முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?"
அப்பால் ஒரு உள்ளம் .........
'அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படி யன்றோ பிள்ளைகள் வேண்டும்! பீஷ்மர் இருந்த தேசமல்லவா? இப்போது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளிக் கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே, அமிருத வெள்ளத்தை விட்டு வெற்றெலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம ஸேவை பெரிதா, ஸ்திரீ ஸேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”
பிறகு வேறொரு சிந்தை - 'எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால் அதுவே நமக்குப் பெரியதோர் பலமா யிருக்கும். 'நீ தர்ம பரிபாலனம் செய், என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸிகத் தலைவனாகக் கொண்டு நோன்புகளிழைத்துக் காலங் கழிப்பேன். ஸ்வர்க்கத்தில் நாமிருவரும் சேர்ந்து வாழலாம்' என்று அவள் உறுதி தருவாளானால் இந்த ஜன்மத்தில் ஜீவயக்ஞம்[$] வெகு சுலபமா யிருக்கும்!
அப்பால் - . . ,
'ஒரே யடியாக அவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்து விட்டதென்று செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு இகத் தொடர்பொன்றுமே யில்லாமல், தர்ம ஸேவையே தொழிலாக நின்று விடலாம்.'
பின் மற்றொரு சிந்தை .....
'ஆ! அப்படி யொரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரிதாய் விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டதென்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கை யுண்டா ?"
அப்பால் பிறிதொரு சிந்தை ...
'அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பென்பதோர் நிலையு முண்டா? வஞ்சனை, லோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.'
இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறிமாறித் தோன்றி என தறிவைக் கலக்கின. ஆன்ம வுறுதி யில்லாதவ னுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கொப்பாகும்.
இதனைப் படிக்கின்ற தாம் ஒரு கணம் ஸாக்ஷிபோல நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பீராயின் மிகுந்த வியப்புண்டாகும். மனித
---
[$] வாழ்நாள் முழுதையும் தர்மத்திற்கு அர்ப்பணம் செய்தல்