"இந்த பிரச்சனையே வேண்டாம் னு தான் நானும் அர்ப்பணாவும் ஜோடியாக இனி நடிக்கல னு முடிவெடுத்தோம் "
"பல சிக்கல்களுக்கு நடுவில் மிளிர்வது தான் நட்சத்திரங்களுக்கு பெருமை. இதெல்லாம் எங்களுக்கு இல்லனு பீல் பண்ணுறது விட, எது இருக்கோ அதை பயன்படுத்தனும்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம் சொல்லவா? "
என்ன என்பது போல அவர்கள் பார்க்க, " வெற்றி அவனுடைய முதல் படத்துல நீங்க ரெண்டு பேரும் தான் ஜோடியாக நடிக்கனும்னு முடிவெடுத்தான் " என உண்மையை உரைத்தாள் கண்மணி.
மறக்க முடியாத வலியெனும் சுழலில் மாட்டபட்டு இருந்தாள் சுதர்சனா. அவளை வார்த்தையெனும் வலைவீசி மீட்க வேண்டிய வெற்றியோ மௌனமாக இருந்தான். அவளுக்கு நடந்த கொடுமைகளை அவனும் அறிவான்தான்! ஆனால் இன்றும் இவள் உயிரோடு இருக்கிறாளே? இவளின் பெற்றோர் எங்கே? எங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று வாய்மொழிந்தார்களே !அதுவும் பொய்யோ? என்றால் இப்போது இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் ? இவளின் அடையாளம் தான் என்ன?
இப்படி அவனிடமிருந்து கேள்விகள் உதயமாகின. இருப்பினும் மௌனமொழியை அவள் எப்படி அறிவாள்? தன்னை எண்ணி மிகவும் வருந்துகிறான் போலும் என்று அவனின் மௌனத்தை மொழிப் பெயர்த்தவள் வெற்றிக்கு குடிக்க குளிர்பானம்கொண்டு வந்தாள்.
“இந்தா குடி வெற்றி!”
“ இல்ல வேண்டாம்மா”
“ப்ச்ச்.. விருந்தோம்பல் தமிழ் பண்பாடு இல்லையா? என்னை கொஞ்சம் தமிழ் பெண்ணாக நடந்துக்க விடேன்!” என்று இயல்பான தொனியில் பேசினாள் சுதர்சனா.அவளின் இயல்பான பேச்சினை கெடுக்க விரும்பாதவனாக லேசாய் புன்னகைத்தான் வெற்றி.
ஏதோ ஒன்று வெற்றியை கூனி குறுக வைத்தது. தானும் ஓர் ஆண்தான் என்ற அடையாளம் முதன்முறையாக கசந்தது. பெண்கள் மெல்லினமானவர்கள், பூ போன்றவர்கள், என்று கொண்டாட வேண்டாம்.ஆனால் “சக உயிர்” என்ற எண்ணம் கூடவா சில ஆண்களுக்கு இல்லாமல் போனது?
கற்பு,கர்ப்பம் இதெல்லாம் ஏன் பெண்ணுக்கு மட்டுமே அடையாளமாகியது? உடலுறவு என்பது ஏன் பெண்ணை மட்டும் பன்மடங்காய் பாதிக்க,ஆனோ சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு போய் விடுகிறான்.
“ச்ச..” என்று பற்களை கடித்தான் வெற்றி. அவனது உடல்மொழியைக் கண்டுகொண்டாள் சுதர்சனா.
“யாரோ செய்த தீங்குக்கு இவன் ஏன் நோகிறான்?” முதன்முறையாக அவன்மீது நல்லதொரு அபிப்பிராயம்ன் வந்தது அவளுக்கு!
“நீ என்ன பண்ணுற வெற்றி?” என்றாள். தன்னைவிட இளையவள்தான். இருப்பினும் அவள் வாழ்வில்கண்ட வலிகளும்,இன்று கண்ணில் காட்டும் தைரியமும்,அவளைப் பெரியவளாகவே காட்டியது.
“நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கேன்!”
“ஓஹோ .. ஞாபகம் வந்துருச்சு… அன்னைக்கு அவார்ட் ஃபங்க்ஷன்ல டீவியில உன்னை பார்த்தேனே.. அப்போவே யோசிச்சேன் உன் முகம் பரிட்சயமாய் இருக்கேனு!” என்று புன்னகைத்தாள் அவள்.
“ம்ம்” என்று நிறுத்திக் கொண்டான் வெற்றி. இன்னமும் அவனால் இயல்பாகிட முடியவில்லை. அதை உணர்ந்தவள் பேச்சைத் தொடர்ந்தாள்.
“ என்ன மாதிரி படம் பண்ணலாம்னு இருக்க வெற்றி?”
“என்ன மாதிரின்னா?”
“அஹெம்..சினிமாவைப் பற்றி எனக்கு ரொம்பவும் தெரியாது.. ஒரு ரசிகையா வேணும்னா உனக்கு பதில் சொல்லவா?”
“கண்டிப்பா.. ரசிகனுக்குத்தான் எப்பவுமே உண்மையான சினிமாவைப் பற்றித் தெரியும்..”
“ஹ்ம்ம்.. டைரக்டர்ஸ் பலவிதம் இருக்காங்க.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருமோட்டிவ் இருக்கும்”
“ம்ம்” கன்னத்தில் கை வைக்காத குறையாய் அவள் சொல்வதை கவனிக்க ஆரம்பித்துவிட்டான் வெற்றி.என்னத்தான் இருந்தாலும் சினிமா அவனது முதல் காதலாச்சே! அதனால் அதைப் பற்றி பேசிடவும் கேட்கவும் ஆர்வமாகினான் அவன்.
“சில டைரக்டர்ஸ் கு படம் என்பது ஒரு இனிய பொழுதுபோக்கு..எப்பவும் வேலை டென்ஷன்னு இருக்குற மக்கள் நம்ம படத்தை பார்த்து ரசிச்சு சிரிச்சு மனசை லேசாக வெச்சுக்கிட்டா போதும்னு நினைக்கிறவங்க ஒரு ரகம்!”
“ஹ்ம்ம்”
“ இன்னொரு ரகத்தினர் இதுக்கு அப்படியே நேரெதிர். அடிக்கடி படம் கொடுக்கலன்னாலும் எப்பாவாச்சும் வரும் ஒரே படமும் நச்சுன்னு இருக்கனும். தங்களோட படம் பார்க்கறவங்க மனசுல ஒரு தாக்கம் இருக்கனும்னு ஆசைப்படுவாங்க..”
“ஹ்ம்ம்”
“அதுக்காகவே சில நேரம் சோகமான க்லைமாக்ஸ் வைப்பாங்க!”