“முருகா, இவளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைய கொடுக்குற நீ? அவளுக்கு நீ கொடுத்த தைரியத்தை நீயே திரும்பி எடுத்திடாதே .. அர்ப்பணாவை பழைய அர்ப்பணாவாக மாத்திடாதே!” என்று மனதிற்குள் கடவுளை வசைப்பாடிய நிரூ,
“ அபி.. நாம வீட்டுக்கு போகலாம் வா!” என்றாள்.
அர்ப்பணா கொண்டு வந்த காரை நிரூபணா ஓட்ட, அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். நிரூவுக்கும் வினயைப் பற்றி அபியிடம் இப்போது பேச வேண்டாம்!என்றுதான் தோன்றியது.
தோழியை வீட்டுக்கு அழைத்து வைந்தவள், தன்னிடம் இருந்த தூக்க மாத்திரை இரண்டை பாலில் கலந்து அபியை பருக வைத்தாள். நன்றாக உறங்கட்டும் அவள். காலையில் பேசிக் கொள்ளலாம் ! என்று நினைத்தவளும், சோர்வுடன் படுக்கையில் சரிந்தாள்.
ராகவனின் ஞாபகம் வந்தது அவளுக்கு. தான் சத்யனுடன் அரங்கத்திற்குள் செல்லும்போது ராகவனும் அவர்களுடன் தானே நடந்து வந்தான்? அவன் பெயர் என்ன? என்று நெற்றப்பொட்டை ஒற்றை விரலால் தட்டி யோசித்தாள் நிரூபணா. அவர்களுடன் நடந்து வரும்போது ஒரு ஃபோன் வந்தபோது, “யெஸ் ஏசிபீ ராகவேந்திரன் தான் பேசுறேன்!” என்று அவன் சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. நாளை அவனை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற முடிவை எடுத்தப்பின் நிம்மதியாய் கண் அயர்ந்தாள் நிரூபணா.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
இன்னொரு பக்கம் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் கண்மணி. சத்யனின் கடந்த கால வாழ்க்கையை அசைப்போட்டு கொண்டிருந்தாள் அவள்.
சத்யனின் குடும்பத்தார் ஏற்கனவே இரண்டு தலைமுறைகளாக சினிமாவில் நுழைந்து, உழைத்து, புகழ் அடைந்தவர்கள். சத்யனின் தாத்தா, தமிழ்சினிமாவின் ப்ளேக் அண்ட் வாய்ட் காலத்தில் மிகவும் ப்ரபலமான குணச்சித்திர நடிகராய் நடித்து பெயர் வாங்கியவர்.
அவர் கதாநாயகனாய் அறிமுகப்படுத்தப்பட்ட படம் சக்கை போடு போடவும், அடுத்தடுத்து வந்த படங்கள் அவருக்கு ஏறு முகமாய் அமைந்தது. அவரது வாரிசாய் வந்தவர் தான் சத்யனின் தந்தை.
சத்யனைப் போல அவருக்குமே சினிமாவில் அப்போது நாட்டமில்லை. முதல் படமே சொதப்பலாக போனது. அதை நினைத்து அவர் பெரிதாய் வருந்தவில்லை. ஆனால், “ புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” என்று புகழாரம் பேசியவர்கள் அனைவரும் அந்த படத்திற்கு பின் “வாத்தியர் பிள்ளை மக்குதான்!”என்று சொல்லிட அப்போதுதான் தன் மீது “வாரிசு” என்ற இருள் நிழல் படிந்திருப்பதை உணர்ந்தார் கௌரவ்.
தன்னால் தனது தந்தைக்கு ஒரு களங்கமான அவப்பெயர் வரலாமா? கூடவே கூடாது! என்று முடிவெடுத்தவர் கடுமையாய் உழைத்தார். டான்ஸ் கற்றுக்கொண்டார், சண்டைப் பயிற்சி கற்றுக் கொண்டார், கண்ணாடியின் முன் நின்று முகபாவனைக்கு தனக்கு தானே பயிற்கு கொடுத்துக் கொண்டார்.
அடுத்த பட வாய்ப்பு அவரைத் தேடி வரவில்லை! அவரே தேடி போனார், குடும்ப பெயரை காப்பாற்றுவதற்காக. “மோசமான நடிகன்!” என்ற கேலி கொஞ்சம் மறைந்து “சுமார் “ ரகத்திற்கு வந்தார் அவர். விடாமுயற்சியை ஆயுதமாக்கி உழைத்தார் கௌரவ்.
திருமணமாகியது. அன்பான மனைவியாய் அவர் வாழ்க்கையில் நுழைந்தார் சுலோட்சனா. கணவனின் வேலையைப் பார்த்து கொஞ்சம் முகம் சுளிக்கவில்லை. கௌரவின் அனைத்து முயற்சிக்கும் துணை நின்றார் அவர். சினிமா கௌரவின் வாழ்க்கையில் பாதி அங்கமெனில், மறு பாதியாய் இருந்தவர் சுலோட்சனா தான்!
கௌரவ் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, புன்னகை படிந்த முகத்துடனே இருப்பார் சுலோட்சனா. “நல்ல நடிகன் ஆவதற்கு தான் நான் சிரமப்பட்டேன்! ஆனால் எந்தவொரு கஸ்டமும் இல்லாமல் நீ என்னை நல்ல கணவன் ஆக்கிட்டம்மா” என்று அடிக்கடி மனைவியிடம் சொல்வார் அவர்!
அதன்பின் சத்யேந்திரன் பிறந்தான்! அவன் வந்த ராசியோ என்னவோ, சக நடிகர்களால் எட்டி பிடிக்க முடியாத உயரத்தை அடைந்திருந்தார் கௌரவ். ரசிகர்களில் சிலர் அவரை நடிகனாக பார்க்காமல் கடவுளாகவே பாவித்தனர்.
சத்யன் வளரும்போது, கௌரவின் புகழும் வளர்ந்தது. சராசரி பிள்ளைப்போல தந்தையுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற சத்யனின் ஆசை பூர்த்தி அடையாமலே போனது, கௌரவும் தன்னால் இயன்ற அளவு மகனுடன் நேரம் செலவளிக்க முயற்சித்தார் தான்!
ஆனால் அவன் ஆழ்மனதில் தன் தந்தைக்கு சினிமாதான் எல்லாமும் என்ற எண்ணம் படிந்து விட்டது. தோளுக்கு மேல் வளர்ந்த மகன், இனிமேலாவது தன்னை புரிந்து கொள்வான் என்று கௌரவ் நினைக்கும்போதுதான் அதற்கு எதிர்மாறாக அவருடன் சண்டைப் போட்டான் சத்யன்.
வாதத்தின், இறுதியில் “ இனி நடிக்கவே மாட்டேன்!” என்று சொல்லியிருந்தார் அவ. சரியாய் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த அந்த வாதத்தில் அவர் எடுத்த அதிரடி முடிவு அது.
சத்யன் கூட அவரை நம்பாமல்தான் இருந்தான். தற்பொழுது தன்னை சமாதானம் செய்வதற்கான சாக்கு இது என்று நினைத்தான் அவன்.