இப்போது சௌமியாவை காதலாகப் பார்ப்பது ரூபினின் முறையானது.
‘இங்க என்னதான் நடக்குதோ கருமம்! பரபரப்பாய் போக வேண்டிய சீனை இப்படி அவ அவ ரொமான்டிக் சீனா மாத்திட்டானுங்களே’ என்று நொந்து கொண்ட வேதிக்,
ரூபின் தோளை பிடித்து உலுக்கி, அவனை தன்புறமாக திருப்பி முறைத்தான்.
“என்னங்கடா! ஆளாளுக்கு என்னை முறைக்கிறதயே வேலையா வச்சிருக்கீங்க?”
“நாம எதுக்கு இங்க வந்தோம்னு மறந்திட்டு ஏன் முறைக்கிறேன்னு வேற கேட்குறீயா?” என்றான் வேதிக் காரமாக.
மேலும் வேதிக், “எனக்கு பதில் சொல்லிட்டு நீ என்ன வேணா செய்திக்கோ மச்சா! அந்த கிரணை அப்போவே உண்டு இல்லைனு செய்திருப்போ... நீதான் எங்களை எதுவும் வேணாம்னு தடுத்துட்ட. சரின்னு நாங்களும் உன் பேச்சுக்கு கட்டுபட்டு எதுவும் செய்யல. ஆனா இப்போ அவனோட ஃபேர்வெல்கு நீ என்ன செய்ஞ்சிட்டிருக்க?”
இளம் புன்னகையோடு நின்றிருந்தான் ஜெய்.
“சொல்லு ஜெய்! அவன்தா கேட்குறாயில்ல” ரூபினின் குரலில் கோபம் கூடியிருந்தது.
“என்னடா சொல்ல சொல்லுறீங்க? ‘காலேஜ் டேஸ் ஆர் கோல்டன் டேஸ்’ இங்கிருந்து போனதுக்கு பிறகு யாருக்குமே திரும்ப கிடைக்காது. நமக்குள்ள வர சின்ன சின்ன பிரச்சனைகளை ஒதுக்கி வச்சிட்டு எல்லோரடவும் சந்தோஷமாயிருக்கறதுதா நமக்கு நல்லது. இப்போ பிரிஞ்சு போனா, நம்மள்ள சில பேர திரும்பவும் பார்க்க கூட முடியாம போகலாம். எல்லாரோட தப்பையும் மன்னிச்சுட்டா நமக்குள்ளவும் எந்த வன்மமும் இல்லாம நிம்மதியாயிருக்கலாம்”
வேதிக், “நீ சொல்லறதெல்லாம் சரினே வச்சுக்குவோம்! ஆனா அந்த கிரண் பண்ணத எப்படிடா மறக்குறது?” என்றவனின் பார்வை சரயூவிடத்தில்.
அவளோ ஜெய் என்ன சொல்ல போகிறானென்று ஆவலாக அவனைப் பார்த்திருந்தாள்.
“அன்னைக்கு கிரண் செய்தது தப்புதா. அதுக்காக அவனை காலம் முழுக்க வெறுக்கனும்னு அவசியமில்லையே. சஸ்பென்ஷன் முடிஞ்சு நாங்க ரெண்டு பேரும் திரும்பி வந்ததிலிருந்து அவன் என்னை முறைச்சிட்டிருந்தாலும், சரூவை தொந்தரவு செய்யலை. அவனை நான் அடிச்சதுதா பிரச்சனை. இப்போ ஒரு ஜூனியர் வந்து உங்களை அடிச்சா, அதை சுலபமா விடமுடியுமா? அதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்குமா? அதேதா கிரண் விஷயத்திலும் நடந்தது. எல்லா முடிஞ்சு ரெண்டு வருஷமாச்சு இன்னமு அதையே நினைச்சிட்டிருந்தா என்ன அர்த்தம், சொல்லுங்க? இதோ இன்னைக்கு ஃபேர்வெல் அப்புறம் எக்சாம் முடிஞ்சா அவனை நாம பார்க்க கூட மாட்டோம். நாம இந்த காலேஜ விட்டு போகும்போது அவனை மறந்து கூட போகலாம். அதை புரிஞ்சுக்காம, அவனையே நினைச்சுகிட்டு இன்னைக்கு நடக்குற ஃபேர்வெல்ல கலந்துக்காம இருக்கிறதால ஒரு பயனுமில்ல. உங்களால முடிஞ்சா வந்து எங்களுக்கு உதவுங்க, இல்லைனா கிளம்பி வீட்டுக்கு போங்கடா”
ஜெய் பேசி முடிக்கவும் ரூபின் பாய்ந்து அவனை அணைத்து கொண்டான்.
“நீ நல்லவன்னு தெரியும்! ஆனா இவ்வளவு நல்லவனு தெரியாம போச்சே!” வடிவேல் பாணியில் ரூபின் சொல்லவும்
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்கிட்ட சண்டை போட்டுட்டு, இப்போ எதுக்கு இப்படி ஒரு ஹக்? போடா தூர” என்று ரூபினை ஜெய்யிடமிருந்து விலக்கினாள் சரயூ.
“முடியாது! அவன் என்னோட ஃப்ரெண்டு... நாங்க ஒரு நிமிஷம் அடிச்சிக்குவோ மறுநிமிஷமே கட்டிக்குவோ. எங்க நட்புல நீ என்ன... யாருமே குறுக்க வரமுடியாது” சரயூவிடம் சொல்லிவிட்டு “நான் சொல்றது சரிதானே மச்சா!” மறுபடியும் ஜெய்யை அணைத்தான்.
சரயூ அவனை முறைத்தது தெரிந்ததும்.. அதோடு நிறுத்தாமல்,
“நீ மட்டும் ஏன் தனியா நிக்கிற மச்சா! இங்க வா” என்று வேதிக்கையும் தங்களோடு சேர்த்து கொண்டான்.
அவன் சீண்டியதில் பொங்கிய சரயூ,
“ரூபினை கொஞ்சம் அடக்கி வை சௌமி! இல்லைனா விளைவு விபரீதமா இருக்கும்”
‘இவனுக்கு என்ன தண்டனை? பத்தா? இல்ல..இல்ல.. கொறஞ்சது இருபதாவது தேவைப்படும். பேக்ல இருக்கிற பேதி மாத்திர பத்துமா? எதுல கலந்து கொடுக்கலாம்?’
உடனடியாக காரியத்தில் இறங்க முடிவெடுத்து தனது பையை எடுக்க சென்றாள்.
மேடையை அலங்கரித்து கொண்டிருந்ததால், எல்லோரும் அவர்களின் பைகளை மேடையின் கீழே ஒரு மூலையில் போட்டிருந்தனர்.
அவள் பையை எடுக்க சென்றபோது, அங்கே கிரண் நின்றிருந்தான்.
‘இவன் எப்போ வந்தா? என்ன ஏழரைய கிளப்புவானோ?’ கேள்வியும் குழப்புமாக அசையாது நின்றவளை கலைத்தது அவன் குரல்.
“சாரி சரயூ! அன்னைக்கு நான் நடந்துகிட்டது தப்புதா. என்னை மன்னிச்சிரு”
கிரணால் ஏதாவது பிரச்சனை வருமென்று எதிர்பாத்த சரயூ, அவன் மன்னிப்பு வேண்டியதில் முற்றிலும் குழம்பி போனாள்.