“ஏறி குதிச்சு வெளிய வந்துட்டீங்க....எப்டி உள்ள போறதா ப்ளான்? நான் வந்து ஹெல்ப் பண்ணலாமா....? எங்களுக்கும் கொஞ்சம் ஆர்மி ட்ரெய்னிங் உண்டு....” பேச்சை இயல்புக்கு கொண்டு வந்தான்.
“வாங்க...பாலம்ம இருக்கப்பகூட நீங்க வரலாம்....மாப்ளைய முறச்சுக்க மாட்டாங்க அவங்க...” சிறு சிரிப்போடு அவன் முகம் பார்க்காமல் பேசியபடி நடந்தாள் கிருபா. “ஆனா என் முதுகு தோலைத்தான் உறிச்சிடுவாங்க...”
அடுத்து அவளது ஊருக்கு செல்லும் பேருந்தில் அவனும் பயணம் செய்தான்.
ஏசி கழற்றும் திட்டத்தை ஆண்கள் இருவரும் செயல்படுத்த ஒல்லி ஜீவனி ஏசி விண்டோ வழியாக உள்ளே, சென்று மாடி கதவை திறந்து அனைவரையும் உள்ளே அழைத்தாள்.
அண்ணன் தம்பி இருவரும் ஏசியை திரும்ப பழையபடி பொருத்தி முடித்து இறங்கி தரை தளத்திற்கு சென்றனர்.
அவசர உபசரிப்பு, ஆனந்த் ஜீவனியின் மொபைல் மற்றும் தொலைபேசி எண்கள் பறிமாற்றம், அதற்கான ஆனந்தியின் முறைப்பு, எல்லாம் முடிந்து ஆண்கள் கிளம்ப எத்தனித்த நேரம் மாடியிலிருந்து சிலவகை ரகசிய கடமுடா.
நிஜமாகவே திருடனா...??? கையில் கம்பு கட்டை துடப்பம் சகிதமாக பம்மி பம்மி சத்தமின்றி மாடிக்கு சென்றனர் நால்வரும்.
விண்டோ ஏசி மீண்டுமாக நீக்கபட்டு அந்த விண்டோ வழியாக அவசரமாக நுழைந்து கொண்டிருந்தாள் கிருபா. அவள் உள்ளே நுழைய உதவிக்கொண்டு இருந்தது தேவ்.
“ஹுர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ”
ஆண்கள் கத்த விஷயம் புரிந்து “ஏஏஏஏஏஏஏஏஏஏ” என்றபடி தன் அக்காவை அனைத்துக் கொண்டனர் பெண்கள்.
ஆனால் உள்ளிருந்த நால்வரும் கண்டுகொள்ளாமல்விட்டது கிருபா செய்த ஷ்.....சைகையைத் தான்.
“திருட்டு நாய்களா..!!!!.” உறுமியபடி வரவேற்பறையிலிருந்து மாடிக்கு ஏறும் படியின் முதல் படியில் நின்று இவர்களைப் பார்த்து கத்தினார் பாலம்மை.
பாலம்மை கார் வருவதை பார்த்துவிட்டுதான் ரகசியமாக யார் கவனத்தையும் கலைக்காமல் உள்ளே வர முயன்றாள் கிருபா.
வாசல் வழியாக உள்ளே போய் ப்ரச்சனையை பேசி சரி செய்து கொள்ளலாம் என்று எவ்வளவோ சொன்ன தேவுடைய வார்த்தைகளை செயல் படுத்த அவளுக்கு தைரியம் இல்லை. அதனால் அவளுக்கு உதவினான் தேவ்.
ஆனால் இப்படி தேவுடைய தம்பிகள் உள்ளே இருக்கிறார்கள் என்றோ , இப்படி அலறுவார்கள் என்றோ தேவும் கிருபாவும் எதிர் பார்க்கவில்லை.
மயான அமைதி.
வெளியே நின்ற தேவிற்கு கதவை திறந்துவிட கூட தோன்றவில்லை கிருபாவிற்கு. நடுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
மீதி நான்கு இளசுகளும் சிலையாகி நிற்க
ஏசிக்கான விண்டோ வழியே உள்ளே வந்தான் தேவ்.
“முன் வாசல் வழியா வராம இப்டி ஜன்னல் வழியா வார ஒருத்தன் எங்க வீட்டுக்கு மாப்ளையா வரமுடியாது...” பாலம்மா எகிற
“ஒரு வாரம் இருக்கிறப்ப கல்யாணத்த நிறுத்துனா என் பொண்ணு வாழ்க்கை என்னாகும்...” என்றபடி ஜெயசீலி மயங்கிவிழ
மகள்கள் மூவரும் அவரைப் பார்த்து ஓட, நீண்ட பாலம்மையின் கைகளில் கிடைத்தது கிருபாவின் பின்னந்தலை முடி.
“எல்லாத்துக்கும் உன்ன சாத்துனா சரியா இருக்கும்....உன்னால தான்டி..”
“அம்மாவ பார்த்துட்டு வாரேன் பாலம்ம...அப்புறம் எத்தன வேணும்னாலும் அடிச்சுகோங்க....ப்ளீஸ் பாலம்ம...” வலி தாளமுடியாமல் தலையை அசைக்காமல் கெஞ்சினாள் கிருபா.
