தெரியாததல்ல! ஒரு டாக்டரை வாங்கக் கூடிய சித்தப்பா மகளைப் படிக்க வைக்க முடியாமல் இருப்பாரா? இப்பொழுது பி.ஏ.வைப் பேசி முடிப்பதற்கே மிகவும் செலவு செய்திருக்க வேண்டும். இன்னும் கலியாணத்திற்கு நான்கு நாட்களே உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னரே மீண்டும் கல்லூரிக்குச் செல்வதற்குத் துணிமணிகள் வாங்க என் தந்தை மூன்று பச்சை நோட்டுகள் கொடுத்தார். நேராகப் பட்டணம் சென்று பானுவுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம், வரப்போகும் மாமாவுக்கு நல்ல பேனா வாங்கிக் கொண்டேன்.
பானுவின் கையில் நானே கடிகாரம் கட்டும்பொழுது அந்த அழகான கண்களில் மின்னிய ஆனந்தம், வியப்பு, தன்மீது நான் வைத்திருக்கும் தனி அன்பு பற்றிய கர்வம் -- அவை போதும்! அவற்றிற்காகவே நான் பானுவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்.
"அண்ணா! இந்தப் பரிசுக்கு இவ்வளவு மதிப்பூன்னு இல்லே. ஆனா உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்?"
"சமயம் வரும்போது நானே கேக்கறேன், சரி தானே?"
மணமகனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. பானுவின் கணவராக வர இருக்கும் அந்த மனிதர் எவ்வளவு சிறந்தவராக இருக்கவேண்டும்!
"ஆமாம் பானு! கல்யாணத்துக்குப் பெண்பார்க்க வந்தாங்க இல்லியா, மாமா எப்படி இருக்கறார்? தங்கநிற உடம்பு, சுருள் சுருளான கிராப்பு, அகலமான நெத்தி, திடமான மார்பு...."
"புஜாங்கம்..சல்லடம்...நான்கு கைகள்..."
"அப்படியா? இன்னும் அவரெ நான் சாதாரண மனுஷன்னு நினெச்சிட்டிருக்கறேன் தெரியுமா!"
"சே,போடா! நீயும் உன் புத்திசாலித்தனமும்!" சிரித்துவிட்டாள் பானு.
"இல்லே பானூ! என்கிட்டே ஒண்ணுமே சொல்லாமெ உன் கணவரெ முடிவுசெஞ்சதுக்கு நீ என்கிட்டே மன்னிப்பு கேக்கணும். இன்னும், நான் கேட்டாக்கூட நீ சொல்லாட்டா... எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல்லே" கோபித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன்.
பானு சிரித்துவிட்டு என் மோவாயைப் பிடித்துக்கொண்டாள். "எங்கப்பால்லே! சொல்றேன் ஆவட்டும். நீ இப்படி மூஞ்செ வச்சிட்டு உக்காராதே. ஏதாவது சொல்லு."
"ஓஹோ! உங்களவர்னா மூஞ்சியாலே கேப்பார், காதாலே பேசுவார்போல இருக்குது! அதனாலேதான் உனக்கு அவர் ரொம்ப பிடிச்சுப்போச்சி."
"நிஜம்தான்! அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சிபோச்சி சொல்லு!" கடிகாரம் கட்டிய கையை மோவாயின் கீழ் வைத்துக்கொண்டு சிந்திப்பதுபோல அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். இன்னும் கோபம் காட்டுவதில் பயனில்லை. கையை எடுத்துவிட்டுக் கேட்டேன் - "சொல்லு