09. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி
“என் அபி.. என் அபி.. என் அபி!” ராகவேந்திரனின் குரலே அர்ப்பணாவின் மண்டைக்குள் ரீங்காரமிட்டது. சொல்லாமல் கொள்ளாமல் சுட்டெரிக்கும் வெப்பமான வானிலையின்போது, தேகத்தை தீண்டிடும் முதல் மழைத்துளியைப் போல, தனக்கென யாருமில்லை என்று நம்பிக் கொண்டிருப்பவளை, என்னவள் என்று உரிமைக் கொண்டாடியவனை நினைத்து அப்படியே உறைந்து போனாள் அவள்.
அவளைவிட இரட்டிப்பு அதிர்ச்சியில் இருந்தாள் நிரூபணா. ஆனால் அர்ப்பணாவைப் போல அங்கேயே நின்றுவிடவில்லை அவள். சத்யனின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் நிரூபணா. கழிவறைக்கு செல்வதாய் சொல்லிவிட்டு போன அபி இன்னும் வராமல் இருக்கவும் அங்கு சென்றாள் அவள்.
“என் அபியை உன்னால எப்பவும் நெருங்க முடியாதுடா! இன்னையோட உன் கதை முடிந்தது” என்று கர்ஜித்துக் கொண்டே வினயை தரதரவென இழுத்து கொண்டு நடந்து போயிருந்தான் ராகவன்.
“என் அபி” என்ற வார்த்தையும், அர்ப்பணாவை குரோதமாய் பார்த்த வினயின் முகமும் தான் அவள் கருத்தில் பட்டது. கொஞ்சம் கூட நேரத்தை விரயப்படுத்தாமல் ராகவனை பின் தொடர்ந்து ஓடினாள் நிரூபணா.
ஆனால் புயல் வேகத்தில் புறப்பட்டவனை அவளால் நிறுத்தமுடியவில்லை. நிரூபணா அவர்களை அடையும் முன்னரே காரை கிளப்பியிருந்தான் அவன். உடனே கையில் இருந்த ஃபோனில், அந்த கார் நம்பரை படம் பிடித்து வைத்துக் கொண்டவள், அர்ப்பணாவைத் தேடி போனாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்...
அதே நேரம், சத்யனின் திடீர்னு இதழ் ஒற்றுதலில் நடுங்கி அவனை விலக்கி விட்டிருந்தாள் கண்மணி. இருள் கவ்விய காரில், தன் முகத்தை அவனுக்கு காட்டாமல் திரும்பிக் கொண்டாள் அவள்.
வெட்கமாய் உணர்ந்தாள் அவள். ஒரு ஆணின் ஸ்பரிசத்தை உணர்ந்த நாணம் கலந்த வெட்கமில்லை அது! ஒரு ஆணிடம் இவ்வளவு சீக்கிரம் அடங்கிவிட்டோமா என்ற இயலாமையில் எழுந்த வெட்கம் அது.
சத்யனும் அதே நிலையில் தான் இருந்தான். தனது கடந்த காலத்தை சொல்லி கொண்டிருந்தான் சத்யேந்திரன். தன்னையும் மீறி கண்மணி அவன் கதைக் கேட்டு கண்ணீர்விட, அவன் மனதில் சந்தோஷ மழைச்சாரல்!
“என் கண்மணி என்னை புரிஞ்சுக்கிட்டா.. என் மனச புரிஞ்சுக்கிட்டா” என்ற சந்தோஷத்தில் இருந்தான் அவன். லேசாய் விசும்பலுடன் கண்மணி அவன் தோள் சாய்ந்த வேளையில் தான், ஏதோ ஒரு உந்துதலில் அவளை முத்தமிட்டிருந்தான் அவன்.
அவள் கண்ணீரின் காரணம் கருணையாக கூட இருக்கலாம்! எந்த தைரியத்தில், உரிமையில் நான் அவளை முத்தமிட்டேன்? என்று தன்னையே கேட்டுக் கொண்டான் சத்யன். தயங்கிய குரலில்,
“மன்னிச்சிரும்மா” என்றான் சத்யன். எதுவும் பதில் சொல்லமுடியவில்லை அவளால். “ என்னவென்று சொல்வதாம்?” . ஆனால் அவன் அவளின் பதிலுக்காக காத்திருந்தான். சத்யன் தன்னையே இமைக்காமல் பார்ப்பதை கண்மணியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
“நான்.. நான் வெற்றி கிட்ட போகணும்!” என்றாள் மெல்லிய குரலில். அவள் தன்னிடம் பேசிவிட்டாள் என்று குதூகளித்தவன்,
“ஐயோ உன் ப்ரண்டை வெச்சு என்னை அடிக்க போறியா?” என்று பயந்தவன் போல கேட்டான்.
“ நீங்க ரொம்ப பயந்தவர்தான்னு நம்பிட்டேன்!’ என்று பட்டென கூறியிருந்தாள் கண்மணி. இந்த முறை அவள் முகத்தில் நாணம் தான் குடியேறியிருந்தது.
“எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் சத்… இந்திரன்.. எனக்கு யோசிக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. ஒருதடவை கமிட் ஆகிட்டு,அதுக்கு அப்பறம் ஏதாவது சூழ்நிலையை காரணமாய் காட்டி என்னால பிரிய முடியாது. நான் எல்லாரோடும் இயல்பா பழகினாலும், என் உலகம் ரொம்ப சின்னது. அவ்வளவு சீக்கிரம் யாரும் நான் நெருங்க விடமாட்டேன்.. ஏன்னா, என்னால பிரிவை தாங்க முடியாது!” என்று கூறிய கண்மணியின் விழிகளில் இருந்து முதல் முறையாய் தன்னிரக்கத்தின் பிரதிபலிப்பில் கண்ணீர் துளி!
இதுவரை யாரிடமும் அவள் மனம் விட்டு பேசி அழுததில்லை! வெற்றிக்கே கண்மணியின் இந்த முகம் தெரியாதுதான். மிகவும் சாமர்த்தியமாய் புன்னகையின் முகத்திரையில் உலா வருபவள் கண்மணி. மேலும், அவளைப் பொருத்தவரை, கண்ணீர் என்பது அவசியமற்ற செயல். எந்த ஒரு துன்பமும், கண்ணீருக்கு அஞ்சி வந்தவழியே திரும்பி போவதில்லை! அப்படியிருக்கும்போது, கண்ணீருக்கு வாழ்க்கையில் என்ன வேலை? இதுதான் கண்மணியின் வாதம்!
ஆனால், இன்று அப்படியில்லை! ஒருவேளை, சத்யன் தன்னிடம் மனம் விட்டு பேசியதால் அவளுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும் என்று தோன்றியதோ? அப்படியென்றாலும், வெற்றியும்தானே அவளிடம் நேர்மையாய் இருக்கிறான்? அவனிடம் ஏன் சொல்லவில்லை?
காரணம், காதல்! ஆம், அவள் மனதில் ஓர் ஓரத்தில் குடியேறியிருந்தான் சத்யேந்திரன். அதை அவளே உணர்ந்து கொள்ள கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது அவளுக்கு.