ஹக்கீமின் முகத்தில் பயம் பல கிளைகளாக படர்ந்த காரணத்தால் அவன் பதில் ஏதும் பேசவில்லை.
"இந்த சின்ன வயசுலயே மாபெரும் புனித போர்ல கலந்து சேவை செஞ்சிட்டு இருக்க. உனக்கொரு பரிசு கொடுக்க போறேன்"
"பரிசா?" ஹக்கீம் முதன் முதலில் வாய் திறந்தான்.
ஆமாம் என்பது போல் தலையசைத்தவன், ஒருவனை அழைத்து அவன் காதில் எதையோ கூறினான். அவனும் தலையசைத்துவிட்டு சென்று சிறிது நேரத்தில் எதையோ கொண்டு வந்தான்.
"இந்தா ஹக்கீம், இது உனக்கான பரிசு" என்று அவன் கையில் கொடுத்தான் தீவிரவாதி.
அவன் கொடுத்த பரிசை ஹக்கீம் வித்தியாசமாய் பார்த்தான். கருப்பு கயிற்றின் நடுவில் செம்பினாலான சிறிய உருளை இருந்தது.
"இத உன் கழுத்துல கட்டிக்க"
"எதுக்கு?"
"ஹக்கீம், தலைவர் சொல்லுற போல செய். எதிர்த்து கேள்வி கேக்க கூடாது" என ஹக்கீமை அழைத்து வந்தவன் கோபத்தோடு எச்சரித்தான்.
"இன்னும் கொஞ்ச நாளுல அமெரிக்க ராணுவம் உன்னை தேடி வரும். அப்போ இந்த செம்பை நீ கடிச்சேன்னா மூணு நிமிஷத்துக்குள்ள இறந்து போயிடுவ"
ஹக்கீமின் கண்கள் அகல விரிந்தன. வறண்ட தொண்டையை சரி செய்ய எச்சிலை விழுங்கினான்.
"அமெரிக்கர்கள் உன்னை கண்டுபிடிச்சிட்டாங்கன்னா உடனே இதை கடிச்சிடு. அவங்க கிட்ட மாட்டி சித்திரவதை அனுபவிச்சா அது சாவை விட கொடுமையா இருக்கும்"
ஹக்கீமின் இதயத் துடிப்பு பல மடங்கு அதிகரித்தது.
"நான் சொன்னது நடக்காமலும் போகலாம். ஆனா நடந்துட்டா நான் சொன்னது போல செய். இப்போ நீ கிளம்பலாம்"
ஹக்கீம் பயத்துடனே வீடு வந்து சேர்ந்தான். பஹீரா அவன் வரவுக்காக காத்திருந்தாள். அண்ணனைக் கண்டதும் பஹீரா மகிழ்ச்சி அடைந்தாள்.
"அண்ணா உங்க கிட்ட ஒரு சந்தோசமான விஷயம் சொல்லணும்"
"என்ன?"
"பள்ளியில நான் தான் முதல் மதிப்பெண்"
ஹக்கீமின் முகத்தில் நிஜமாகவே சந்தோசம் வந்தது. சமீப காலமாகவே பஹீரா நன்றாக படித்து வந்தாள்.
"ரொம்ப சந்தோசமா இருக்கு பஹீரா. நீ இன்னும் நல்லா படிக்கணும்".
"சரி அண்ணா. எனக்கு என்ன பரிசு வாங்கி கொடுக்க போற?"
பரிசு என்றதும் ஹக்கீமிற்கு தான் அணிந்திருந்த கருப்பு கயிறு நினைவில் வந்தது. மீண்டும் அவனுள் பயம்.
"அண்ணா என்ன ஆச்சு?"
"ஒண்ணும் இல்லை"
"இது என்ன கழுத்துல டாலர்? நல்லா இருக்கு அண்ணா" என்று அதைத் தொட முயன்றாள் பஹீரா.
"பஹீரா! கொஞ்சம் சும்மா இருக்கியா" என்று அவளை அதட்டினான் ஹக்கீம்.
பஹீரா திடுக்கிட்டு நின்றாள்.
"வர வர உன் சேட்டை அதிகமாகிட்டே போகுது. படிக்குறதுல மட்டும் கவனம் செலுத்து. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்" என்று கூறி அங்கிருந்து சென்றான் ஹக்கீம்.
எதற்கு ஹக்கீம் கோபப்படுகிறான் என்று புரியாத பஹீரா சோகமாக அமர்ந்தாள். விளக்கின் ஒளியில் எதோ ஒரு பொருள் மின்னியது. அதை எடுத்த பஹீரா அது ஒரு புகைப்படம் என தெரிந்துகொண்டாள். அந்த புகைப்படத்தில் அமேலியா தன் தாய் தந்தையுடன் இருந்தாள்.
அமேலியாவின் இடிந்த வீட்டினுள் இருந்தபடி அந்த புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் பஹீரா.
தொடரும்...
{kunena_discuss:983}