"ஏன் ரதி. குழந்தையை அடிச்ச. அவ சொன்ன கேட்டுப்பாளே" மனைவி மகளை அடித்து விட்டதாக சொல்லவும் அவர் ஆத்திரப்படவில்லை. ஏதேனும் காரணம் இருக்கும் என்றே மேற்கொண்டு சொல்லுமாறு பணித்தார்.
"இல்ல கை வேலையா இருந்தேன். ஆல்பம் எடுத்து குடுக்க சொல்லி நச்சரிச்சுட்டே இருந்தா. அப்புறம் எடுத்து தரேன்னு சொல்லியும் கேக்கல...அதான் கோபத்துல பிள்ளைய அடிச்சுட்டேன். அவ்வளவு அடிச்சும் கொஞ்சம் கூட அழவே இல்லைங்க" நிறைமாதமாக இருந்த மனைவியை கடிந்து கொள்ளவில்லை அவர். பெற்றவள் பிள்ளையை வேண்டுமென்றே அடிப்பாளா என்ன. அதுவும் அபி போன்ற குழந்தையை.
"சரி ரதி...ஒண்ணுமில்ல. நீ ஏன் கலங்குற. அவ தப்பு செய்தா, சொன்ன சொல் கேக்கலைனா அவளை அதட்ட உனக்கு முழு உரிமையும் இருக்கு. அடிக்கிறத மட்டும் முடிந்த அளவு கண்ட்ரோல் பண்ணிக்கோம்மா" மனைவிடம் இதமாக சொன்னவர் மகளிடம் திரும்பி அவளிடம் நடந்ததைக் கேட்டார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
"பூக்குட்டி நேத்து அம்மா அடிச்சாளே. உனக்கு வலிக்கலையாடா தங்கம். நீ அழவே இல்லையாமே"
இடம் வலமாக தலையை ஆட்டினாள் அபூர்வா.
"அம்மா அடிக்கும் போது வலிச்சுதா...அப்புறம் டாடி டாடி சொன்னா அபி" குழந்தை சொல்லவும் மகளை அணைத்துக் கொண்டார் விஜயகுமார்.
அபூர்வாவிற்கு ஒரு முறை ஊசி போடும் போது வலிக்கும் என்று அழவே “என் பூக்குட்டி சமத்தாச்சே அழவே மாட்டாளே, டாடி இருக்கேன்ல கெட்டியாக பிடிச்சுக்கோ” என்று சொல்லவும் அபூர்வா அப்போது தந்தையை பிடித்துக் கொண்டு டாடி டாடி என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கவும் ஊசியின் வலி அறவே தெரியாமல் போனது.
அன்னை அடிக்கவும் மனதிற்குள் தந்தையை நினைத்து டாடி டாடி என்று உரு போட்டிருக்கிறாள் மகள். அப்படி சொன்னால் அன்று போல் வலிக்காமல் இருக்கும் என்ற நினைவில்.
ரத்னாவதி கணவரை ஏறிட்டுப் பார்த்தார். இவள் இங்கே டாடி என்று மனதிற்குள்ளேயே துடிக்க எங்கோ இருந்த அவர் அதை உணர்ந்து அதிர்ந்திருக்கிறார். இதை தான் ஆழ்மனத்தின் உள்ளுணர்வு என்று சொல்வதா.
"இனிமே அவளை அடிக்க மாட்டேங்க"
"ரதி. நீ பீல் பண்ணாதே.. பூக்குட்டி இனிமே அம்மா சொல்ற பேச்சு கேக்கணும் என்னடா"
"சரி டாடி"
"அம்மா பூக்குட்டிய அடிச்சா டாடிக்கு தான் ரொம்ப வலிக்கும்"
"ஏன் டாடி"
"ஏன்னா பூக்குட்டி இங்க இருக்கா" தனது இடது மார்பில் அவளது பிஞ்சுக் கரத்தை வைத்துக் காட்டினார்.
என்ன புரிந்ததோ! தன் தந்தையின் மார்பில் தலை சாய்க்க அதில் அவரின் இதயத் துடிப்பின் ஓசை கேட்டதும் அண்ணார்ந்து தந்தையைப் பார்த்தாள்.
"டக் டக் கேக்குது டாடி"
"டக் டக் இல்லடா. அது இதயத் துடிப்பு. என் இதயத்தின் துடிப்பாய் நீ இருக்க வேண்டாம் பூக்குட்டி. என்றேனும் அது துடிப்பதை நிறுத்திட கூடும். என் உயிராய் என்றும் நீ இருப்ப கண்ணம்மா. தேகம் என்னும் உருவம் அழிந்தாலும் உயிருக்கு என்றும் அழிவில்லை.”.
அவரின் “மார்பில் ஊறும் உயிர்” அவளல்லவோ!!!
அதைத் தான் காவ்யாகிட்ட உன் அப்பாக்கு வலிக்கும்னு சொல்லிருக்கா...ரத்னாவதி கதையை முடிக்கவும்
"பக்த பிரஹலாதன் இரண்யகசிபு துன்புறுத்தும் போதெல்லாம் அந்த நாராயணன் நாமம் உச்சாடனம் செய்ய எந்த துன்பமும் அவனை நெருங்காது போனதுன்னு கதைல படிச்சிருக்கோம்.. அதை போல இருக்கு நீ சொல்றது ரத்னா" லலிதாம்பிகை சிலாகித்தார்.
லலிதாம்பிகை சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் அங்கு வந்தனர்.
அறிமுகங்கள் பின்," உங்க பொண்ண ரொம்ப நல்லா வளர்க்குறீங்க" பாராட்டினார் லலிதாம்பிகை.
"அம்மா எனக்கு தாய் ஸ்தானத்தில் இருக்கீங்க. ஒருமையிலேயே கூப்பிடுங்க" விஜயகுமார் பணிவுடன் சொன்னார்.
ராணுவத்தின் ஓர் உயர் பதவியில் இருந்தும் அவரின் பணிவு மரியாதை லலிதாம்பிகையின் மனத்தைக் கவர்ந்தது.
"சரி பா...ரத்னா இப்போ தான் எல்லாம் சொல்லிட்டு இருந்தா" அப்போது நடந்த விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
"எங்களுக்கு ராணுவத்தில் உடல் வலிமைக்கான பயிற்சியை விட மன வலிமைக்கான பயிற்சிகளே அதிகம். அதுவும் விமான படையில் இருக்கும் போது வேகம் விவேகம் இரண்டுமே வேணும். நிதானம், சமயோசிதம் ரொம்பவே முக்கியம். எதிரியை அழிக்கணும் என்ற உணர்வை விட தாய்நாட்டை காக்க வேணும் அப்படிங்கிற உணர்வு இன்னும் அதிக பலத்தை குடுக்கும்"