அதிர்ந்து போய் நின்றிருந்தனர் ஆனந்தும் ஜீவனும். என்ன இருந்தாலும் இன்னும் உறவாகத உறவு நிலை....பாலம்மையோ வயதில் மிகவும் முதியவர்.....என்ன செய்ய வேண்டும் இப்பொழுது...?
ஆனால் தேவ் அலறியடித்து ஓடாமல் நடந்து சென்று, முள் செடியில் விழுந்த சேலையை எடுப்பது போல மெல்ல அந்த முதியவரின் கைகளிலிருந்து கிருபாவின் முடியைப் பிரித்துவிட்டான். முகத்திலிருந்தது கவன பாவம் மட்டுமே.
அவன் ஓடி வந்திருந்தாலோ, கோபமாக பேசி இருந்தாலோ, ஏன் கோபமாக பார்த்திருந்தாலோ கூட பாலம்மைக்கு கோபம் எகிறி இருக்கும்.
ஆனால் இதற்கு என்ன செய்யவென தெரியவில்லை.
“கிரு...போய் உங்க அம்மாவுக்கும் பாலம்மாவுக்கும் ஜூஸ் எடுத்துட்டு வா....வெயில்ல வந்திருக்காங்க பாரு....” வருங்கால மனைவியின் கண்ணைப் பார்த்து ஒரு கண்ணசைவு....அவள் சமயலறையைப் பார்த்து ஓடினாள்.
அடுத்திருந்த டைனிங் அறையின் மேஜையில் தெரிந்த ஜக்கிலிருந்து தண்ணீர் எடுத்து ஜெயசீலி முகத்தில் தெளித்தான் தேவ். இதற்குள் தம்பியரும் அண்ணணைப் உடல்மொழியில் பின்பற்ற தொடங்கி இயல்பாக உடனடி தேவைகளை கவனிக்க தொடங்கினர்.
ஆனந்த் அறையிலிருந்த மின்விசிறிகளை ஆன் செய்ய, ஜீவன் உள்ளறைக்கு சென்று டவல் எடுத்து வந்தான் ஜெயசீலிக்கு.
மௌனமாக நின்றார் பாலம்மை.
ஜெயசீலி கண்விழிக்கவும் அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு பாலம்மையிடம் சென்றான் தேவ்.
அவர்கை பிடித்து அருகிலிருந்த சோஃபாவில் அமர்த்தினான்.
“உங்க கணவரையும், மகனையும் சின்ன வயசிலேயே இழந்துட்டு.....ஆண்துணை எதுவும் இல்லாம, ...சின்ன வயதில கணவன இழந்துட்ட மருமகளையும் மூனு பொண்ணுங்களையும் வெளிய இருந்து ஒரு சின்ன ப்ரச்சனை கூட வராம, பாதுகாப்பா, மத்தவங்கல்லாம் உங்கள மரியாதையா பார்க்கிறமாதிரி, தப்பா பார்க்கவே பயப்படுற மாதிரி இவ்ளவு நாளும் அழகா குடும்பத்த நிர்வகிச்சிருக்கீங்க.....அதுக்கெல்லாம் மூல காரணம் நீங்க அவங்க மேல வச்சிருக்கிற வெறித்தனமான பாசம்......”
அவர் கண்களைப் பார்த்து தேவ் சொல்ல
அவர் கண்களில் ஈர பளபளப்ப்பு.
“உங்களுக்கு தெரியுது...இவங்க யாருக்காவது புரியுதா....?வீட்ல ஆண் துண இல்லன உடனயே எத்தன பேருக்கு எத்தனவிதமா தோணிருது....எல்லாம் நான் இவங்க நல்லதுக்குதானே செய்றேன்....ஆனால் எல்லாரும் என்ன எதிரி மாதிரியே பார்க்காங்க...இவங்கள அழவச்சு நான் என்னத்த அள்ளிட்டு போகப்போறேன்.....?அவங்கல்லாம் ஒன்னா சேர்ந்துகிடுறாங்க...என்ன மட்டும் எதிரியா பார்க்காங்க....”
அவரது இருகைகளியும் பற்றினான் தேவ்.
“அதுக்குதான் பாட்டிமா..... நீங்க இதுக்காகத்தான் இதை செய்றேன்னு சொல்லிட்டு செய்திருந்தீங்கன்னா அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்....”
“எங்க காலத்துலல்லாம் எங்கம்மாப்பா எல்லாத்தையும் சொல்லிட்டு சொல்லிட்டு தான் செய்தாங்களோ....?” பாலம்மயால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
“ஒருவேள இந்த தலமுறை உங்க அளவுக்கு புத்திசாலி இல்லையோ என்னமோ....?
உங்க மேல உள்ள பயத்துல இல்ல......உங்க மேல உள்ள பாசத்துலதான் உங்க மருமகளும் பேத்திகளும் உங்களுக்கு அடங்கி போறாங்கன்னு அவங்க சொல்லாமலே உங்களால புரிஞ்சிக்க முடிஞ்ச மாதிரி, நீங்க செய்றதெல்லாம் அவங்க மேல உள்ள பாசத்துலதான்னு அவங்களுக்கு நீங்க சொல்லாம புரியமுடியல போல....”