சாலையில் நடைப்பயிற்சி செல்பவர்களை வித்தியாசமாகப் பார்த்தாள். 'எதற்காக அவர்கள் நாயை அழைத்துக்கொண்டு இந்த குளிரில் ஓடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தான் பிரச்சனை .இது போன்று தினமும் ஓட வேண்டும் என்பது இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையா. அப்படி எதற்கு தான் ஓடுகிறார்கள், ஆண்களோடு சேர்ந்து பெண்களும் ஓடுகிறார்களே. அதுவும் அரைகுறை ஆடையோடு சிறிதும் கூச்சமின்றி, இந்த நாட்டில் எல்லாமே வித்தியாசமாய் தான் செய்வார்கள் போல' அவளது இதழில் சோகப் புன்னகை இழையோடியது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வசந்த். 'என்ன செஞ்சிட்டு இருக்கா இவ'
அமேலியாவின் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவள் உடல் அசையவில்லை, சிலை போல நின்றாள். ஆனால், அவள் அங்கு இல்லை, உடலை மட்டும் விட்டுவிட்டு மனதை எங்கோ வான் வீதியில் உலாவ விட்டுக்கொண்டிருந்தாள்.
தான் தங்கி இருக்கும் வீட்டில் உள்ளவர்களை எண்ணிப் பார்த்தாள். மேகலாவும் நிலாவும் அவளிடம் அன்பாகப் பழகுவது பிடித்திருந்தது. முன்பின் அறியாத தன்னை மிகுந்த கனிவோடு நடத்தி, வீட்டில் தங்க வைத்திருக்கிறார்களே எவ்வளவு நல்ல உள்ளம் அவர்களுக்கு. நிச்சயம் இறைவன் அவர்களை மகிழ்வோடு காப்பாற்றுவார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்...
நாராயணனின் முகம் மனதில் தோன்றி அவளது மகிழ்ச்சியான முகத்தை சோகமாக்கியது, வசந்தின் உருவம் மேலும் அதை கலவரமாக்கியது. அவர்களுக்கு தான் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்று நன்றாகவே தெரியும். ஆனால், என்ன செய்வது. இவர்களை விட்டாலும் வேறு போக்கிடம் ஏது. அழகான காலைப் பொழுதை ரசிக்க வந்து கவலையில் வீழ்ந்தாள் அமேலியா.
வசந்த், தான் வந்ததற்கு அடையாளமாக தொண்டையைச் செருமினான். திடுக்கிட்டு வசந்த்தை நோக்கினாள் அமேலியா. அவளது நெஞ்சம் படபடத்தது. தலையைத் தாழ்த்திக்கொண்டு வசந்தைக் கடந்து சென்று அவ்விடத்தை விட்டு வேகமாய் மறைந்தாள்.
அவள் செல்வதை சிறிது நேரம் பார்த்தபடி இருந்த வசந்த், அவளைப் பற்றி சிந்திக்கலானான். தான் வடித்த கதாபாத்திரம் ஒன்று அவனுக்கு நினைவு வந்தது.
அந்த கதாபாத்திரம் ஓர் ஊமை. சிறு வயது முதலே தனிமையில் வாழ்ந்து வந்த அந்த கதாபாத்திரம், தினமும் மாலை வேளையில் மரத்தடியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய எண்ணங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கும். அந்த உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள நண்பர் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்குமே என ஏங்கினாள் அந்தப் பேதை. அவளிடம் நட்பு வைத்துக்கொள்ள யாருக்கும் விருப்பமில்லை. நண்பர்கள் இல்லாமலேயே காலத்தைக் கழித்து இறுதியில் இறந்து விடுகிறாள்.
அமேலியாவும் அப்படி தான் என அவனுக்குத் தோன்றியது. ஆனால், இவள் ஊமை அல்ல. கதாபாத்திரத்துக்கும் இவளுக்கும் இதுமட்டும் தான் வித்தியாசம் என எண்ணினான்.
வசந்த் குளித்து முடித்து தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தான். 'இன்றைக்கு மட்டும் நான் நினைச்சது நடந்ததுன்னா இந்த உலகத்திலேயே நான் தான் அதிர்ஷ்டசாலி' என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.
"வசந்த்.." என்று மேகலாவின் குரல் ஓங்கி ஒலித்தது.
தன் டையை சரி செய்துகொண்டே "என்ன அக்கா?" என்று மேலிருந்தே குரல் கொடுத்தான் வசந்த்.
"ஜெசிகா வந்திருக்கா"
"அவளுக்கு காபி கொடு. இரண்டு நிமிஷத்துல வந்திடுறேன்"
ஜெசிகாவிற்கு காபி கொடுத்துவிட்டு, "வீட்டு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு" என்றாள் மேகலா.
"நிறைய வேலை அக்கா அதான் வர முடியல"
"என்னம்மா ஜெசிகா எப்படி இருக்க?" என்றபடி தன் அறையை விட்டு வெளியே வந்தார் நாராயணன்.
"நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க?"
"ம்ம் இருக்கேன். உன் வேலையெல்லாம் எப்படி போகுது?"
"கொஞ்சம் டென்ஷனா தான் போயிட்டு இருக்கு அங்கிள்"
மேற்கொண்டு ஜெசிகாவிடம் அவர் பேசவில்லை. அவரைப் பொறுத்தவரை பிழைக்கத் தெரியாதவர்களின் பட்டியலில் வசந்தைப் போலவே ஜெசிகாவிற்கும் இடமுண்டு. வசந்த்தை கெடுப்பதில் அவளுக்கும் முக்கிய பங்குண்டு என்பது அவர் கருத்து.
காபியை ருசித்து முடித்த ஜெசிகா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"என்ன தேடுற?" என்றாள் மேகலா.
"உங்க வீட்டுக்கு புது விருந்தாளி வந்திருக்கிறதா வசந்த் சொன்னான்"
"விருந்தாளியா?"
"ம் ஈராக்ல இருந்து"
மேகலா முகத்தில் அதிர்ச்சி. தன் தந்தையை நோக்கினாள். நாராயணன் முகத்திலும் அதிர்ச்சியின் ரேகைகள் படர்ந்தன
வசந்த் தன் அறையை விட்டு கீழிறங்கி வந்தான்.
"வசந்த், எங்கே அந்த பொண்ணு?" என ஜெசிகா கேட்டாள்.
"இங்கே எங்கயாச்சும் தான் இருப்பா"
"இவகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா" என்றாள் மேகலா கோபத்துடன்.
"வேணும்னு சொல்லலை. அவளா தெரிஞ்சிகிட்டா"