“ஒரு கேஸ் சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டோம்னு உன் தங்கச்சிகிட்ட சொன்னேன்… அவ என்னடான்னா ட்ரீட் கேட்குறா?...” என ஜெய்யிடம் இஷான் சொல்லியபோது, “அதுக்கென்னடா டீரீட்தான கொடு…” என ஜெய்யும் சொல்ல, “டேய்… அவ நம்ம ரெண்டு பேர் கிட்டயும் கேட்குறாடா…” என்றான் இஷான்…
“நோ ப்ராப்ளம்… என் தங்கச்சிக்கு இல்லாத ட்ரீட்டா?... டைம் மட்டும் சொல்லு நான் வந்துடுறேன்…”
ஜெய்யின் வார்த்தையே அவனது சம்மதத்தை தெரிவிக்க, இஷான் அவனிடம் ஒரு ஹோட்டலின் பெயரை சொல்லி வர சொல்ல, அவனும் சரி என்றான்…
சதி வருவதாக எந்த ஒரு தகவலும் இஷான் ஜெய்யிடத்தில் அப்போதும் சொல்லவில்லை… இப்போது கொஞ்ச நேரத்திற்கு முன்னும் சொல்லவில்லை…
“இதுதான் தைஜூ கேட்ட ட்ரீட்டா?...” என முறைத்த ஜெய்யை தைஜூ சமாதானப்படுத்தினாள்…
“அண்ணா… வீட்டுல தனியா இவர் கூட விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க… சதியும் வரான்னு சொன்னப்பிறகு தான் அனுப்பி வச்சாங்க….அதான் கொஞ்சம் லேட் ஆகிட்டுன்னா… நீங்க அவரை கோச்சிக்காதீங்க…” என ஜெய்யின் கோபம் லேட் ஆனதில் தான் என சதியை நம்ப வைக்க முயன்று அவள் பேச,
“பரவாயில்லைம்மா… சரி சொல்லு உனக்கு என்ன வேணும்… நான் வாங்கித் தரேன்…” என்றான் ஜெய் அவளிடம் சிரித்தவண்ணம்… இஷானின் மேல் உள்ள கோபத்தை எல்லாம் மறைத்துக்கொண்டு….
“”அடடா… தங்கச்சி மேல என்ன ஒரு பாசம்?.. விட்டா அடுத்த பாசமலர் படமே எடுத்துடுவாங்க போலயே இவங்க ரெண்டு பேரும்….” என இஷானும், சதியும் ஒரு சேர நினைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முகம் பார்க்க, இருவரின் முகத்திலும் சிரிப்பு ஒட்டிக்கொண்டது….
அந்த நேரம் சரியாக இஷான் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆள் வந்து,
“சார்… ஃபேமிலியா நாலு பேர் வந்திருக்காங்க…. குழந்தைங்க வேற… அதனால நீங்க டேபிள் மாறி உட்கார்ந்துக்குறீங்களா?...” எனக் கேட்க, முதலில் முடியாது என்று மறுத்த இஷான், குழந்தைகள் வேறு இருக்கிறார்கள் எனவும் விட்டுக்கொடுப்பது போல் நடித்து எழ, அவனைத் தொடர்ந்து அனைவரும் எழுந்தனர்…
ஜெய் முன்னே வேகமாக செல்ல, இஷான் அவனை ஓடிச்சென்று தடுத்தான்…
“மச்சான் எங்க போற?..”
