அங்கே ஒரே சிரிப்பலை.. பவதாரிணியோ..
“பெரியப்பா சொன்னதை கேட்டிருக்கணும்.. வெடியை போடுறேன்னு பிறந்த நாள் அதுவுமா காலை புண்ணாக்கிட்டு..”, என்று தன் மனதாங்கலை வெளிப்படுத்த... பாலாஜியின் முகத்தில் வாட்டம் அதிகமானது..
“எல்லாம் என்னாலே! இல்லைன்னா இந்த நேரம் ஆபிஸ் போயிருப்பே!”, என்றான் மிகுந்த வருத்ததுடன்..
தீபாவளி அன்று மாலை மத்தாப்பு கொளுத்திய பொழுது தான் அது நிகழ்ந்தது. பாலாஜி காலி பாட்டிலில் ராக்கெட்டை வைத்து பற்ற வைக்க.. அந்த பாட்டில் சாய்ந்து.. வானை நோக்கி செல்லாமல்.. சற்று தள்ளி நின்ற அஞ்சனாவின் கால் நோக்கி பாய்ந்து அவள் பாதத்தையும் பார்த்தது.
உடனடியாக டிரீட்மெண்ட் கொடுத்ததால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.. இருந்தாலும் தீக்காயம் அல்லவா... இன்னும் முழுதாக ஆறவில்லை..
காயத்தை பற்றி வருந்தாமல், தான் பரிசளித்த சேலை பறி போனதை பற்றி வருந்தியவளைக் கண்ட ராகவ்,
“நான் கொடுத்தா தான் அதை கட்டுவேன்னு சித்தி சொன்னாங்க குட்டி.. அதான்”,
என்று உண்மையை போட்டு கொடுக்க... திகைத்தவள் பவதாரிணியை ஒரு பார்வை பார்த்து விட்டு ராகவ்விடம் பார்வையை திருப்பி,
“பசு மாடு எப்போ கோவில் மாடு ஆன? பாவா சொன்னதுக்கு தலையாட்டி இருக்கே?”, என்று கேட்டு விட்டு... தன் தாத்தாவிடம்,
“எனக்கு சேலை பிடிக்காதுன்னு தான் ராக்கெட் அப்படி செய்திருக்கு! நாசாவுக்கு விதிச்ச தடையை வாபஸ் வாங்கிடுங்க தாத்தா”, என்று சிபாரிசு செய்ய..
“ஆமாம் பாப்பா, பாவம் பயபிள்ளைக.. பிழைச்சு போகட்டும்!”, என்று அமெரிக்க ஜனாதிபதி தோரணையில் அவர் அளித்த ஒப்புதலில் அந்த இடம் கலகலத்தது..
கூட்டுக் குடும்பத்தின் அழகு அந்த இடத்தில் மிளிர்ந்தது.. இப்படியே கேலி, கிண்டலுடன் கலகலப்பாக சென்றது பாலாஜியை வழியனுப்ப விமான நிலையம் வரும் வரை தான்...
அவன் விடை பெறும் பொழுது அனைவருக்கும் ஒரு இறுக்கம். அதை மறைத்த படி அனைவரும் அவனை வாழ்த்தி வழியனுப்ப... சங்கரியோ தாளாமல் அழுது விட.. அவரைத் தேற்றி விட்டு, அஞ்சனாவை பார்த்தான் பாலாஜி.
அவளோ, “நான் ஒன்னும் அழ மாட்டேன் போடா..”, என்று அவனுக்கு பழிப்பு காட்ட...
“நல்லது! இன்னொரு வெள்ளத்தை சென்னை தாங்காது! ”, என்று பதிலுக்கு வாரி விட்டவனின் மனமோ அவள் அழப் போவதை உறுதி செய்ய... இயலாமையுடன் ராகவ்வைப் பார்த்தான்.
“நீ பத்திரமாக போயிட்டு வாடா.. நான் பார்த்துக்கிறேன்”, என்று அவனை அனுப்பி வைத்தான் ராகவ் - அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவனாய்...
பாலாஜி விடைபெற்று பார்வையில் இருந்து மறையும் வரை காத்திருந்த அஞ்சனாவின் கண்கள்.... பின்னர் சிறிது சிறிதாக நீரைத் தேக்கி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் பொழுது, பொங்கு மா சமுத்திரமென பொங்கி வழிந்தது....
பொங்கி பொங்கி அழ ஆரம்பித்தவளை யாராலும் தேற்ற முடியவில்லை..
அவளை வீல் சேரில் இருந்து தூக்கி காரில் ராகவ் அமர்த்தியதும், அவளருகே வந்து அமர்ந்து கொண்ட பவதாரிணி,
‘அழ ஆரம்பித்தால்.. இரவு முழுமையும் அழுது தீர்ப்பாளே.. பிள்ளை ஏங்கி போயிடுவாளே!!’, என்று தவிக்க ஆரம்பிக்கும் பொழுதே, அவரைக் கண்டதும்..
அஞ்சனா அழுகையுடனே, “ஐ மிஸ் பாஜி!!!”, என்று அவர் மடியில் படுத்துக் கொள்ள, அவள் தலையை கோதிய படி சமாதனம் சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தார் பவதாரிணி.
அதைப் பார்த்த ராகவ்விற்கும் வருத்தம். ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து SUVயை இயக்கிய படி,
“சித்தி அவளை பீச்க்கு கூட்டிகிட்டு போறேன்... ரிலாக்ஸ் ஆகிடுவா”, என்று அவரிடம் சொல்ல..
“அவளாலே பீச் வரை நடக்க முடியாதே! வீல் சேரும் பீச்க்கு கொண்டு போக முடியாதே!”, என்று இயலாமையுடன் பவதாரிணி சொல்ல...
“அவ ஏன் நடக்கணும்? என்ன குட்டி? உப்பு மூட்டையாக ரெடியா!”, என்றவன் கேள்வியில்.... இவள் கண்களில் ஒரு ஆர்வம்..
சிறு வயதில் அவள் அழுகையை நிறுத்த உப்பு மூடை தூக்கி சுமந்த ராகவ் மனக்கண்ணில் வந்ததால் அந்த ஆர்வம் - ஆனால், அது அந்த ஷணம் மட்டுமே! பிரிவின் வலியை தாங்கும் தைரியமற்ற மனது... அவளை மீண்டும் அழ வைத்தது...
காலை நேர வெயில் முகத்தில் அடிக்க, தூக்கம் களைந்து கண் விழித்தாள் அஞ்சனா...
‘நான் எப்போ பீச்சில் இருந்து ரூம்க்கு வந்தேன்?’, திகைத்த படி சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு முந்தைய இரவு கடலன்னையின் தாலாட்டில்... தன் குடும்பத்தாருடன் பழைய கதைகள் பேசிய படி ராகவ்வின் மடியிலே தூங்கி விட்டது வரை தான் நினைவில் இருந்தது.