“சதி… சீக்கிரம்டா… என்ன பண்ணுற?...”
இஷான் பொறுமை இல்லாது கத்திக்கொண்டிருந்தான் சதியின் அறை வாசலில் நின்றுகொண்டு…
“உங்கிட்ட தெரியாத்தனமா சொல்லித்தொலைஞ்சுட்டேன் போல… அய்யோ.. அய்யோ…. ஹ்ம்ம்…” என வாய்விட்டு புலம்பிக்கொண்டு நின்றுகொண்டிருந்தவனை தைஜூவின் குரல் கலைத்தது….
“என்ன இஷான்… இங்க என்ன பண்ணுறீங்க?...”
கேள்வி வந்த திசையில் திரும்பி பார்த்தவனுக்கு சில்லென்ற பனிச்சாரல் முகத்தில் வந்து மோதியது போல் இருந்தது…
ஏனெனில் அங்கே அவனது இன்னாள் காதலி, நாளைய மனைவி தைஜூ அழகான சல்வாரில் அம்சமாக வந்திருந்தாள்…
“வாவ்… தைஜூ… செமயா இருக்குற?...” என்றபடி குதூகலித்தவன், அவள் வெட்கப்பட்டு சிரிக்கவும், அவள் அழகில் மயங்கியபடி
“உன்னை இப்படியே…” என்றவன் அவளருகில் வேகமாக வந்தான்…
என்ன செய்யப்போகிறான் என யோசிப்பதற்குள், அவளை அலேக்காக தூக்கி சுற்றினான் இஷான்…
“இஷான்…. விடுங்க… ப்ளீஸ்…” என அவள் வெட்கமும் சிரிப்புமாய் சொல்ல, அவன் மேலும் மயங்கினான் அவளிடத்தில்…
“போ தைஜூ… மாட்டேன்…. இப்படியே இருக்கலாம் போல இருக்கு…” என சிறுபிள்ளையாய் சொன்னவனின் கேசத்தை கலைத்து அவள் விளையாட, அவன் கைகளிலிருந்து அவளை தரையிறக்க மறுத்தான்…
இருவரும் தன்னிலை மறந்தவர்களாய் எத்தனை மணத்துளிகள் அவ்வாறு நின்றிருந்தனரோ, திடீரென கேட்ட கைத்தட்டல் ஒலியில் தைஜூவை சட்டென கீழே இறக்கிவிட்டான் இஷான்…
“வாரேவா… அண்ணா… கலக்கிட்ட போ… இந்த பூனையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சிட்டு நீ பண்ணுற வேலை இருக்கே…” என சதி கைகட்டி தோரணையாய் வாசல் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சொல்ல, இருவருமே திகைத்தனர்…
“சதி… நீ…..” என திணறிவன், பின் சுதாரித்துக்கொண்டு, “வந்துட்டீயா?... வா வா… போகலாம்… லேட் ஆச்சு…” என வேகமாக முன்னே செல்ல இருந்தவனை பிடித்து நிறுத்தினாள் சதி…
“டேய் அண்ணா எங்க ஓடப்பார்க்குற?.. நில்லு… நில்லு….”
“இல்ல சதி… லேட் ஆச்சு… வா போகலாம்… வந்து மிச்சத்த பேசிக்கலாம்…”
“இன்னமும் பேசவே ஆரம்பிக்கலை… அதுக்குள்ள மிச்சம்னு சொல்லுற?...”
வரிந்து கட்டாத குறையாக சண்டைக்கு தயாராவளின் அருகில் வந்து கெஞ்சினாள் தைஜூ…
“சதி விடுடி… ப்ளீஸ்… வா… போகலாம்….”
“நீ என்னடி இவனுக்கு சப்போர்ட்டா?...
“அப்படி இல்லடி சதி… அவர்கிட்ட வந்துகூட சண்டை போட்டுக்கலாம்… இப்போ நேரமாச்சுல்ல… ஜெய் அண்ணா பாவம்ல, அவர் அப்பவே கிளம்பிட்டேன்னு போன் பண்ணினார்…”
ஜெய்யின் பெயர் எடுத்தாலே சதி அடுத்து எதையும் யோசிக்கமாட்டாள் என அறிந்தே தைஜூவும் சதியிடத்தில் பேச,
“அப்பவே கிளம்பிட்டாரா?...” என கண்களை விரித்தவள்,
“லூசு அண்ணா… அதை அப்பவே சொல்லுறதுக்கு என்னடா உனக்கு?... வா போகலாம்…” என முன்னே செல்ல,
இஷானும் தைஜூவும் ஒருவருக்கொருவர் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ள, போய்க்கொண்டிருந்த சதி சட்டென திரும்பி இருவரையும் பார்த்தாள்…
“என்னை டைவர்ட் பண்ணி விட்டுட்டு நீங்க தப்பிச்சிடலாம்னு பார்க்குறீங்களா?...மிஸ்டர் இஷான் அவர்களே… நான் மிஸஸ் ஜெய்…. சோ எங்கிட்ட உங்க தில்லாலங்கடி வேலை எதுவும் செல்லுபடியாகாது… புரியுதா?...” என கேட்க,
இஷானோ சிரித்தபடி சரி என்றான்…
தைஜூவோ, “உன்னை கட்டிகிட்டு அண்ணா என்ன பாடுபடப்போறாரோ… தெரியலை… வாயாடி… வா… போகலாம்…” என அவளின் கைப்பிடித்து இழுத்து சென்றாள்…
மூவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைய, அங்கே ஜெய் இஷானிற்காகவும் தைஜூவிற்காகவும் காத்திருந்தான்…
“ஜெய்…” என குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தவன், இமைக்கவும் மறந்து தான் போனான்…
“மச்சான்… சாரிடா… கொஞ்சம் லேட் ஆகிட்டு… ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா?...” என்றவன் சகஜமாக அவனருகில் அமர, அவனுக்கு நேர் எதிரே வந்தமர்ந்தாள் சதி… சதியின் அருகில் இஷானைப் பார்த்தபடி அவனுக்கு எதிராக தைஜூவும் அமர, ஜெய் இஷானைப் பார்த்தான்…
அவனது பார்வைக்குண்டான அர்த்தம் இஷானுக்கு புரியாமல் இல்லை…