“ என்ன கண்மணி நீ இவ்வளவு வீக்கா?” என்று அவளது ஒருமனம் பரிகாசமாய் கேட்க, இன்னொரு மனமோ,
“இல்லை.. இல்லவே இல்லை.. நான் கிளர்ச்சியுற்றது அவன் முகத்தை பார்த்து இல்லையே! அவன் பெயரைக் கேட்டுத்தானே ! இந்திரன் என்ற பெயர் தனக்குள் ஏற்படுத்திய மாயம் அவை!” என்று உடனே நிதர்சனத்தை எடுத்துச் சொன்னது.
தெளிந்து விட்டிருந்தாள் கண்மணி. தனக்குள் மூண்டிருந்த சலனமும், குற்ற உணர்வும் நொடியில் விலகியிருந்தது. “ குட் கேர்ள் கண்மணி நீ!!” என்று தன்னையே பாராட்டிக் கொண்டவள், இப்போது, இந்திரன் அனுப்பிய மெசேஜை மீண்டும் படித்து பார்த்தாள்.
காதல் பொழிய வேண்டிய
இரு நயனங்களிலும்,
கோபம் பொங்குவதும் ஏனடீ?
சகி நீ கொஞ்சம் முறைத்தாலே,
கலங்கிடுதே என் ஆறடீ!
உள்ளத்தை காட்டி ஏங்குகிறேன்,
ஒரே முறை பாராடீ!
சரியென்று நீ சொல்லிவிட்டால்,
உனக்குள் உறைவேன் நானடீ!
மீண்டும் மீண்டும் அதையே படித்துக் கொண்டிருந்தாள் கண்மணி. இந்திரன் தினம் அனுப்பும் காதல் கவிதைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது.
அதுதான் கோபம்! இரு நயனங்களிலும் கோபம் பொங்குவதும் ஏனடீ? எனில் அவனை நான் கோபமாய் பார்த்திருக்கேனா? இன்றா? என்று யோசித்தவளுக்கு ஒரு நிமிடம் கூட தேவைப்படவில்லை அந்த பெயரை உச்சரிப்பதற்கு!
“ச..த்..ய..ன்..??” நிதானமாக அவன் பெயரை உச்சரித்தாள் கண்மணி.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "இது பேய்க் காதல்" - காதல் கலந்த கவிதைத் தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்...
“க..ண்..ண..ம்..மா!” காதலில் உருகும் குரலொன்று, ஏற்கனவே அடைமழை மூட்டிய குளிரினால் நடுங்கிய தேங்கத்தை இன்னும் நடுங்க வைத்தது. இவ்வளவு நேரம் மழையிலேயே தான் அசையாமல் நின்றது இப்போதுதான் கருத்தில் பட்டது.
தன் பின்னால் சத்யன் நிற்பதை அவளால் உணர முடிந்தது!
அவன் பார்வை தன்னை ஊடுருவுவதை அவளால் உணர முடிந்தது!
முக்கியமாக, எப்போதுமே திமிரும் இறுக்கமும் நிறைந்திருக்கும் அவனது குரல் காதலில் கசிந்துருகுவதை அவளால் உணர முடிந்தது!
இத்தனையும் உணர முடிந்தவளுக்கு, தான் ஏன் அவன்மீது கோபப்படவில்லை? என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. தான் “கண்ணம்மா” என்று அழைத்ததும் கோபத்திலாவது திட்டுவாள் என்று எதிர்ப்பார்த்த சத்யேந்திரன் கண்மணியின் மௌனத்தை கண்டு அஞ்சினான். அப்போதுதான் அவள் குளிரில் நடுங்குவதை கண்டான். (பொதுவாகவே ஹீரோயின் குளிர்ல நடுங்கினால் ஹீரோ தான் போட்டிருக்கும் கோட்டை போர்த்திவிடுவாரு! சத்யனோ சினிமாவிலும் ஹீரோ, கண்மணிக்கும் ஹீரோ அப்படி இருக்கும்போது அடுத்து அவன் என்ன செய்ய வேண்டுமென நாம் சொல்லியா தர வேண்டும்?)
தங்களை யாரேனும் கவனிக்கிறார்களா ? என்று தயக்கம் அவனுக்குள் துளியளவும் இல்லை. அவனுக்கு தற்பொழுது கண்மணி மட்டும்தான் பெரிதாகப் பட்டாள். அவளுக்கு தன் கோட்டை போர்த்திவிட்டவன், அவளை தன் காருக்குள் அமர வைத்தான்.
அவ்வளவு நேரம் மழையில் நடுங்கியவளுக்கு, சத்யனின் கார் கொஞ்சம் கதகதப்பை தந்தது. சுற்றி நாலாபுறமும் கருப்பு கண்ணாடியில் எழுப்பப்பட்ட குட்டி அறை போல இருந்தது அவனது கார்.
“ என்னடா நீ? இப்படியா மழையில நனையுறது? பாரு எப்படி இருக்கன்னு!” என்றபடி தன் கைக்குட்டையால் அவள் முகத்தை துடைத்து விட்டான் சத்யன். அவன் தடுக்க கூட சக்தியில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் கண்மணி.
“ ஏதாச்சும் பேசும்மா.. என்ன பண்ணுது ??” என்று கேட்டப்படி அவளது இரு கைகளையும் கதகதப்பு மூட்டிடும் விதத்தில் தேய்த்து கொடுத்தான். அவள் கொஞ்சம் தெம்பாகவும் கண்மணியின் அனுமதியைக் கேட்காமலே அவளது பாதங்களை மடியில் ஏந்திக் கொண்டு தேய்த்து விட்டான் சத்யன்.
“ வேண்டாம் விடுங்க!” என்று அவள் சொன்ன வார்த்தை, “ப்ச்ச்..எதுவும் பேசாதே ..நான் தானே விடு!” என்று அவன் போட்ட அதட்டலில் அடங்கியிருந்தது.
சத்யன்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகன். மூன்று வருடங்களில் வெற்றியின் சிகரத்தை தொட்டவன். பல பெண்களின் உறக்கத்தில் வரும் கனவின் கதாநாயகன். “சத்யன் ஓகே சொன்னால் போதும்.. இப்போவே அவர் காலில் கிடப்பேன்” என்று சில அதீத அன்புகொண்ட ரசிகைகள் பிதற்றுவதை கண்மணியே பலமுறை கேட்டிருக்கின்றாள்.
அப்படிப்பட்டவன் இன்று அவளது பாதம் பற்றி சேவகம் செய்கிறான்! எதற்காகவாம் ? காதலா? அப்படி என்ன காதல் என் மீது இவனுக்கு? இதுவரை ஒருமுறை கூட நான் இவனிடம் நட்பாய் பேசியதில்லையே! பிறகு ஏன் இந்த நேசமாம்? அவளுக்கு கேட்க பல கேள்விகள் இருந்தன.