அவள் ஏற்கனவே ஓராண்டு நர்சிங் படிப்பை முடித்திருந்ததால் அதிலேயே அவள் தொடர முடியுமா? இல்லை மருத்துவ படிப்புக்கு புதிதாக அவளை சேர்த்து விடலாமா என்ற யோசனையை சொல்லி ருத்ராவும் மிதுர்வனும் ஆலோசித்து அவளையும் கேட்க எதற்கும் பிடி கொடுக்காமல் அவள் பதில் கூறி கொண்டிருந்தாள்.
தனக்கென ஒரு புதிய சுடிதாரை வைத்து கொண்டு அதே நிறத்தில் ஸ்ரவந்தியையும் ஒரு சுடிதாரை போடும் படி, காலையில் தான் தான் ஸ்ரவந்திக்கு 'மேக் அப்' பண்ணி விடுவேன் என்றும் ருத்ரா ஒரு புறம் வழவழக்க மிதுர்வன் அவளை கேலி செய்து கொண்டிருந்தான். ஆனால் மனம் முழுவதும் சந்துருவே நிறைந்திருக்க, அவர்களை கவனியாமல் எப்போது தனியே விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாள் ஸ்ரவந்தி.
"அண்ணி பாருங்க அண்ணி அண்ணாவை.. பேசாம இந்த நீளமான முடியை என்னை மாதிரி வெட்டி விட்டுக்கோங்க அப்போ இன்னும் அழகா இருப்பிங்க அப்போ தான் அண்ணா நான் சொல்றது சரின்னு ஒத்துக்குவாங்க"
"ஏய் வாலு அவ கிட்ட பிடிச்சதே இந்த முடி தான்" என்று முதன் முதலில் அவளுக்கும் உணர்த்துமாறு சொல்லி விட்டு சற்று தள்ளி இருந்தவளின் பின்னலை ஒரு கையால் மிதுர்வன் எடுக்க, சட்டென எழுந்தவள்
"எ..எனக்கு தலை வலிக்குது நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்" என்று கூறி விட்டு அறைக்கு சென்று விட்டாள்.
மிதுர்வனின் முகம் சட்டென்று விழுந்து விட ருத்ராவும் சற்றே அதிர்ந்து போனாள். ஆனால் உடனே ஏதோ தோன்ற,
"பாவம் இன்னைக்கு அலைச்சல் ஹோட்டல் 'ஏசி' வேற, அதான் தலைவலி போல.. ரொம்ப மென்மையா இருக்கா" என்று மிதுர்வன் சிறு முறுவலோடு கண்களில் கனிவோடு சொல்ல, ருத்ராவும் இயல்பு நிலைக்கு வந்தாள்.
அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்ட ஸ்ரவந்தியால் தன் நினைவின் கதவுகளை சாத்த முடியவில்லை.
‘ஸ்ராவனி’
‘என்னை ஏமாத்திட்டியா ஸ்ராவனி?’
அவனின் அந்த கேள்விகள் அழுந்த புதைந்திருந்த அவள் நினைவு குப்பைகளை கிளறி விட்டது!! குவியல்கள் என்று கூட சொல்ல இயலாது வேண்டாத நினைவலைகளின் தாக்கம் அதனால் ஏற்பட்ட பிம்பங்கள் அவை தரும் இந்த ரணம்..!! அவை குப்பைகள் தானே??!!!
இதே கேள்வியை கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அவன் கேட்டிருந்தால்? அதாவது அவளுக்கு நந்தகுமாரனுடன் கல்யாணம் என்று நிச்சயம் செய்தார்களே அப்போது கேட்டிருந்தால்? ஒரு முறையேனும் அவன் இந்தியா வந்திருந்தால்? இவளை பார்த்திருந்தால்? இவள் இருந்த நிலையை...???
முடியவில்லை.. சத்தியமாய் அந்த நாட்களை நினைக்க கூட அவளால் முடியவில்லை!!
கதவருகில் இருந்து நகர்ந்து மெத்தை மேல் சென்று அமர்ந்து கொண்டாள். இப்போது யாரிடம் சொல்வது உண்மையை?! மிதுர்வனிடமா இல்லை சந்திரேஷிடமா?? ஏன் எப்போதும் என்னை வாழ்க்கை இப்படி திக்கில்லாத காட்டில் ஒரு வழியை காட்டி அதில் பயணிக்கையில் வலி மாற்றி விட்டு கைகொட்டி சிறிது வேடிக்கை பார்க்கிறது.
அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. ஆனால் எந்த நேரமும் மிதுர்வன் உள்ளே வந்து விடுவான்.. அழக்கூட தகுதியும் நேரமும் அற்ற நிலை தனக்கு ஏற்படுமா என்று அவள் நினைத்து பார்த்ததில்லை..!!
மாற்றுவதற்கு உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு சென்று சற்று நேரம் அழலாம் இந்த எண்ணம் எழுந்து அவள் மெத்தையை விட்டு எழும் முன்னே மிதுர்வன் உள்ளே நுழைந்தான். 'ச்சை' மனசுக்குள் சலித்துக் கொண்டு அப்படியே அமர்ந்தவள் அவனுக்கு முகம் காட்டாமல் திருப்பிக் கொண்டாள்.
அவள் அருகே வந்தவன் அவள் தலையை வருடி,
"தலைவலி எப்படி இருக்கு டா? மாத்திரை தரவா? இல்லை சூடா பால் சாப்பிடறியா?" என்று வினவவும் அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள், அவன் மேல் சாய்ந்து அழைத்துவங்கினாள். முதலில் பதறி தன்னை விலக்கி கொண்டு விளக்கம் கேட்க நினைத்தவன், அவள் இருகைகளாலும் தன் இடுப்பை சுற்றிவளைத்து வயிற்றில் முகம் புதைத்து அழ அவள் சற்று நிதானத்திற்கு வரட்டும் என்று காத்திருந்தான்.
வெகு நேரம் அவளை அழ விட்டு பின்பு அவளை நிமிர்த்தி தன் கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்துவிட்டவன் அவள் அருகே அமர்ந்து அவள் முகத்தை கையில் ஏந்தி என்ன என்பது போல் தலையசைக்க, அப்படியே அவன் தோள்களில் சாய்ந்து சில மணித்துளிகளில் உறங்கி போனாள்.
அவளை ஒழுங்காக படுக்க வைத்துவிட்டு சற்று நேரம் யோசித்து கொண்டிருந்தவன் தன் பாட்டியை தொலைபேசியில் அழைத்தான்!!
"ஹலோ"
"ஹலோ.. யாரு.. துருவா.. அய்யா நீயா?"
"ஆமாம் பாட்டி, எனக்கு உங்க கிட்ட ஒரு விஷயம் அவசரமா கேட்கணும் அதன் இந்த நேரத்துல தொந்தரவு பண்றேன் சாரி பாட்டி"