03. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது
விழி வெண்படலம் தவிர உடலில் உள்ள சுமார் 75 ட்ரில்லியன் அணுக்களுக்கு தினமும் இதயமானது இரத்ததை செலுத்துகின்றது
“எதுக்கும் ஒரு சி.டி ஏஞ்சியோ (CT ANGIOGRAPHY) எடுத்திரலாமா” வர்ஷினியின் ரிபோர்ட்ஸ்ஸை அலசி ஆராய்ந்தபடியே வருண் காயத்ரியிடம் வினவினான்.
அதிர்ச்சியினால் வந்த மயக்கம் தான் இது என்று சொல்ல முடியாமல் தவித்த வர்ஷினி காயத்ரியை நோக்கி கெஞ்சலாக ஒரு பார்வையை செலுத்தினாள்.
மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் வர்ஷினி மேலும் சோர்வடைகிறாள் என்று அனுமானித்த காயத்ரி கண் ஜாடையிலேயே வர்ஷினியிடம் தான் பார்த்துக் கொள்வதாக கூறவும் வர்ஷினி சற்றே நிம்மதி அடைந்தாள்.
“வேண்டாம் வருண். எகோ (ECHOCARDIOGRAPHY) நார்மல் தானே. வீணா ரேடியேஷன் எதுக்கு”
“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான் காயூ. எல்லாம் நார்மலா தானே இருக்கு. அப்புறம் ஏன் அம்மு மயக்கம் போட்டா” வருண் இன்னமும் தெளிவில்லாத நிலையிலேயே இருந்தான்.
“அதிகமா சந்தோஷப்பட்டாலும் அதிகமா துக்கப்பட்டாலும் கொஞ்சம் படபடப்பு, தலை சுற்றல் எல்லாம் வருவது உண்டு தானே வருண். இன்னிக்கு அவளோட ட்ரீம் ஹாஸ்பிடல் திறப்பு விழான்னு அம்மு ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பா. என்ன அம்மு அப்படி தானே”
ஆம் இல்லை என்று பிரித்தறிய முடியாத படி தலையை ஆட்டி வைத்தாள் வர்ஷினி.
சந்தோஷமா!! ஆம் ஒரு வருடத்திற்குப் பிறகு ராமை கண்குளிர பார்த்தது சந்தோஷம் தான். துக்கமா!!! ஆம் பார்த்தும் அவன் பார்வை தன் மேல் பட்டுவிடாதபடி ஓடி மறைய வேண்டிய சூழலை நினைத்து துக்கம் தான்.
“ராம் இங்கேயே விசிடிங் சர்ஜனா வரப்போறார்ன்னு அண்ணா சொன்னானே. அப்போ இனிமே நான் ஹாஸ்பிடல் பக்கம் வரக் கூட முடியாது போலவே” தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவளின் கண்கள் லேசாக கலங்கி விட அதைக் கண்டுகொண்ட வருண் துடித்துப் போனான்.
“அம்மு என்னடா. ஒண்ணுமில்ல டா. பாரு ரிபோர்ட்ஸ் எல்லாமே நார்மல் தான்”
“வீட்டுக்கு போகலாம் அண்ணா. எனக்கு பசிக்குது”
“ச்சே. நான் ஒரு மடையன். இரு அம்மு காண்டீன்ல ஏதாச்சும் வாங்கிட்டு வர சொல்றேன்”
“வீட்டுக்கே போலாம் அண்ணா”
“வருண் நீங்க கிளம்புங்க. நான் இங்க ஈவினிங் வரை இருந்து பார்த்துக்கிறேன்”
“தாங்க்ஸ் அண்ணி”
“லூசுப் பொண்ணு தாங்க்ஸ் சொல்றத பாரு” வர்ஷினியின் தாடையைப் பிடித்து ஆட்டி அவளை கொஞ்சம் சிரிக்க வைத்து வழியனுப்பி வைத்தாள் காயத்ரி.
வீட்டின் வாயிலை நொடிக்கொரு தரம் எட்டிப் பார்த்தபடியே இருந்த ராமச்சந்திரன் வருணின் கார் உள்ளே நுழைந்ததுமே விரைந்து வந்து கதவை திறந்து விட்டு வர்ஷினியை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டார்.
“அம்மும்மா இப்போ எப்படி மா இருக்கு” அங்கே வந்த லக்ஷ்மியும் வர்ஷினியை அணைத்துக் கொண்டார்.
“அத்தை மாமா நான் சூப்பர்றா இருக்கேன். வேணும்னா லுங்கி டான்ஸ் ஆடிக் காட்டவா. ஸ்டார்ட் மியுசிக்”
“அம்மு உனக்கு எப்போவும் விளையாட்டு தான். வா உள்ள வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடு”
எங்கே இவள் நிஜமாக ஆட்டம் போட்டு உடம்புக்கு மறுபடியும் ஏதாவது இழுத்து வைத்துக் கொண்டு விடுவாளோ என்று பயந்த லக்ஷ்மி அவளை அவசரமாக டைனிங் ஹாலுக்கு இழுத்துச் சென்றார்.
“எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உனைஎழுதி” அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வருண் மொபைல் சிணுங்கவும் அவசரமாய் எழுந்தவன் தள்ளி சென்று மொபைல் ஆன் செய்து பேசலானான்.
“ஹாஸ்பிடல்ல இருந்து முக்கியமான கால் போல” மகன் பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்து சென்று பேசவும் லக்ஷ்மி சமாதானமாய் சொல்லிக் கொண்டார்.
உண்ணும் உணவு தெய்வம் அதற்கான உரிய மரியாதையை செலுத்த வேண்டும் என்பது அந்த வீட்டில் முக்கியகமாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று.
ராமச்சந்திரன் ஏதும் சொல்லாமல் உணவு உண்டதும் எழுந்து சென்றபின் வர்ஷினி தன் அத்தையைப் பார்த்து கண்ணடித்தாள்.
“அத்தை அத்தை இப்படி அப்பாவியா இருக்கீங்களே. உங்க அருமை மகன் ரிங் டோன்லேயே தெரியலையா இது ஹாஸ்பிடல் கால் இல்லன்னு”
“எங்களுக்கும் அது காயத்ரியோட கால்ன்னு தெரியும்”
“எப்புடி அத்தை இப்புடி” வர்ஷினி கண்களை விரித்து கேட்கவும் லக்ஷ்மி சந்தோஷ பெருமிதமாய் சிரித்தார்.
“வாரேவா...மாமியாருக்கு உரிய கெத்து எல்லாம் தூள் பறக்குது”
“ஒன்னும் ஒன்னும் நாலு இது கூட தெரியாமையா நான் இருக்கேன்”
“ஹாஹா. வர வர உங்க குறும்பு ஜாஸ்தியாகிப் போச்சு. எல்லாம் மருமகள் வரப்போற நேரம் போல” கிண்டலாய் ஆரம்பித்தவள், “உங்களுக்கு அண்ணிய பிடிச்சிருக்கா அத்தை. அண்ணி ரொம்ப நல்ல டைப்” லக்ஷ்மியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒரு வித ஆவலான எதிர்ப்பார்ப்போடு வினவினாள்.