“எனக்காக ஃபீல் செய்து ஸாரிலாம் சொல்ல வேண்டாம்! நான் சொல்ல வேண்டிய ஸாரி பாக்கிக்கு இது சரியா போச்சு!”, என்று கணக்கு போட்டு அவனுடன் சமாதானம் உடன்படிக்கை போட...
வண்டியை நிறுத்திய கையோடு வேக வேகமாக ஹெல்மட்டை கழட்டிக் கொண்டிருந்தவனோ..
“இன்னும் நாலு அப்பு அப்ப வைக்காதே! இறங்கித் தொலை!”
என்று எரிமலையாய் வெடித்து சிதறினான். இவளின் இத்தனை நேர அழுகைக்கு தன்னை காரணம் சொல்வாள் என்று துளி கூட எதிர்பார்த்திருக்கவில்லை அவன்!
‘அப்படி என்ன நான் செய்துட்டேன் இவளுக்கு? இவ மட்டும் அந்த நேரம் அந்த பொறுக்கி பக்கத்தில் போயிருந்தா அத்தனை பேரும் இவளை சுத்தியிருப்பானுங்க! தப்பா நடந்தவனுக்கு கூட பாவம் பார்க்க தெரியுது! ஒரு நல்லதுக்கு செய்தா ஏதோ கொலை செய்தது போல குத்திக் காட்டி ஒப்பாரி வைக்கிறா!’
என்று அவள் சொன்னது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது வேதனைப் படுத்த... வார்த்தைகளிலும் அத்தனை காட்டம்!
அவன் தாங்குவான் என்று எதிர்பார்த்தவளுக்கு.. அவனின் சீற்றம்... பெரிய ஏமாற்றமாகி அழுகை மேலும் பீறிட... “ஓஓஓ” வென்று அழுகையுடன் இறங்க..
அவள் பக்கம் கூட திரும்பாமல்...
“உள்ளே வந்தும் அழுது ஸீன் போட்டு என்னைக் கேவலப் படுத்தாதே!”
என்று பொரிந்து தள்ளி விட்டு
”இதுக்கு தான் இவ முகத்திலே முழிக்கக் கூடாது!!”, என்று முணுமுணுத்த படி அங்கிருந்த சிறு துணிக்கடை பொட்டீக்கிற்குள் நுழைந்தவன் கண்ணெதிரே டிஸ்பிளேயில் இருந்த பச்சை நிற நெடிய குர்தாவை எடுத்து பில் போட்டு விட்டு.... அதைக் கொடுப்பதற்கு அவளைத் தேட...
அவளோ உள்ளே வராமல்... அந்த வாயிலில் இருந்த கதவில் சாய்ந்தவாறு கண்ணீரை அடக்க முயன்று கொண்டிருந்தாள்! அவன் தான் கடைக்குள்ளே வந்து அழுகக் கூடாதென்று இத்தனை கடுமையாக சொல்லி விட்டானே!
காற்றில் களைந்து போயிருந்த அவள் ஃக்ராப் தலையை லேசாக சரித்து.. களையிழந்த முகமாய்.. கண்ணீர் கோடு ஒரு கன்னத்தில் ஓட... மறு கன்னத்தை முழுவதுமாக ஆக்கிரமித்த கரம் கப்பல் கவிழ்ந்தது போல சோகத்தை பூச..... கண்கள் மட்டும் இவனை விடாமல்.. இவன் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்து நிற்க...
அவள் வெளியே நிற்பது தெரிந்து அவள் அருகே செல்ல செல்ல....அவள் நின்ற அந்த தோரணையில் அத்தனை நேரம் அலை அலையாய் அவனை ஆர்பரித்த கோபமெல்லாம் வடிந்தே போக...
அவள் பார்வை நேர்கோட்டில் தன் பார்வையை நிறுத்தி...
“அழாதேன்னு சொல்ல சொல்ல கேட்கலை... இப்ப பாரு....”
“முகமெல்லாம் வீங்கி போய்... “, என்று அவள் முகத்தை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தவனின் பார்வை அழுது அழுது சிவந்த கண்களில் கலந்ததும்.. அதில் ஒட்டியிருந்த ஈரத்தில் மூழ்கியவனாக...
“....உன்னை இப்படி பார்க்கவே முடியலை!”, என்று உணர்ந்து சொன்னவனின் குரல் இயல்புக்கு மீறி மெலிந்து ஒலித்தது..
அந்த ஆழ்ந்த குரலும்.. கனிந்த அவன் பார்வையுமே மயிலிறகின் வருடலை அவளுக்கு கொடுக்க...
தன் பார்வையை பிரித்துக் கொள்ளாது அவனையே பார்த்தவளுக்கு கண்கள் இன்னும் கலங்கியது! இந்த அனுசரனையான பேச்சைத் தானே அவள் மனம் எதிர்பார்த்து இத்தனை நேரம் அழுதது!!!
அவள் கண்கள் மீண்டும் பனிப்பதைக் கண்டதும்.. ‘ஹய்யோடா.. இவ நிறுத்த மாட்டா போலவே!’, என்று உண்டான பயத்தை மறைத்தவனாக..
“ஹே... போதும் அழுதது! முகத்தை கழுவிட்டு சீக்கிரமா வா! உங்க அம்மாகிட்ட பேசணும்! அழுதுகிட்டே பேசினா பயந்துடுவாங்க! அதோ அங்கே தான் பாத்ரூம்!”
என்று அவளை அங்கிருந்து விரட்டாத குறையாக சொன்னவாறு பாத்ரூமையும் கை காட்டி விட்டு..
“அப்படியே இதையும் அங்கேயே மாத்திக்கோ! ஃபிட்டிங் ரூம்லாம் ரிஸ்க்!”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக மெலிதாக சொல்லிக் கொண்டே குர்தாவைக் கொடுக்க...
அத்தனை நேரம் கன்னத்தை தாங்கிப் பிடித்திருந்த கரத்தை அதை வாங்குவதற்காக எடுத்த பொழுது தான்... இவனுக்கு அவள் கன்னமும்.. அதில் இவன் தன் உச்சபட்ச சீற்றத்தின் தாக்கமும் கண்ணில் பட்டது! ஆம், அவன் கைத்தடம் அப்படியே பதிந்திருந்தது! கூடவே அந்த இதழின் ஓரத்திலும் மெல்லிய கீறல்!