ஆனால் அவன் அவளது தாடையைப் பிடித்து தன் முகம் பார்க்க நிமிர்த்தினான். வெட்கம் விழிகளில் வழிய, அது கன்னங்களில் தடம் பதித்து அவ்விடத்தை சிவக்க வைத்தது.
தன் தொடுகையில் முகம் சிவப்பவளை ரசித்து, “இங்கே எதுக்கு வந்தே?” என்று கேட்டான்.
“அது வந்து… அத்தை… அத்தை இருக்காங்களான்னு பாக்க வந்தேன். காணோம்” என்று திக்கித் திக்கி பதிலளித்தாள்.
ஊர் முழுவதும் வாயடித்தாலும், தன்னிடம் மட்டும் வார்த்தை வற்றிப்போய் நிற்கும் வானதியினைப் பார்த்து, “அத்தையை பார்க்க வந்துட்டு அத்தான் அறையில் என்ன வேலை?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் அருள்மொழி. அவனது குரல் அவனையும் மீறி ஹஸ்கியாக ஒலித்தது.
‘பொய்யைக் கூட ஒழுங்காக சொல்லாம மாட்டிக்கிட்டேனே. சமாளிடி’ என தன்னைத் தானே மத்துள் குட்டி, “இங்கே இருக்காங்களான்னு தேடிட்டு வந்தேன். இந்த நிலவறைக்குள் வரக்கூடாதுன்னு தெரியாம வந்துட்டேன் சாமி. நான் கிளம்புறேன். நீங்களே இருங்க உங்க ரூமில்” என்று கோபமாக உரைத்துக்கொண்டே அவனை விட்டு விலகி அறைக் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வானதி. அப்போது அவள் அருகே இருந்த மேசையில் அவளது கை பட்டு ஒரு ஃபோட்டோ ஃப்ரேம் கவிழ்ந்து கீழே விழுந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“சாரி அத்தான்…. தெரியாம தட்டி விட்டுட்டேன்” என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டே அதனை எடுக்கக் குனிந்தாள் வானதி. அவளை ஓவர்டேக் செய்து அதைப் பறித்தான் அருள்.
“அத்தான்… என்ன அது?” எனக் கேட்டு அருளிடம் வந்தாள் வானதி; முகத்தில், ‘என்னிடம் மறைக்கும் அளவுக்கு என்ன அது?’ என தெரிந்து கொள்ளும் அவா.
அருளின் பின்னால் மறைத்து வைத்திருந்த ஃபோட்டோவை எடுக்க அவனின் அருகே நின்றிருக்கிறோம் என்று கூட அறியாமல் அதன்மீதே கண்ணாக இருந்தாள் வானதி. ‘என்னிடம் காட்ட மறுப்பது என்னவாக இருக்கும்?’ என அறிந்துகொல்லும் ஆர்வம் அவளுக்கு.
அருளும் தன் கைகளை பின்னால் வளைத்து மேலே தூக்க, வானதியும் அதனைப் பறிக்க மேலே எம்பினாள். இருவரது இந்த விளையாட்டும் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே தாக்கு பிடித்தது. அதற்குள் அருளின் கவனம் வானதியின் முகத்திற்குச் செல்ல, அதனை ரசிக்க ஆரம்பித்தான் அவன்.
சில நொடிகளுக்குப் பின்னே வானதி அருளின் முயற்சியின்மையை உணர்ந்து அவனைப் பார்த்தாள். இருவரது கண்களும் சந்தித்து,
“இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது ஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆ”
என்று டூயட் பாட ஆயத்தமாக, உங்களுக்கு நான் வேற ஒரு சாங் போடுகிறேன் என்று யாரோ
“வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை சொல்லி போடி
வாடி”
என்று ஒலிபரப்ப விட்டார். திடீரென்று கேட்ட அந்த சத்தத்தில் விலகி நின்றனர் இருவரும்.
“Who is the disturbance?” என்று எண்ணிக்கொண்டே தன் சட்டைப் பையில் இருந்து அலைபேசியை எடுத்து டிஸ்ப்ளேயில் பெயரைப் பார்த்தவன் முகம் மலர்ந்தான்,
“ஹாய் குட்டிம்மா” என்று கூறி அறையின் நடுவில் இருந்த கட்டிலுக்கு சென்று அமர்ந்து, வானதியை அருகே வருமாறு சைகை செய்தான் அருள். வானதியும் அவன் கேட்டபடி அங்கே இருந்த நாற்காலியை அவன் அருகே போட்டு அமர்ந்தாள்.
அவளது செய்கையைக் கண்டு விழிகளை உயர்த்திப் பார்த்தே கைப்பேசியில் “அது எப்படி குட்டிம்மா? கரடி வேலை கரெக்ட்டா பாக்குற?” என்று தன் தங்கையை கலாய்க்கக் கேட்டான் அருள்.
“ஓஓஓ…. அப்பொழுது, அருள்மொழிவர்மர் தன் இதயராணியுடன் தனிமையில் இருந்தீரோ??? மன்னிக்க வேண்டும் இளவரசே! தாங்கள் தான் எனக்கு ஓய்வுநேரம் கிட்டும்போது தங்களை அழைக்குமாறு கூறினீர்கள்” என்று விடை பகர்ந்தாள் அவள்.
“ஆமாம்…. வேலை பிஸில்ல மறந்துட்டேன்.”
“உன்னை ஆளும் காதல் தேசம் அருகேயிருக்க, இந்த சாதாரண பிரஜையா நினைவுக்கு வருவாள்?” என்று தூய தமிழில் மேலும் கடுப்படித்தாள் அவள்.
“ஏய் ப்ரியா! இப்படியே பேசிக்கிட்டு இருந்தே, உனக்கு என்ன சொல்லனுமோ அதை சொல்லமாட்டேன்” என்று மிரட்டினான் அவன். (இது நம்ம ப்ரியா தானா? சென்னையில் இருந்து இங்கே ஃபோன் போட்டு நந்தி வேலை பார்க்கும் அளவுக்கு உனக்கு அவன் என்ன செய்தான்?)
“டேய் அண்ணா, ஒழுங்கா சொல்லு…. இல்லைன்னா உங்க இரண்டு பேரையும் தொந்தரவு செய்வேன்” என்று மிரட்டினாள் ப்ரியா.
“அது தான் செய்தாச்சே. இனி அத மறுபடியும் ஏன் வேஸ்ட்டா பண்ணனும்?” என்றான் அருள். மறுபுறம் அசடு வழிந்தது.