(Reading time: 17 - 33 minutes)

மேலியாவிற்கு முதலில் புரியவில்லை. பிறகு, அவள் பெயரைத் தான் கேட்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்டாள்.

"என் பேரு நிலா. தினமும் ராத்திரில வானத்துல வந்துட்டு போகுமே, அந்த பேரு தான் நிலா"

"நீலாஆஆ"

"ரொம்ப நீளமா போறிங்களே. சின்னதா சொல்லுங்க, 'நிலா' "

"நீலா.."

"திரும்பவும் அப்படியே தான் சொல்லுறீங்க. சரி, இதோ என் அம்மா பேரு மேகலா. எங்கே சொல்லுங்க பாப்போம், 'மேகலா' "

"மே கே லா "

வசந்த்தைக் கை காட்டி, "என் மாமா பேரு வசந்த்"  என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அமேலியா வசந்த்தை நோக்கினாள். எங்கே தன் பெயரை ஏடா கூடமாகக் கூறி எல்லோரையும் சிரிக்க வைத்துவிடுவாளோ என்ற பயம் வேறு அவனுக்கு.

அமேலியாவிற்கோ வசந்தின் பெயரைக் கூற தயக்கம்.. அவனைப் பார்க்க பார்க்க மனதில் கோப அலைகள் எழுந்தன. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவன் மேலிருந்த கோபத்தைப் புன்னகையாக மாற்றி நாசுக்காக அவன் பெயரைக்  கூறாமல் தவிர்த்துவிட்டாள்.

"ஏன் மாமா பெயரை சொல்லமாட்றீங்க?" என்றாள் நிலா.

"கூப்பிடலேனா விடேண்டி. அவ பேரை கேளுடின்னா எங்க பேரை சொல்லிட்டு இருக்க" என்று எரிந்து விழுந்தான் வசந்த்.

"இரு மாமா, மெதுவா தான் கேக்க முடியும். நான் நிலா, அம்மா மேகலா, மாமா வசந்த். நீ யாரு?" என்று ஆட்காட்டி விரலை அமேலியாவை நோக்கி நீட்டினாள் நிலா.

நிலா என்ன கேட்க வருகிறாள் என்பது அமேலியாவிற்கு புரிந்தது. எல்லோரையும் பார்த்து புன்னகைத்தாள். நிலாவின் அறிவை எண்ணி வியந்தாள். அவளை வாஞ்சையோடு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

சிரித்தபடி, "எனது பெயர் என்னவென்று தானே கேட்கிறாய்?" என உருதுவில் கேட்டாள் அமேலியா.

நிலா திருதிருவென விழித்தாள்.

"அமேலியா"

"வாவ் ! அக்காவோட பேரு 'அமேலியா' அழகா இருக்கு" என்று எல்லோரையும் பார்த்து கூறினாள் நிலா.

"  'அமேலியா' ம்ம்.. நல்லா தான் இருக்கு" என்று வசந்த்தைப் பார்த்து கூறினாள் ஜெசிகா.

"ரொம்ப முக்கியம்" என்று சலித்துக்கொண்டான் வசந்த்.

"அமேலியா, நிலா, மேகலா, பேரு எல்லாம் ஒரே ரைமிங்கா இருக்குல்ல" என்றாள் நிலா.

"சரி சரி எனக்கு நேரமாகுது வா ஜெசிகா போகலாம்" என்று வசந்த் அவசரப்படுத்தினான்.

"வசந்த் நில்லு" என்றார் நாராயணன்.

"என்னப்பா?"

"என்னடா, மறந்துட்டியா?" நாராயணன் குரலில் வேதனை கலந்த வருத்தம். "மேகலா, நீ வடை, பாயசம் எல்லாம் தயார் செஞ்சிட்டல்ல?"

"எதுக்குப்பா? இன்னைக்கு என்ன விசேஷம்?"

நாராயணன் முகத்தில் வேதனை வேர்கள் படர்ந்தன.

"என்னப்பா ஆச்சு?"

"இன்னைக்கு உன் அம்மாவோட நினைவு நாள்"

மேகலாவுக்கு சுருக்கென்று இருந்தது.."மன்னிச்சிடுங்கப்பா.  ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன்"

நாராயணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "பரவாயில்லம்மா, நீ வேலையை பாரு"

"கொஞ்ச நேரத்துல வடை பாயசம் எல்லாம் செஞ்சிடுறேன்பா"

"நீ நார்மலாவே செய் போதும்..வசந்த், நீ எதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னியே. போய் பாரு. இங்கே இருந்து ஏன் நேரத்தை கடத்திட்டு இருக்க?" என்று கூறி அங்கிருந்து சென்றார் நாராயணன்.

வசந்த்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர்களுக்குள் ஆழ்ந்த மௌனம் உருவானது.

"சரி அக்கா, நீ பாத்துக்க. நான் சீக்கிரம் வரேன்"

"சரிடா, பார்த்து போயிட்டு வா. ஆல் தி பெஸ்ட்"

"தேங்க்க் யூ அக்கா. .ஜெசிகா, வா போகலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் வசந்த்.

"நிலா, ஸ்கூல் பஸ் வர நேரமாச்சு. நீ கிளம்பு"

"சரிம்மா" என்றபடி நிலாவும் கிளம்பினாள். அவள் வாசலுக்கு போகவும் பள்ளிப் பேருந்து வரவும் சரியாக இருந்தது. நிலா பேருந்தில் ஏறி கிளம்பினாள்.

மேகலா சோக மூச்சை விட்டபடி சமையலறைக்குள் சென்றாள். நேற்றுவரை தன் அன்னையின் நினைவு நாள் என்று நினைவில்  வைத்திருந்தவள் இன்று எப்படி மறந்தோம் என்று அவளுக்கே தெரியவில்லை. தன்னைத் தானே நொந்துகொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.