ஜான்சன் சிரித்தான். "அந்த பொண்ணோட பாட்டி ராணுவ வீரர்கள் யார் உங்கிட்ட நெருங்கினாலும் நீ மேல கைய தூக்கிடுனு சொல்லிருக்காங்க. அதே போல ஒரு நாள் என்கிட்ட செய்து காட்டினா. நாம மோசமானவங்க இல்லன்னு அவளுக்கு புரிய வைக்குறதுக்கு சாக்லேட்ஸ் கொடுத்தேன். அது அப்படியே பழகிடுச்சு. அவ தினமும் காத்திருக்க ஆரம்பிச்சா. அவ காத்திருப்பும் ஆசையும் வீணாகிடக்கூடாது"
மேடு பள்ளத்தில் குதித்து எழும்பிய ஜீப் கிட்டத்தட்ட கடற்கரையை நெருங்கியது .
"போர் எல்லாம் முடிந்து நீ அமெரிக்கா போயிட்டா அவளுக்கு யார் சாக்லேட்ஸ் கொடுப்பா?"
"அது நடக்கும் போது பாத்துக்கலாம்" என்றான் ஜான்சன்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
லேசாக மழை தூறல் விழுந்துகொண்டிருந்தது. அமேலியாவின் வீட்டில் இருந்து தூக்குசட்டியில் உணவை சுமந்தபடி தனது வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் பஹீரா. ஹகீமிற்கு அமேலியா வீட்டில் இன்னும் சில வேலைகள் மீதம் இருப்பதால் பஹீரா மட்டும் தனியே வந்தாள். மழையின் தூறல் அதிகரித்தது பஹீராவின் ஓட்டமும் அதிகரித்தது
"ஹே பஹீரா" என்றது ஒரு குரல். ஓட்டத்தை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கினாள் பஹீரா
ராணுவ வீரன் கொடுத்த தின்பண்டத்தை ருசித்தபடி இருந்த மாலிகாவை நோக்கி ஓடினாள்.
"எங்க போயிட்டு வர?"
"அமேலியா அக்காவுக்கு கல்யாணம் ஆக போகுதுல்ல .அதனால எல்லாருக்கும் விருந்து குடுத்தாங்க நானும் போனேன்"
"இனிப்பு கொண்டு வந்தியா?"
"ம்ம் .நிறைய இருக்கு அமேலியா அக்கா எனக்கு கொடுத்துச்சு .இந்தா நீயும் சாப்பிடு" என்று இனிப்பை நீட்டினாள் பஹீரா.
அதை பெற்றுக்கொண்ட மாலிகா பதிலுக்கு தான் வைத்திருந்த சாக்லேட்களை அவளுக்கு கொடுத்தாள்
"இது யார் கொடுத்தது உனக்கு?"
"அமெரிக்ககாரர் ஒருத்தர் கொடுத்தார்"
பஹீரா அதை வாங்க மறுத்தாள்
"நல்லா இருக்கும் சாப்பிடு" என்று அடம்பிடித்தாள் மாலிகா
வேறு வழியில்லாமல் அதை வாங்கிய பஹீரா தயங்கியபடியே சாக்லேட்டை உண்டாள். அதன் ருசி அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது
"ரொம்ப நல்லா இருக்கு"
தூறலாய் வந்த மழை மாமழையாய் உருவெடுத்தது. "மாலிகா நான் போயிட்டு வரேன்" என்று கூறிய பஹீரா தூக்குசட்டியை தூக்கியபடி மழையில் ஓடினாள் மாலிகாவும் தன் வீட்டினுள் நுழைந்துகொண்டாள்
கடுமையான புயற்காற்று மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவ்வப்போது வரும் இடி, மின்னலின் ஒளியில் அவ்விடமே பேய் பிசாசுகள் வசிக்கும் இடம் போல் தெரிந்தது சாலையெங்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது தாழ்வான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அதைத் தடுக்க மக்கள் போராடிக்கொண்டிருந்தனர் அமேலியாவின் வீடும் தாழ்வான பகுதியில் தான் இருக்கின்றது உள்ளே வந்த தண்ணீரை கனமான துணிகளைப் போட்டு தடுத்துக்கொண்டிருந்தான் ஹகீம். அவனுக்கு தன் தங்கை பஹீராவின் ஞாபகம் வந்தது. அத்துடன் எந்நேரத்திலும் இடிந்துவிழலாம் என்ற அபாயத்திலுள்ள தன் வீட்டின் நிலைமையும் அவனை பயமுறுத்தியது.
"ஹகீம் உன் தங்கை பஹீரா எங்க?" என்றார் முகமது யூசுப்
"அவ சாப்பாடு எடுத்துகிட்டு வீட்டுக்கு போயிருக்கா"
"உங்க வீடா அது தான் மோசமா இருக்கே அங்க எதுக்கு குழந்தைய அனுப்பின?இன்னைக்கு இங்க தங்குறதுக்கு துரைக்கு தன்மானம் இடம் கொடுக்கலையோ?"
ஹகீம் வேதனையோடு மழையை நோக்கினான்.
"போ பஹீராவ கூட்டிட்டு வா. இன்னைக்கு இங்கயே தங்கிக்கோங்க சீக்கிரம், குழந்தை மழைல கஷ்டப்படபோறா"
ஹகீம் சற்றும் தாமதிக்காமல் மழையில் தன் வீட்டை நோக்கி ஓடினான் இடி மின்னல் அவனை பயமுறுத்தியது. அவனால் மழையை எதிர்த்து வேகமாக ஓட முடியவில்லை. மழைத்துளிகள் கம்பி போல் அவன் முகத்தில் குத்தின.எதிரே அவனைத் தேடி பஹீரா ஓடி வந்துகொண்டிருந்தாள். அவளது தோளில் புத்தகப்பையும் தூக்குசட்டியும் இருந்தன
"பஹீரா நீ எதுக்கு மழைல நனஞ்சிட்டு வர?"
"அண்ணா, நம்ம வீட்டு சுவரு இடிஞ்சி விழுந்திடுச்சு. எனக்கு பயமா போச்சு. அதனால தான் அண்ணா ஓடி வந்தேன்"
"சரி சரி பயப்படாத" என்று கூறிய ஹகீம் அவளை அழைத்துக்கொண்டு அமேலியா வீட்டிற்கு வந்தான். அவர்களை உள்ளே வர சொல்லியஃ பாத்திமா, தலையை துவட்டிக்கொள்ள துணியை கொடுத்தார். மின்னலின் ஒளியில் அமேலியாவை நோக்கிய ஃபாத்திமா வேதனையுற்றார் அமேலியா வீட்டின் ஓர் ஓரத்தில் சிலையென அமர்ந்திருந்தாள் .விளக்கின் ஒளியில் அவளது முகம் மங்கலாக தெரிந்தாலும், அவளது மனதை அவள் தாயார் முன்னமே தெரிந்து கொண்டுவிட்டார். அதை தன் கணவனிடமும் கூறினார்.
"அமேலியாவுக்கு கல்யாணத்துக்கு விருப்பம் இல்லைன்னு நினைக்கிறன்" என்றார் ஃபாத்திமா.