(Reading time: 13 - 25 minutes)

வளிடம் பதிலில்லை. பர்ஸில் இருந்த டாலர்களைக் கண்ணுற்ற அவர் டாக்ஸியில் ஏறுமாறு டாக்ஸியின் கதவைத் திறந்தார். அந்த இடத்தை விட்டு சென்றால் போதும், இல்லையென்றால் அந்த போலீசிடம் மறுபடியும் மாட்டிக்கொள்வோம் என பயந்த அமேலியா, தன் தந்தையின் வயதையொத்த அந்த முதிய டிரைவரை சற்று மிரண்ட விழிகளோடு நோக்கியவாறு டாக்ஸியில் ஏறினாள்.  டாக்ஸி அங்கிருந்து கிளம்பியது. அமேலியா படபடப்புடனே பயணம் செய்தாள்.

பிறந்ததில் இருந்து எங்கு செல்வதாயினும் தந்தை அல்லது தாயின் துணையோடு சென்று பழக்கப்பட்டவள் இன்று எந்தத் துணையும் இன்றி எங்கு செல்கிறோம் என்ற புரிதலுமின்றி விதி போடும் பாதையில் பயணம் செய்கிறாள்.

"உங்க ஹாலோவீன் மேக்கப் நல்லா இருக்கு" என்றார் டிரைவர்.

அமேலியா அமைதியாக சிந்தித்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கு சிந்திக்க நேரமிருந்தது. எதை எதையோ சிந்தித்தாள். நடக்கவே வாய்ப்பில்லாத நிகழ்ச்சிகளைப் பற்றி சிந்தித்தாள். சிந்தித்தல் என்பதை விட கற்பனை செய்து பார்த்தாள் எனலாம்.

கடவுள் தூதர்களை அனுப்பி தன்னைக் காப்பாற்றி தன் பெற்றோரிடம் சேர்ப்பதைப் போல கற்பனை செய்து பார்த்தாள். அந்த கற்பனையில் தான் எவ்வளவு ஆனந்தம். இரண்டு நிமிடமே அந்த கற்பனை நிலைத்தாலும் அந்த குறுகிய நேரத்தில் தன் பெற்றோருடன் இருந்தது போன்ற மகிழ்ச்சி அவள் உள்ளத்தில் பொங்கியது.

ஜெசிகா மிகவும் களைப்போடு பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். அவளின் இமைகள் அவளையறியாமல் அவ்வப்போது மூடிக் கொண்டன. சில நாட்களாக  சரியான உறக்கமில்லாமல் இன்று நிம்மதியாக உறங்கவேண்டும் என விரும்பினாள். அவள் பணி புரியும் விளம்பரக் கம்பனியில் கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வேலைப் பளுவால் தூக்கத்தைத் தொலைத்தாள். இன்றோடு அந்தப் பணி முடிந்து இரண்டு நாட்கள் விடுமுறை . இதை விட வேறு என்ன வேண்டும் அவளுக்கு. ஆழ்ந்த நிம்மதிப் பெருமூச்சு அவளையுமறியாமல் வெளிவந்தது.

பேருந்தின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி தன் கவலையை மறந்துகொண்டிருந்தாள். பலதரப்பட்ட மனிதர்கள் கண்களில் தோன்றி மறைந்தார்கள். எல்லோரும் எதையோ தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள் என எண்ணினாள். காதல் ஜோடி ஒன்று சாலையோரம் நடந்து செல்வதைக் கண்டாள். அந்த ஜோடிகளின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்.

இந்த சந்தோசம் எல்லாம் கொஞ்ச காலம் தான். எண்ணற்ற ஆசைகளோடு காதல் தொடங்கும். ஆனால், போகப் போக அந்த ஆசைகள் வேதனைகளாக மாறி கசப்பான வாழ்வைக் கொடுத்துவிடும் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள் அவள். 

பேருந்து நின்றது.  இறங்கி தன் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்ஜெசிகா. குளிரிலிருந்து தன்னைக் காக்க அணிந்திருந்த தடித்த ஆடையையும் மீறி குளிர் ஊசியாய் அவளைக் குத்தியது.  ஆடையை இறுகப் பிடித்துக்கொண்டு வேகமாய் நடந்து சென்றாள்.