“வேற ஹோட்டலுக்குத்தான்…”
“என்னடா விளையாடுறீயா?... இனி இன்னொரு ஹோட்டலுக்கு போய், சாப்பிட்டு வீட்டுக்கு போனா நேரம் ஆகிடும்…. அட்ஜஸ்ட் பண்ணுறதுன்னு ஆகிப்போச்சு… முழுசாவே அட்ஜஸ்ட் பண்ணிடுவோம்…” என்ற இஷான்,
“சரிடா மச்சான்… வா… நானும் நீயும் அந்த டேபிளுக்கு போவோம்… சதியும் தைஜூவும் அந்த டேபிளுக்கு போகட்டும்...” என சொல்ல, ஜெய் அவன் முகத்தையேப் பார்த்தான்…
“ஆசை ஆசையா கூட்டிட்டு வந்து என்ன பிரயோஜனம்?.. நேருக்கு நேரா கூட உட்கார்ந்து பேச முடியலை… ஹ்ம்ம்… நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்…” என நொந்து போனவனாய் முகத்தை வாடியபடி இஷான் தொங்கவிட, ஜெய் அவனின் கைப்பிடித்து இழுத்து போய், தற்போது அவர்களுக்கு ஒதுக்கியிருக்கும் சேரில் உட்காரவைத்துவிட்டு, தைஜூவை அழைத்தான்….
“என்ன அண்ணா கூப்பிட்டீங்களா?...” என வந்தவளை இஷானுக்கு எதிரே அமர சொல்ல,
“அய்யோ… அண்ணா நான் மட்டும் எப்படி?...”” என முழித்தாள் தைஜூ….
“அவன் உங்கூட நேரம் செலவழிக்கணும்னு ஆசைப்படுறான்… அதனால நீ அங்க போய் அவங்கூட பேசிட்டிரு…” என அவன் எடுத்து கூற,
“அதெல்லாம் சரிதான் அண்ணா… ஆனா சதி பாவம் இல்லையா?.. அவ பாவம் தனியா என்ன பண்ணுவா?...” என சதிக்கு ஆதரவாக தைஜூ பேச,
“ஒன்னும் பிரச்சினை இல்லை… நீ போ… நாங்க மேனேஜ் செய்துப்போம்… நானும் சதியும் அங்க போய் உட்கார்ந்துக்குறோம்….” என தைஜூவை போக சொல்லிவிட்டு அவன் திரும்பி நடக்க, சதி அவனின் பின்னே சென்றாள்…
ஜெய்யின் முன்னே அமர்ந்த சதி அவன் முகத்தையே இமைக்காது பார்க்க, அவன் தவியாய் தவித்தான்..
எவ்வளவோ அவளது பார்வையை பார்க்காமல் இருக்க முயற்சி செய்தாலும் அது தோல்வியில் போய் முடிவதை அவனாலே தவிர்க்கவே முடியவில்லை கொஞ்சமும்…
எதிரே அமர்ந்திருந்த போதும் அவனது பார்வைக்காக அவள் தவிக்க தான் செய்தாள்…
அது புரிந்தும் அவன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, அவள் அந்த ஆட்டத்தை கலைக்க முடிவு செய்தாள்….
அதற்கு முதல் கட்டமாக, அவனை வம்பிழுக்க ஆரம்பித்தாள் அவள்..
“நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்குறேன்...” என சொல்லிக்கொண்டே தன் பர்ஸை திறந்து அதில் இருந்த கண்ணாடியில் அவள் பார்த்துக்கொள்ள, அவன் அவளை புரியாதவாறு பார்த்தான்…
“நல்லாதான இருக்குறேன்…” என்றவள் இப்போதும் தன் முகத்தைப் பார்த்துக்கொள்ள,
“உன்னை யாரு இப்போ நல்லா இல்லன்னு சொன்னது?...” எனக் கேட்டான் அவனும்…
அவனை பேச வைத்துவிட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் பிரதிபலிக்க, அது அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது…
அதில் தடுமாறியவன், மீண்டும் தன் பார்வையை விலக்கி வேறெங்கோ பார்க்க,
“வேற யாரு சொல்லணும்?.. அதான் உங்க வெறிச்ச பார்வையே சொல்லுதே… நான் நல்லா இல்லாததால தான என்னைப் பார்க்க மாட்டிக்குறீங்க?...” என முகத்தை லேசாக சுளித்து இதழ் பிதுக்கி அவள் சொல்ல.
அவள் பக்கம் சட்டென தனது பார்வையை திருப்பினான் ஜெய்…
{kunena_discuss:1001}