தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 05 - சசிரேகா
விடிந்தது
காலையில் எப்போதும் போல் ஜாக்கிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ரிஷிகேசன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தான். அந்நேரம் தாத்தா தயாராகி வந்தார்
”என்ன தாத்தா எங்கயாவது போறீங்களா சீக்கிரமா ரெடியாயிருக்கீங்க”
“ஆமாம்டா இந்த அர்ஜூன் தொல்லை தாங்க முடியலை இன்னிக்கு அவன் கல்யாண புரோக்கரை பார்க்க போறானாம் துணைக்கு பொண்ணு வீட்டு சார்பா என்னை கூப்பிட்டான்.”
“அதுக்கு நீங்க போகனுமா நான் போறேன் தாத்தா”
“நான் புரோக்கரை பார்க்க போகலை, எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல இடம் இருக்கு அதான் நானும் அர்ஜூனும் அந்த வீட்டுக்கு போய் மாப்பிள்ளை பையனை பார்த்து பேசி முடிக்கலாம்னு கிளம்பறேன்” என சொல்லவும் ரிஷிக்கு இதயமே வெடித்துவிட்டது
”என்னது பேசி முடிக்கனுமா எதுக்கு வேணாம் தாத்தா தப்பு பண்ணாதீங்க” என அவன் பதட்டமாக பேசவும் தாத்தா அவனிடம்
”ஏன்டா இப்படி டென்ஷன் ஆகற நல்ல பையன்தான் வரதட்சனை கூட கேட்க மாட்டான் அதோட என் சிபாரிசு இருக்கறதால பொண்ணை கண்கலங்காம வெச்சிக் காப்பாத்துவான்”
“இல்லை வேணாம் இதுல அவளுக்கு சம்மதமான்னு கேட்டீங்களா அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை தாத்தா”
“அது உனக்கெப்படி தெரியும்”
“எனக்கு தெரியும்”
”அதான் எப்படி தெரியும் நீ அவளை பார்த்திருக்கியா”