ஜெஸிகா தன் காதலனைப் பிரிந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஓடிப் போனது.  அவளின் காதலன் கப்பலில் வேலை செய்பவன். அவன் தரையில் இருப்பதை விட தண்ணீரில் இருப்பது தான் அதிகம், ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் காதல் வாழ்க்கை நாளைடைவில் கசந்து அவர்களுக்குள் இருந்த அன்பு குறையத் தொடங்கியது. அதற்கு அவனுடைய பணியும் ஒரு காரணம். பெரும்பாலான நாட்களை அவன் கப்பலிலேயே  கழித்துவிடுவதால்.ஜெசிகா தனிமைப்படுத்தப்பட்டாள். அதனால்,  அவர்களுக்குள் சண்டை உருவானது. அதுவே  அவர்களின் பிரிவுக்கும் காரணமானது.

காதலனைப் பிரிந்த ஜெசிகா வேறொரு வீட்டை வாடகைக்கு  எடுத்து குடிபெயர்ந்தாள், ஆனால், இங்கே வேறு விதமான தொல்லை முளைத்தது. ஜெஸிகாவை ஒரு தலையாக விரும்பும் ஜான் என்பவன் அவளுடைய வீட்டிற்கு எதிர் வீட்டில் குடிவந்து அவளுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினான். வேண்டுமென்றே பாட்டு சப்தத்தை அதிகப்படுத்தி ஜெஸிகாவை தூங்கவிடாமல் செய்வது, நடுநிசியில் அவனே பாட்டுப் பாடி அவளை வெறுப்பேற்றுவது என அவன் செய்யும் தொந்தரவுகளால் நிம்மதியைத் தொலைத்தாள் ஜெசிகா.

அதனால், ஜெசிகா வீட்டிற்கு நேரம் கடந்து செல்லத் தொடங்கினாள். இருந்தும், ஜான் தொல்லை செய்வதை நிறுத்தவில்லை. இன்று அவளது பிறந்த நாள். ஜான் என்ன செய்யப்போகிறானோ என்ற ஒரு வித அச்சத்தில் தன் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் ஜெசிகா. 

ஜான் தன் வீட்டில் காணாமல் போன தன் பர்ஸை தேடிக்கொண்டிருந்தான், "எங்கே போச்சு அது? ச்சே!"  என்று தன்னைத்தானே நொந்தபடி அறையையே அலங்கோலமாய் மாற்றி பர்ஸை தேடிக்கொண்டிருந்தான். "அந்த பர்ஸ்ல தான கவிதை வச்சேன். இப்போ திடீர்னு இன்னொரு கவிதையை எப்படி தயார் செய்வேன். ஜெசிகா வேற வந்துருவாளே" என்று புலம்பியபடி வேறு வழியில்லாமல் ஒரு காகிதத்தை எடுத்து கட கட வென ஒரு அரைவேக்காட்டு கவிதையை எழுதி மலர்க் கொத்தில் சொருகி ஜெசிகாவின் கதவருகே வைத்துவிட்டு தன் வீட்டின் கதவை லேசாக திறந்து வைத்துக்கொண்டு ஜெசிகாவின் வருகையை எதிர்பார்த்திருந்தான்.  

ஜெசிகா வேகமாக நடந்து வருவது அவனுக்கு தெரிந்தது. உடனே, ஜான்  தன் வீட்டுக் கதவைத் தாழிடாமல் சற்று திறந்த நிலையிலேயே வைத்துவிட்டு பூனை போல் ஓடிச் சென்று வரவேற்பறையில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டான். ஜெசிகாவின் காலடி சப்தம் நின்றது . ஜான், என்ன நடக்கும் என்று மனதிற்குள்ளாகவே கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருந்தான். நிச்சயம் தன்னுடைய பரிசை அவள் ஏற்றுக்கொள்வாள். அதுவும், அந்தக் கவிதை நிச்சயம் அவளை பாதித்திருக்கும். எனது காதலை அவள் புரிந்துகொள்வாள் என எண்ணினான் ஜான்.

ஜானின் வீட்டின் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. ஜான் போர்வைக்குள் தன்னை மறைத்துக்கொண்டான். ஜெசிகா அறையினுள் நுழைந்து, போர்வையை சுருட்டிக்கொண்டு படுத்திருந்த ஜானை வெறுப்போடு நோக்கி, "மிஸ்டர் ஜான்" என தன்மையோடு அழைத்தாள்.  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.