Flexi Classics தொடர்கதை - ஆறிலொரு பங்கு - 03 - சுப்ரமணிய பாரதியார்
மீனாம்பாளுடைய மரணவோலை கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை யெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கத்தைச் சொல்லுகிறேன்.
அந்த ஆற்றாமையினால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக்கொண்டு துறவியாகி வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். “வந்தே மாதர” தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால், என்னை ஸர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிடும்படியான முயற்சிகளிலே நான் கலக்கவில்லை, ஜனங்களுக்குள் ஒற்றுமையும், பலமும் ஏற்படுத்தினால் ஸ்வதந்திரம் தானே ஸித்தியாகு மென்பது என்னுடைய கொள்கை, காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை . அங்கங்கே சில சில பிரசங்கங்கள் செய்ததுண்டு. இதுபற்றிச் சில விடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள், இதனால் நான் ஜனங்களினிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி, பல தடைகள் ஏற்பட்டன.
ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்தினும் பிரதிகூலமே அதிகமாக விளையலாயிற்று. இதையுந் தவிர, எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும், மற்றவர்களைக்காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு, உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.
“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன. மூடன் 'நான் செய்கிறேன்' என்று கருதுகின்றான்” என்ற கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன்.
இந்த வீண் கர்வம் நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்துக்கும் பயன்படாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் - எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் - சாதாரணத் தொண்டிழைப்பதற்கே என்னை மாதா வைத்திருக்கிறா ளென்பதை அறிந்து கொண்டேன்.
எனவே, பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்-கப்பால், எனக்குப் போலீஸ் சேவகர் செய்யும் உபசாரங்களும் நின்று போய்விட்டன, பாதசாரியாகவே பலவிடங்களில் சுற்றிக்கொண்டு பலபல தொழில்கள் செய்துகொண்டு லாஹோர் நகரத்துக்குப்போய்ச் சேர்ந்தேன். அங்கே லாலா லாஜ்பத்ராய் என்பவரைப் பார்க்க வேண்டுமென்ற இச்சை ஜனித்தது.
அவரைப்போய்க் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகி, கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் ஜனங்களுக்குச் சோறு துணிகொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் தாம் நிதிகள் சேர்த்து