”ஏண்டா இப்படி பண்ற நல்ல காரியத்துக்கு போறப்ப இப்படி அபசகுனமா எதுவும் செய்யாதடா”
“எது நல்ல காரியம் இதுவா எனக்கு பிடிக்கலை தாத்தா”
“என்னடா பிடிக்கலை யாருக்கு கல்யாணம் ஆனா உனக்கென்ன நீ என்ன அவளை காதலிக்கறியா சொல்லு” என சொல்ல ரிஷிக்கு வார்த்தைகள் வாய் வரை வந்து உடனே மௌனமானான் ரிஷி.
அவனின் இந்த நிலைமையைப்பார்த்து பரிதாபப்பட்ட தாத்தா அவனை அழைத்துக்கொண்டு தோட்டத்தில் இருந்த மரபென்ச்சில் அமர வைத்து பேசினார்
”என்னடா ஆச்சி உனக்கு ஏன் இப்படி நடந்துக்கற அர்ஜூன் கூட சொன்னான் நீ பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்கறேன்னு, இதுல அவனோட பிரண்ட்ஷிப்பை கூட கட் பண்ற முடிவு பண்ணியிருக்க, ஏன் என்னாச்சி இந்த தாத்தா உனக்கு யாரு? நல்ல ப்ரெண்டுன்னு அடிக்கடி சொல்லுவியே, என்னை ப்ரெண்டா பாரு, உன் மனசுல இருக்கறத என்கிட்ட சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன் இப்படியிருக்காதடா பார்க்க கஷ்டமாயிருக்கு” என சொல்லவும் ரிஷி தாத்தாவை கட்டியணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
தாத்தாவிற்கோ தன் செல்ல பேரன் அழுவதைப்பார்த்து கஷ்டமாயிருந்தாலும் அவன் அழுது ஓயட்டும் என்றே அமைதியாக விட்டுவிட்டார். அவனும் அழுது ஓய்ந்து அவரை விட்டு விலகி அமர்ந்து கண்களை துடைத்துக்கொண்டான்.
”சரி இப்ப சொல்லு என்னாச்சி”
”அது தாத்தா வந்து” என அவன் தயங்கவும்
”எதுவாயிருந்தாலும் சொல்லு நான் தப்பாவே நினைக்கமாட்டேன்”
“அது அது” என அவன் திக்கி திக்கி பேசாமல் வார்த்தைகளை முழுங்கவும் தாத்தாவே பேச ஆரம்பித்தார்