Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 03 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
பானுவின் நட்பு அற்றுப்போகிறது என்று நினைக்கும் பொழுது மனம் கனத்தது. எதிர்காலம்பற்றி எத்தனையோ கனவுகள் கண்டு ஆகாயக் கோட்டைகள் கட்டிய பானு இந்தத் தோல்வியை எவ்வாறு தாங்கிக் கொண்டாள்? கனவுகள் கரைந்து விட்டன. எண்ணங்கள் சிதறிவிட்டாலும் பொறுத்துக்கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறதா பானுவின் இதயத்திற்கு?
எந்தக் கல்லூரியில் சேர்வது, எந்தக் குரூப் எடுத்துக்கொள்வது, எங்கே தங்கி இருப்பது - படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் பானுவின் ஆலோசனைகள் கேட்டுச் செய்தேன். கல்லூரி வாயிலில் கால் வைத்த வினாடியிலிருந்து எப்பொழுது என்ன நடப்பது, ஆசிரியர்கள் எவ்வாறு வருவது, மாணவிகள் எப்படி இருப்பது, மாணவர்கள் எவ்வாறு கலாட்டா செய்வது - கல்லூரியின் முழு உருவத்தை ஒன்றுவிடாமல் விவரித்துக் கடிதங்கள் எழுதினேன். எதைப்பார்த்தாலும் அதைப் பானுவுக்கு எழுதவில்லை என்றால் மனதுக்குத் திருப்தி இல்லை. பானுவுக்கு நாவல்கள் படிப்பதென்றால் மிகவும் விருப்பம். எவ்வளவாயினும் முயன்று புகழ்பெற்ற நாவல்களை வாங்கி பானுவுக்கு அனுப்பினால் ஏதோ ஓர் ஆனந்தம்! வகுப்புப் புத்தகங்களிலிருந்து சில சில விஷயங்களை எடுத்து எழுதினால் பானுவுடன் கலந்து படிப்பதுபோல் ஏதோ ஒரு மகிழ்ச்சி! பானுவின் இதயத்திலிருந்து பயத்தைப் போக்கி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பது என் பேரவா! நன்றியுடன், ஆனந்தத்துடன் பானு எழுதும் கடிதங்களைப் படிக்கும்பொழுது கண்கள் ஈரமாகும். பானு என்னுடனே படித்து ஒரு நாள் பட்டதாரி ஆனாலும் எனக்கு இந்த மகிழ்ச்சி தோன்றாது போலும்!
காலப்போக்கில் பானுவின் கடிதங்களில் கவலைக்கோடுகள் மறைந்தன. இந்தித் தேர்வுக்காகப் படித்து வருவதாகவும், நூல் நிலையத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வருவதாகவும், எப்பொழுதும் இப்படி ஓய்வே இல்லாமல் இருப்பதாகவும் அவள் எழுத எழுத என் மனத்திலும் பாரம் குறையத் தொடங்கியது.
இண்டர் தேர்வுகள் எழுதினேன். கிளாஸ் கிடைத்தது. அந்த மகிழ்ச்சி நேரத்தில் மற்றொரு நல்ல செய்தி! பானு திருமண இதழ் அனுப்பியதுடன் கடிதம் எழுதியிருந்தாள். எனக்கு வியப்பாக இருந்தது. பானுவுக்கு இப்படி எதிர்பாராமல் கலியாணமென்ன? மணமகன் ராஜசேகரம் பி.ஏ.வாம்! நல்லதுதான். இருந்தாலும் ஏனோ எங்கோ எனக்கு ஒரு குறை தோன்றியது. பானு டாக்டர் ஆக வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். நடக்கவில்லை. போகட்டும். ஒரு டாக்டருக்கு மனைவி ஆனால்? ஏனோ எனக்கு இந்தக் கற்பனை! டாக்டர் என்றால் எவ்வளவு விலை! இந்தக் கால மணமகன்களின் வரதட்சணை எனக்குத்