"ரொம்ப தேங்க்ஸ் சார்!இவ்வளவு தூரம் வந்ததுக்காக!"
"பரவாயில்லை சார்!அது என் கடமை!"-மிக பணிவுடன் உரையாடினான் அசோக்.அவன் பார்வை சற்றத் தொலைவில் சிறிதும் அலுப்பு பாராமல் மழலைகளுடன் உரையாடிக் கொண்டிருந்த சிவன்யாவிடம் பதிந்தது.அவ்வளவு நேர விழாவிலும்,அப்போது தான் மலர்ந்த புத்தம்புது தாமரை மலராய் தெரிந்தாள் அவள்.
"சிவன்யா!இங்கே வாம்மா!"-தலைமையாசிரியரின் குரலில் கலைந்தான் அவன்.அவன் முகம் பார்த்ததும் கூடியிருந்த மலர்ச்சி அப்படியே தொலைந்துப் போனது சிவன்யாவின் எழில் முகத்திற்கு!!தயங்கியப்படியே அங்கு வந்தாள்.
"இவங்க தான் சார் எல்லாத்தையும் ரெடி பண்ணது!ரொம்ப கேர் எடுத்து பண்ணாங்க!பெயர் சிவன்யா!"-என்று புகழாரம் சூட்டியப்படி சென்றார் அவர்.
"சிவன்யா ஒரு நிமிடம் பேசிட்டு இரும்மா!இதோ வரேன்!"-அவரும் விடைபெற,ஏனோ,அத்தனிமையில் அவள் இதயத்துடிப்பு உச்சத்தைத் தொட்டது.கனத்த மௌனம் சில நொடிகளில்!!!
"மன்னித்துக்கோங்க சார்!"-மௌனத்தை கலைத்தாள் சிவன்யா.
"ம்???"
"நீங்க யாருன்னு தெரியாம அன்னிக்கு நான்...."
"தெரிந்திருந்தால் மழையில நனையவிட்டு போயிருப்பீங்களா?"-புன்னகையுடன் கேட்டான் அசோக்.
"ஐயோ!இல்லை...அது...வந்து...."
"தேங்க்யூ!"-அவள் தொடங்கிய வாக்கியத்தை அவன் முடித்து வைத்தான்.பதில் கூற தெரியாமல் தவித்து நின்ற பெண்ணின் படபடப்பு அவனுக்குப் புரியாமல் இல்லை.
"ஆ....உங்களுக்கு வொர்க் இருந்தா நீங்கப் போங்க!"-தப்பித்தால் போதும் என்றிருந்தவளுக்கு அவன் கூற்று ஒரு உந்துதலை அளிக்க,அவனைக் கடக்க ஓரடி முன் வைத்தாள் சிவன்யா.
"ஏ....!"-என்று கத்தியப்படி,உற்சாகத்தில் கண்மண் தெரியாமல் அங்கு ஓடி வந்த இரு மழலைகள்,விளையாட்டு சுவையில் சிவன்யாவின் மீது மோத,சட்டென நிலை தடுமாறியவள்,நிலம் நோக்கி ஈர்க்கப்பட்டாள்.
"ஜாக்கிரதை!"-மனம் ஒரு நொடியில் பதறிவிட,இடம்,பொருள்,ஏவல் எதைக் குறித்தும் சிந்திக்காமல் அவளைத் தாங்கினான் அசோக்.சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை இரு இதயங்களுக்கும்!!!சட்டென அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் சிவன்யா.ஏதும் பேசவில்லை....உடனடியாக அவன் பார்வையிலிருந்து விலகி மறைந்தாள் அக்கன்னிகை.அவன் நிலையோ அவளைவிடவும் மோசம் தான்!!அன்றுவரை தாயை தவிர்த்து எந்தப் பெண்ணின் அருகாமையையும் உணர்ந்ததில்லை அந்த ஆண் மனம்!!கனவுலகிலும் தனக்கென்ற கன்னிகையை அவன் உருவாக்கியதில்லை!ஆனால்,திடீரென கிட்டிய நெருக்கம் அதுநாள் வரை அவன் உணராத உணர்வினை உணர வைத்தது!!சில நொடிகள் சுவாசிக்கவும் மறந்து நின்றிருந்தான்!!!அறியாமல் நடந்த அந்நிகழ்வு இதயக்கூட்டினில் மிக ஆழமாய் பதிந்து உயிரை வாங்கியது!!
பள்ளியிலிருந்து இல்லம் வந்தவளுக்கோ உலகம் சுழலாமல் நின்றதாய் ஓர் உணர்வு நெஞ்சத்துள்!!தனதறையின் காவலனுக்கு,அதாவது,கதவிற்கு எவரையும் அனுமதியாதே!என்ற ஆணையை பிறப்பித்தவள்,எண்ணற்ற சிந்தனையின் பிடியில் சிக்கித் தவித்தாள்.உதவி செய்தது ஒரு ஆட்சியருக்கா என்ற அதிர்வுநிலை ஒரு புறம்!!காலம் அவன் பிடியுள் தன்னைக் கிடத்தி விளையாடிய விளையாட்டின் நினைவுகள் மறுபுறமாய் தன்னை மறந்திருந்தாள் சிவன்யா.நடந்தவை அனைத்தும் அசாதாரணமாகவே தோன்றியது அவளுக்கு!!என்னச் செய்வது ஜெகத்தினில் விதியை வென்றவர் யார்???அவன் உறுதியான கரம் பதிந்த அங்கம் சற்றே வலிக்கூட்டி நிகழ்ந்த நிகழ்வை நினைவூட்டியது.
"ப்ச்...!என்ன நான்?யாரோ ஒருத்தனைப் பற்றி யோசிக்கிறேன்!எனக்குப் பிடிக்கவே இல்லை!அது எதேர்ச்சையான விஷயம் தானே!"-தன் தலையில் தானே குட்டிக்கொண்டு,தன் அறையை தியாகித்து வெளி வந்தாள் அவள்.
"மா!ஒரு காப்பி!"-என்று கத்திவிட்டு சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.
"மண்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு உதகை ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!"எடுத்த எடுப்பில் ஔிப்பரப்பானது அச்செய்தி!!!
சட்டென தேகத்தின் அங்கம் எங்கிலும் இனம் புரியா உருமாற்றம் பிறந்தது அவளுக்குள்!!!அவன் முகத்தை காணும் போது ஏற்படும் மாற்றத்தை எந்த வகையில் சேர்ப்பது என்றே புரியாமல் தவித்தாள் அவள்!!அனைத்திற்கும் காரணம் என்ன?எது அவனை காண்கையில் இப்படி ஓர் மாற்றத்தை நிகழ்த்துகிறது???இது நியாயம் தானா???
"அடியே!"-தாயின் மிரட்டல் அவளை சுய நினைவை அடைய செய்ய,பதறிக் கொண்டு மன உறக்கத்திலிருந்து விழித்தாள் சிவன்யா.
"மா?"
"என்னடி?வைத்த கண் எடுக்காம டி.வி.யை பார்க்கிற?"
"ஒண்ணுமில்லைம்மா!"
"அது சரி...காப்பி வைத்திருக்கேன்.குடி!நான் சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிட்டு வரேன்!"