20. என் இனியவளே - பாலா
இளவரசனின் அக்கினி பார்வையை இனியாவால் தாங்க இயலவில்லை. தலை குனிந்தவாறே நின்றாள்.
“என்னம்மா இதெல்லாம். ஏன் இப்படி பேசுற” என்றார் ராஜகோபால்.
நிமிர்ந்த இனியா இளவரசனின் பார்வை தன்னிடமே இருப்பதை கண்டு மீண்டும் தலை குனிந்தாள்.
“இப்ப உங்க பொண்ணு என்ன தான் சொல்றான்னு கேட்டு சொல்லுங்க மாமா” என்றான் இளவரசன்.
“இனியா இது உன் லைப். சோ இதை நீ எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு முடிவு பண்ணாத. எனக்கு புரியுது. இப்ப நிறைய பிரச்சனை நடந்து போச்சி. அதனால நீ குழம்பி போயிருக்கலாம். உன்னால இப்ப தெளிவான முடிவு எடுக்க முடியாம கூட போயிருக்கலாம். அதனால கொஞ்சம் பொறுமையா யோசி. இப்படி திடீர்னு முடிவெடுக்காத” என்றார் ராஜகோபால்.
ஒரு ஆழ்ந்த மூச்செடுத்த இனியா “இல்லப்பா. எடுத்த உடனே இவ்வளவு பிரச்சனை. இந்த பேச்சை இதோட விட்டுடுங்கப்பா” என்றாள்.
இளவரசனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து “நான் வரேன் மாமா” என்று விட்டு கிளம்பினான்.
அவனுடனே கூட வந்த ராஜகோபால் “அவ பேசறதை நீங்க இப்ப பெரிசா எடுத்துக்காதீங்க. அவ கொஞ்சம் கன்புயூஸா இருக்கா” என்றார்.
அவன் அதற்கு ஏதும் சொல்லாமல் திரும்ப “நான் வரேன் மாமா” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
திரும்பி வந்த ராஜகோபால் இனியாவிடம் “நீ செஞ்சது எனக்கு என்னவோ சரியா படலைம்மா. இந்த விஷயத்தை கொஞ்ச நாளுக்கு தள்ளி போடணும்னு நீ யோசிச்சிருந்தா அது நல்லது தான். அப்படியில்லைன்னா நீ திரும்ப யோசிக்கணும்னு தான் நான் சொல்லுவேன். அந்த பையன் உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கான். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இது வாழ்க்கை. அதை கெடுத்துக்காத”
தன் மகளுக்கு அட்வைஸ் செய்து பழக்கம் இல்லை என்பதால் அதற்கு மேல் ஏதும் கூற இயலாமல் சென்று விட்டார்.
தன் தந்தை சொல்லி விட்டு சென்ற பின்பு இனியாவிற்கு தான் செய்தது சரியா தவறா என்றே தெரியவில்லை. இளவரசன் புரிந்து கொள்வான் என்றே அவள் எண்ணினாள். ஆனால் இப்போதோ பிரச்சனை பெரிதாகி கொண்டே போகிறது. ஒருவேளை முதலிலேயே அவரிடம் பேசி இருக்க வேண்டுமோ? ஆனால் அதற்குள் இவர்கள் திருமணமே நடத்தி விடுவது போல் பேசினால் நான் என்ன செய்வது என்று மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் இனியா.
நேரே வீட்டிற்கு வந்த இளவரசன் எரிமலையின் நிலையில் இருந்தான். ஹாலில் இருந்த தாயிடமும் சந்துருவிடமும் ஏதாவது கோபமாக பேசி விடுவோமோ என்று எண்ணியவன் அவர்களிடம் ஏதும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டான்.
ஆழ்ந்து யோசித்த இனியா இளவரசனிடம் பேசி விடுவது என்று எண்ணி அவனுக்கு போன் செய்தாள். ஆனால் அவனோ போனை கட் செய்து விட்டான். இனியாவும் விடாமல் திரும்ப திரும்ப அழைக்கவும் அவன் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.
கவலையடைந்த இனியா சந்துருவிற்கு போன் செய்து இளவரசனிடம் கொடுக்க சொன்னாள்.
“என்ன அண்ணி. அண்ணனுக்கே பண்ண வேண்டியது தானே” என்றான் சந்துரு.
“இல்ல சந்துரு. கொஞ்சம் ப்ராப்லம். அவர் போன் எடுக்கலை. அதான்” என்று இழுத்தாள்.
“ஓஹோ. அது சரி. அப்படி இல்லன்னா நீங்க எப்படி எங்களுக்கு எல்லாம் போன் பண்ணுவீங்க.” என்று அவளை கிண்டல் செய்த படியே தன் அண்ணனின் அறைக் கதவை தட்டினான்.
அறைக்கதவை திறந்த இளவரசன் “என்ன” என்றான் உறுமும் குரலில்.
அண்ணனின் குரலை கேட்டு திகைத்தாலும், “என்னண்ணே இவ்வளவு டென்ஷன். உன் டென்ஷன் ரிலீப் பண்ண தான் நான் வந்திருக்கேன். இந்தா அண்ணி பேசறாங்க” என்றபடி தன் மொபைலை நீட்டினான்.
“நான் யார் கிட்டவும் பேசலை. முதல்ல நீ கிளம்பு” என்றான்.
சந்துருவும் சளைக்காமல் “என்னண்ணே இப்படி பண்ணிட்டு. சும்மா பேசு” என்று திரும்பவும் மொபைலை நீட்ட, ஏற்கனவே கோபமாக இருந்த இளவரசன் அவன் மொபைலை வாங்கி ஓங்கி கீழே போட்டான். மொபைல் பார்ட் பார்ட்டாக உடைந்தது.
சந்துருவோ அதை பார்த்து திகைக்க, இளவரசன் அதை கண்டு கொள்ளாமல் கதவை ஓங்கி சாத்தி விட்டு சென்று விட்டான்.
சந்துருவால் சிறிது நேரம் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே இயலவில்லை. எப்படியோ அவனை சமாளித்துக் கொண்டு வீட்டு போனில் இருந்து இனியாவை அழைத்தான்.
எடுத்த உடனே “உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை அண்ணி” என்றான்.
“ஏன் கேட்கறீங்க சந்துரு”
“இல்லை. அண்ணன் நார்மலா இவ்வளவு டென்ஷன் ஆகா மாட்டாரு. சொல்லுங்க”
“அவரை ஒரு டைம் என் கிட்ட பேச சொல்லுங்க சந்துரு”
“ஐயோ அண்ணி. புரியாம பேசாதீங்க. உங்க கிட்ட பேச சொல்லி போன் கொடுத்ததுக்கு என் போன் பலிகடாவா ஆகிடுச்சி. தூக்கி போட்டு உடைச்சிட்டாரு”
“என்ன”
“ஆமா. என் போனை உடைச்சிட்டாரு. சொல்லுங்க. அவர் நார்மலா இவ்வளவு டென்ஷன் ஆக மாட்டாரு. என்ன ஆச்சி.”
“இல்லை. நான் அப்புறம் பேசறேன். இப்ப போனை வச்சிடறேன்” என்றவாறு இனியா போனை வைத்து விட்டாள்.
மேற்கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி அவள் முன் நின்றது.