Flexi Classics தொடர்கதை - ஆறிலொரு பங்கு - 02 - சுப்ரமணிய பாரதியார்
மேலத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி நிகழ்ந்ததற் கப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்தில் பல மாறுபாடுகள் உண்டா யிருந்தன. 'வந்தே மாதரம்' மார்க்கத்தில் நான் பற்றுடையவ னென்பதை அறிந்த மாமா பகதூர் எனக்குத் தனது கன்னிகையை மணஞ்செய்து கொடுப்பதென்ற சிந்தனையை அறவே ஒழித்து விட்டார், சில மாதங்களாக அவர் தமது சாசுவத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசலாக்கத்துக்கு வருவதை முழுதும் நிறுத்திவிட்டார்.
இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரர்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் வந்து கொண்டிருந்தது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை, ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளா? பெண்களே வஞ்சனையின் வடிவமென்று சொல்லுகிறார்களே, அது மெய்தானா? "பெண்ணெனப் படுவ கேண்மோ . . , , , , , , , உள் நிறைவுடையவல்ல, ஓராயிரமனத்தவாகும்" என்று நான் ஜீவகசிந்தாமணியிலே படித்தபோது அதை எழுதியவர் மீனாம்பாளை போன்ற ஸ்திரீயைக் கண்டு, அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே! இப்போது அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால் அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!
'அட மூடா! உனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரமசரிய விரதத்திலே ஆயுள் கழிக்க வேண்டுமென்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வருகின்றாய்: மீனா மற்றொருவனை மணஞ்செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண்மீது இல்வாழ்க்கையில் மையல் கொள்ளப்போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு, அவன் மனைவியாய் விடுவாளாயின், உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் நீயேன் வருத்த மடையவேண்டும்? என்று சில சமயங்களில் எனதுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.
மீட்டும், வேறொருவிதமான சிந்தை தோன்றும். 'அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ்செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராண னோடு ஒன்றுபட்டவ ளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி, அத் தருமத்திற்கு இடையூறுண்டாகு மென்றஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாம லிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? ஏது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் உன்னை மறக்கவே மாட்டேனென்று எத்தனை முறை என்னிடம் பிரமாணஞ் செய்து கொடுத்திருக்கின்றன. அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என்