்கிட்ட பொய் சொல்லப்போறேன்… அவர் மறுக்க தான் செஞ்சார்… வேணும்னா நீ அவர்கிட்டயே கேட்டுப்பாரு… அவர் இல்லன்னு சொல்லுறாரான்னு நானும் பார்க்குறேன்…”
அது உண்மைதானே… ஜெய் அவளது காதலை நிராகரித்ததும் நிஜம் தானே… எனில் அவள் பொய் சொல்லவில்லையே தமையனிடத்தில்…
அந்த துணிவு அவளைப் பேச வைக்க, அவன் யோசிக்க ஆரம்பித்திருந்தான்…
“என்ன அண்ணா யோசிக்குற?...”
“எதுமில்லடா… அவன் உன்னை விரும்பாமலா அந்த குமாரை அன்னைக்கு அந்த அடி அடிச்சு ஹாஸ்பிட்டலில் படுக்க போட்டிருக்கான்?...”
“என்ன அண்ணா சொல்லுற?... எனக்கு புரியலை…”
“இல்ல சதி… அன்னைக்கு காலேஜில் உனக்கு அடிபட இருந்துச்சுல்ல, அப்போ ஜெய் கோபமா போய், அந்த குமாரை அடி வெளுத்துட்டான்… கமிஷனர் கூட ஜெய் மேல கோபப்பட்டார்… அப்புறம் அந்த குமாரை ஹாஸ்பிட்டலில் இருந்து ஜெயிலுக்கு மாத்துறதுக்கு கூட பர்மிஷன் வாங்கினான் கமிஷனர் கிட்ட… எதுக்கு இவன் இவ்வளவு அவசரப்படுறான் அந்த குமார் கேஸ்லன்னு நான் சந்தேகப்பட்டேன்… பட் இப்போ ப்ரூவ் ஆகிட்டு, அவனாலயும் அவனோட ஆட்களாலயும் உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு தான் அவன் இவ்வளவு அவசரப்பட்டிருக்கான்… அந்த குமாரை அப்படி அடிச்சதுக்கு கூட அவன் உன் மேல வச்சிருக்குற ஆழமான காதல் தான் காரணமா இருக்கும்… ஆனா அப்படி இருக்குறவன், எதுக்காக உங்கிட்ட தன்னோட காதலை மறைக்கணும்???... அதுதான் எனக்குப் புரியலை…”
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு ஜெய்யின் மேல் இருந்த காதல் மேலும் பெருகியது அளவில்லாது…