"யா அல்லாஹ்!" என வந்தவர்களில் ஒருவர் வேதனையோடு கூறினார்
பின்னர் அமெரிக்கர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் .அவர்கள் சென்றதும் ஈராக்கியர்கள் அமேலியாவிற்கும் ஹகீமிற்கும் பாதுகாப்பாக பக்கத்துக்கு வீதி வரை வந்தனர் .அல் ஷீபா வீட்டை அடைந்ததும் ஹகீமிடம், "தம்பி இன்னைக்கு அமெரிக்க ராணுவக்கப்பல் வந்திருக்கு இன்னைக்கு முழுக்க அமெரிக்கர்கள் இந்த பக்கம் சுத்திட்டு இருப்பாங்க .ஜாக்கிரதையாக இருங்க" என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்
அமேலியா வீட்டினுள் சென்றாள்.
"அக்கா!"
உள்ளே சென்ற அமேலியா ஹகீமை நோக்கினாள். "சொல்லு ஹகீம்"
"நீ எவ்வளவு நேரம் இங்க இருப்ப?"
"தெரியலை, ஏன்?"
"ஒரு வேலை இருக்கு. நான் பாத்துட்டு வரட்டுமா?"
"எங்க போற?"
"ஒரு மணி நேரத்துல வந்திடுவேன் அக்கா" என்று கூறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் ஹகீம்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
படுக்கையில் இருக்கும் அல் ஷீபாவின் அருகில் சென்று அமர்ந்தாள் அமேலியா அல் ஷீபா கண்களைத் திறக்காமல் படுத்துக்கொண்டிருந்தார். வீட்டினுள் இருக்கும் விளக்கு எந்நேரத்திலும் அணைந்து விடும் போலிருந்தது அதை சரிபடுத்தி மீண்டும் சுடர் விடச் செய்த அமேலியா, "பாட்டி" என அழைத்தாள்
அமேலியாவின் குரல் கேட்டதும் மெல்ல கண் விழித்த அல் ஷீபா அவளை நோக்கினார்
"வந்துட்டியா".
"ம்ம் .எப்படி இருக்கிங்க?"
"எப்போ வேணும்னாலும் போய்டலாம் அப்படி இருக்கேன்"
"இப்படி பேசாதிங்க"
"உன் முகத்துல கல்யாணக்களையே இல்லையே"
அமேலியா அமைதியானாள். என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது குளிர்காற்று அவள் உடலைத் தழுவியது .
"எனக்கு பயமா இருக்கு பாட்டி" .
"எதுக்கு?"
"நான் என் அப்பா அம்மா விட்டு எங்கேயோ போய் வாழ போறேன். இனி இங்க வருவேனான்னு தெரியல பாட்டி. இது வரைக்கும் நான் ஆசைப்பட்டது போல எதுவும் நடக்கல. அல்லா என்னை ஏன் இப்படி படச்சிருக்காருன்னு தெரியல" என்று அழுதாள்
"உனக்கு எது நல்லதோ அதை தான் இறைவன் கொடுப்பாரு .அந்த மேஜைக்கு கீழ பெரிய காகிதம் ஒண்ணு இருக்கும் அதை எடுத்துட்டு வா"
அமேலியா அதை எடுத்துக்கொண்டு வந்தாள்.
"அதை பிரிச்சு பாரு"
விளக்கின் ஒளியில் காகிதத்தை பிரித்து பார்த்த அமேலியா ஆச்சர்யம் அடைந்தாள். ஒரு நாள், ஷீபா பாட்டி உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் என்று அவளிடம் கேட்டதற்கு கற்பனையில் இருக்கும் நாயகனை ஓவியமாய் தீட்டியது அது. அந்த ஓவியம் முழுமை அடையவே இல்லை, எவ்வளவோ யோசித்தும் முகத்தை மட்டும் அவளால் வரைய முடியவில்லை .இந்த ஓவியத்தை மறந்து எவ்வளவோ காலம் ஆகி விட்டது
"நீ வரைந்த ஓவியம் முழுமை அடையலை .அது போல தான் நம் ஆசைகளும். ஆசைகள் நிறைவேறாம போனா அது கனவா மாறிடுது .கடவுள் கொடுக்கிறதை நிராகரிக்காத, அதை ஏத்துக்கோ. பிற்காலத்துல நீ நிச்சயம் சந்தோசமா வாழுவ. அப்போ நான் சொன்னதை நினைத்து பாரு"
ஷீபா பாட்டி கூறிய விளக்கம் ஏனோ அவளுக்கு அறுதல் தரவில்லை
அமேலியாவிடம், வேலையாக சென்று வருவதாகக் கூறிச் சென்ற ஹகீம் நான்கைந்து வீதிகளைக் கடந்து இருள் சூழ்ந்த ஒரு மாளிகைக்குள் நுழைந்தான். நுழையும் போதே சிலர் அவனைத் தடுத்தார்கள் அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது . இவன் நம்மவன் தான் என ஒருவன் கூறியபின் ஹகீம் மாளிகைக்குள் நுழைந்தான்..
உள்ளே சுமார் முப்பது தீவிரவாதிகள் இருந்தனர். கூடத்தின் நடுவில் விறகுகள் எரிந்து கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி தீவிரவாதிகள் உட்கார்ந்து கொண்டிருந்தனர் .அவர்கள் அனைவரின் பார்வையும் ஹகீம் மேல் விழுந்தன.
ஹகீம் அவர்களிடத்தில், அமெரிக்க ராணுவக் கப்பல் வரப்போவதையும் அதனால் முக்கிய சாலையின் வழியே இரவு முழுவதும் இராணுவத்தினரின் நடமாட்டம் இருக்கும் என்பதையும் தெரிவித்தான். தீவிரவாதிகளின் தலைவனின் முகத்தில் குரூர சிரிப்பு உதயமானது ."இன்னைக்கு நமக்கு பெரிய வேட்டை இருக்கு" என அவன் வெறியோடு கத்த ஆரம்பித்தான். மற்ற தீவிரவாதிகளும் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு, "இன்று நமக்கான நாள், நம்முடைய வெற்றி நாள், எதிரிகளின் மரண நாள்" என அவனுடன் உற்சாகத்தில் கலந்து கொண்டனர்.