15. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்
“என்னடா ரூபின், நடக்குது இங்க?!” ஆச்சரியமாக கேட்டான் வேதிக்.
“அந்தக் கொடுமையதா, நானும் புரியாம பார்த்திட்டிருக்க” ஆதங்கத்துடன் வார்த்தைகள் வெளிவர, முகத்திலோ வெறுப்பு பரவியிருந்தது.
வாய் பேசனாலும் கவனம் முழுவதும் நிற்க நேரமின்றி சுழன்று கொண்டிருந்த ஜெய்யின் மேல்.
இன்று, பிரியா விடை பெறும் கடைசி ஆண்டு மாணர்வர்களுக்காக மேடை அலங்கரிக்க பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான வேறு சில ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த ஜெய்யோடு சரயூவும் சௌம்யாவும் சேர்ந்து கொண்டனர். சற்று முன் வரை தங்களோடு உட்கார்ந்திருந்தவர்களோ, இப்போது மேடையிலிருந்த ஜெய்யிடம் பேசிவிட்டு ஆளுக்கொரு வேலையை செய்ய சென்றதும்,
“இவ்வளவு நேரமா இவனுக்கு மட்டும்தா பைத்தியம் பிடிச்சிருக்கானு யோசிச்சிட்டிருந்த, இப்போ இவங்களுக்கும் என்ன வந்ததுனு அங்க போனாங்க?” கோபமாக கேட்டவன் அவசரமாக எழுந்து வேதிக்கின் கையை பிடித்து இழுத்தான்.
“வா மச்சா! இங்க என்னதா நடக்குதுனு அவன கேட்ருவோம்”
முகத்தில் கோபமும் வெறுப்பும் கலந்திருக்க இருவரும் வேகமாக நடந்து மேடையை அடைந்தனர்.
“என்ன செஞ்சிட்டிருக்க ஜெய்?” கோபமாக கேட்டான் ரூபின்.
தோரணங்களாக தொங்க விடப்பட்டிருந்த அலங்கார துணியொன்றில் பூங்கொத்தை நிறுத்திக் கொண்டிருந்த ஜெய் திரும்பி
“பார்த்தா எப்படி தெரியுது ரூபின்?” என்றான் சிறு புன்னகையோடு.
‘என்ன நக்கலா?’ என்ற கேள்வியை விழிகளில் தேக்கி ரூபின்,
“எங்களுக்கு அது தெரியாதா?” காட்டமாக விடையளித்தான்.
“அப்பறம் என்னை எதுக்கு கேட்ட?”
ஜெய்யின் பதில் கேள்விக்கு ஏதோ சொல்ல வந்த ரூபினை முந்தினான் வேதிக்,
“எல்லா மறந்து போச்சா மச்சா? அந்த கிரணால ஒரு மாசம் காலேஜிலிருந்து சஸ்பென்ட் ஆனத மறந்திட்டு, எப்படி உன்னால அவன் ஃபேர் வெல்-கு இப்படி மாங்கு மாங்குனு வேலை செய்ய முடியுது?”
வேதிக் முடிப்பதற்காகவே காத்திருந்தவன் போல் ரூபின் ஆரம்பித்தான்.
“அது நடந்ததிலிருந்து நேத்து வரைக்கும் அவனை விட்டு தூரமாதான நின்னுட்டிருந்த? இன்னைக்கு என்னாச்சு? ஒரு வேளை அந்த கிரண் செய்தது சரினு நினைக்கிறியோ? அதனாலதா இப்படியோ?”
இவர்களின் கேள்விகளை கண்டுகொள்ளாது பூவை துணியோடு சேர்த்து நிறுத்துவதில் முனைந்திருந்தவனின் செயல் ரூபினின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றியது. சட்டென ஜெய்யின் கையை பிடித்து இழுத்தான். கையிலிருந்து பூங்கொத்து கீழே விழுந்து சிதறியது.
மேடையின் இன்னொரு முனையிலிருந்து இவர்களை கவனித்து கொண்டிருந்த சௌம்யா ஓடி வந்து,
“எதுவாயிருந்தாலும் கொஞ்ச அமைதியா பேசு ரூபின்” என்றுவிட்டு சிதறியிருந்த பூக்களை எடுக்க ஆரம்பித்தாள்.
சௌம்யா அவசரமாக ஓடியதில்,
‘எங்க இத்தன அவசரம்?’ நினைத்தபடி திரும்பிய சரயூ அப்போதுதான் அவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பதை கவனித்தாள்.
கோபத்தில் சிவந்திருந்த ரூபின் சஞ்சயின் கையை பிடித்திருப்பது தெரிந்தது.
என்ன தோன்றியதோ வேகமாக அவர்களை நெருங்கினாள்.
ரூபின் பிடியிலிருந்த ஜெயின் கையை விடுவித்து அவன் தோளோடு சாய்ந்து நின்றபடி அவனை முறைத்தாள்.
‘இப்போ என்ன செஞ்சனு இவ இப்படி முறைக்கிறா?’
ஜெய்யின் கையை தான் கோபமாக பிடித்திருந்ததை மறந்தவனாக குழம்பினான் ரூபின்.
ஜெய்யோ இமைக்கவும் மறந்து தன் இடது தோளில் சாய்ந்திருந்த சரயூவை காதலாகப் பார்த்தான்.
‘உனக்கு இன்னுமா புரியல சரூ! யாராவது எங்கிட்ட உரிம எடுத்துகிட்டாலும் கோபப்பட்டாலும் உன்னால் தாங்க முடியலையே... அது ஏன்னு யோசிச்சு பாத்தியா? என்னை ஃப்ரெண்டா மட்டும் நெனச்சா உனக்கு இந்தக் கோபமே வரக்கூடாது சரூ. உன்னை நான் புரிஞ்சிக்கிட்ட. நீ இதை எப்போ தெரிஞ்சுக்க போற சரூ? ப்ளீஸ் என்னை தவிக்கவிடாதடா!’
அவன் மனதின் ஏக்கம் அவளை எட்டியதோ?
சட்டென திரும்பி அவனை ஒரு முறை கனிவுடன் பார்த்துவிட்டு ரூபினிடம் திரும்பி முறைப்பை தொடர்ந்தாள்.
அவளின் பார்வையில் ஜெயிடம் ஒரு பெருமூச்செழுந்தது.
இவர்களை கவனித்தபடி நின்றிருந்த சௌம்யா, “போதும்டி முறைச்சது! இங்க என்ன நடந்ததுனே தெரியாம ரூபின்ட்ட கோபப்படாத!”