உண்மையில் அப்படித்தான் தோன்றியது. ஏன்? அளவு கடந்த அறிவாற்றல் உள்ள பானு - படிப்பை நிறுத்திக்கொண்டால் நான் கல்லூரியில் படித்துக் கிழிக்கப்போவது என்ன?
பானு சிரித்தாள். "நானுன்னா உனக்கு எவ்வளவு அன்பு அண்ணா! நீ பெரிய மனுஷன் ஆனா எனக்குச் சந்தோஷம் இல்லியா? நான் இருக்கும்போது உன்னெ நிறுத்தற்துக்கு வுடுவேன்னு நினெக்கிறியா? எந்தக் கவலெயும் வெச்சிக்காமெ உத்சாகமாப்படி. எனக்குக் கடிதங்க எழுதிட்டிரு." பானு பொறுப்பை ஒப்படைப்பதுபோல் சொல்லும்பொழுது எனக்குப் பொறுத்துக்கொள்ள முடியாது போல் தோன்றியது. நான் ஏதோ சிந்தித்துக்கொண்டே இருந்துவிட்டேன்.
பானுவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குச் சித்தப்பாவிடம் சக்கி இல்லை என்பது உண்மைதான். ஆனால் பானுவைப் போல ஒருத்தியை அல்ல, பத்துப்பேரைப் படிக்க வைக்கும் சக்தி, சித்தப்பாவுக்கு இல்லாத அந்தத் தகுதி என் தந்தைக்கு இருக்கிறது. அவருடைய மகனான எனக்குத் தாத்தாவிடமிருந்து செல்வம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய இயலாது. தந்தைக்குச் சொல்ல முடியாது. சொல்லி ஒத்துக்கொள்ள வைக்க இயலாது. அவருக்குப் பெண்கள் படிப்பு விஷயம் பற்றி நல்ல எண்ணம் கிடையாது. அதனால்தான் என் தங்கை ஐந்தாவது வகுப்புகூட முடிக்காமல் மாமியார் வீட்டுக்குப்
போய்விட்டாள். அந்த அநியாயத்திற்கு ஓர் இளம் உள்ளம் கதறி அழுதது என்பது தந்தைக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்! இன்று மற்றொரு தங்கை விஷயத்திலும் நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பானுவைப் போன்ற மாணிக்கம் மறைக்கப்பட்டால் அது நாட்டிற்கே இழப்பல்லவா? இருக்கலாம் - மாணிக்கங்களை இழக்கும் நாடே மௌனமாக இருக்கும்போது என்னைப் போன்றவர்கள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. வேதனை தான் மிச்சமாகும்.
"என்ன யோசிக்கிறே?" என்று கேட்டாள்.
"பானு! சொத்து விவகாரமெல்லாம் இப்போ என் கையிலே இருந்தா நாம் இப்படிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லெ. ஆனா அப்பா...உனக்குத் தெரியுமில்லியா? அவருக்குச் சொல்லி லாபமில்லை"
பானு வியப்படைந்தவள் போல் உற்றுப் பார்க்கத் தொடங்கினாள். "இந்தத் தங்கையிடம் இவ்வளவு அன்பு செலுத்தும் அண்ணன் ஒர்த்தன் இருக்கிறான் என்பது இந்த நிமிஷம் வரெ எனக்குத் தெரியாது அண்ணா! உன்கிட்டே இந்த உணர்ச்சி, இந்த அன்பு என்னெக்கும் - நாம பெரியவங்களாய்ச் சாகற வரெக்கும் - இப்படியே இருக்கணும். அதெவிட எந்த உதவியும்