“நான் கடந்த ஆறு மாசமாக பார்த்துட்டு இருக்கேண்ணா. ஒரு வரன் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. என் பால்ய சிநேகிதனின் வகையில் சொந்தம். போன வாரம் தான் அந்த வரனின் தந்தையைப் பார்த்தேன். நம்ம ப்ரியாவிற்குப் பொருத்தமான இடம். அவங்களைப் பற்றி பேசத்தான் இன்னைக்கு இங்கே வந்ததே” என்று சாதாரண விஷயத்தை சொல்வதுபோல சொன்னார் கைலாசநாதன். தன் தம்பியிடமிருந்து இப்படி ஒரு பதிலை விஷ்வநாதன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சட்டை வாங்குவது என்றாலும் தன் அண்ணனின் விருப்பம் கேட்பவர் இப்போது மகளுக்கு வரனே பார்த்துவந்து நிற்கும்போது என்னவென்று நினைப்பது? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிக்கும் விஷயமா இது? ஆறு மாதமாக எவரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்த தம்பியைப் பார்த்து கோபம்கூட வந்தது அவருக்கு.
ஆச்சரியமாக கைலாசநாதனைப் பார்த்தார் பவானி.. ஆம்! இது பவானிக்கும் ஆச்சரியமே. இங்கு வரும்வரை தன் கணவர் இக்காரணத்திற்காகவே அழைத்துவருகிறார் என்பதே அவருக்குத் தெரியவில்லை. ‘ஏன் இந்த திடீர் பயணம்?’ என்று கேட்டபோது அவருக்குக் கிடைத்ததெல்லாம் மழுப்பலான பதில் மட்டுமே. ஆனால் இங்கு வந்தபின் அவர் தன்னிடம் வேண்டுமென்றே சொல்லவில்லை என்பது தெளிவாகியது அவருக்கு.
தங்களது பெண்ணின் வாழ்வைப் பற்றி இவர் மட்டும் தனித்து எவ்வாறு முடிவு செய்யலாம்? ப்ரியா அவருக்கும் பெண்ணில்லையா? தன்னிடம் ஒரு வார்த்தை கூறியிருக்க வேண்டாமா? என்று தோன்றியது. நியாயம் தானே? ஆனால் அதைப் பற்றி கேட்கும் தருணம் இதுவல்ல என்று நினைத்து அமைதி காத்தார் பவானி. இடையிடையே கணவனிடம் பார்வை அணலைக் கக்கவும் அவர் மறக்கவில்லை.
பவானிக்கும் சரி, மற்ற அனைவருக்கு சரி, கைலாசநாதனின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும் எவ்வளவோ எடுத்துக்கூறியும், “நீங்க கேட்ட டைம் முடிஞ்சு போச்சு. இனி என்னை தடுக்காதீங்க. இந்தத் திருமணம் நடந்தே தீரும். என்மேலே நம்பிக்கை வையுங்கள். எனக்கும் அவள்மேல் அக்கறை இருக்கு. அந்த பையனைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டேன். நல்ல குடும்பம், தங்கமான பையன்” என்று விவரங்களைக் கூறி, தன் பிடியில் உறுதியாக இருந்தார் கைலாசநாதன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அவ்விருவரின் தாய் அன்று கோவிலுக்குச் சென்றிருந்ததால், விஷ்வநாதன் அதனை ஒரு காரணமாகக் காட்டி, இரு நாட்கள் பொறுத்திருக்குமாறு கூறி சமாதானப்படுத்தினார். கைலாசநாதனும் அதற்குச் சம்மதித்தார்.
இவை எல்லாவற்றையும் அருளின் மூலம் அறிந்துகொண்ட ப்ரியா, தனக்குத் தெரியாமல் தன் வாழ்வில் நடந்த இந்த முக்கிய நிகழ்வுக்கு தன்னிடம் ஆலோசனை கூட கேட்காததை நினைத்து விக்கித்து நின்றாள்.
இருவருடங்களுக்கு முன்,ப்ரியாவிற்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தபோது, முதலில் எதிர்த்தது கைலாசநாதன் தான். அவருக்கு ப்ரியாவிற்கு விரைவில் திருமணம் செய்யவேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால், ப்ரியாவிற்கு அதில் துளியும் விருப்பமில்லை. அவளுக்கு திருமணத்திற்கு முன் சில காலம் வேலைக்கு செல்ல விருப்பம் இருந்தது. எவ்வாறு இந்த பேச்சைத் தடுப்பது என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, அவளது அண்ணனோ, விஷ்வநாதன் மூலம் அவள் விருப்பத்தைத் தெரிவித்து சமாதான உடன்படிக்கை நீட்டிவிட்டான்.
அந்த ஒப்பந்தத்தில் மானசீகமாக கையெழுத்திடும் முன், அவர் வைத்த காலக்கெடுவே இந்த இரு வருடம் மட்டும் வேலைக்கு செல்லும் ஒப்பந்தம். தன் கனவு நிறைவேறப்போகும் ஆசையிலும், சமாளித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் சரியென்று தலையாட்டினாள் ப்ரியா. அதில் வந்தது வினை.
ப்ரியாவிற்கு அது என்றேனும் ஒரு நாள் தவிர்க்க முடியாதது என்று நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், எல்லா பெண்களுக்கும் இருந்த எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிறு கவலை அதனை முடிந்தவரை தள்ளிப்போட வைத்தது. அதற்கு தலையாய காரணம், அவளது பணியின் மீது இருந்த பற்று. எவ்வளவு குறும்புத்தனத்துடன் இருந்தாலும் வேலை என்று வரும்போது அதில் புலி நம் ப்ரியா. அந்த வேலையில் ஒரு உயரிய பதவி பெற விரும்பியவள், எங்கே தன் வருங்காலக் கணவனால் அதற்கு இடையூறு நேருமோ என்று கவலைகொண்டாள். அதற்காகவே, அன்று இரு வருடம் கேட்டவள், அந்த ஒப்பந்தத்தின் காலக்கெடை நீட்டிக்க மறந்ததை என்னவென்று சொல்ல??
தான் என்றோ விளையாட்டுத்தனமாக ஒப்புக்கொண்டது இப்படி உருமாறி முன்னே வந்து நிற்கும் என்று அறியாமல் சந்தோசமாக துள்ளித் திரிந்தாள் அன்று அவள். இப்போது நினைக்கையில், மனதில் ஏதேதோ குழப்பங்கள். இப்போது என்ன செய்வது? என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள் ப்ரியா.
தொடரும்
{kunena_discuss:1075}