அப்பொழுது சமையலறைப் பக்கம் வந்த சந்துரு தாயைப் பார்த்து, 'ஏன் அம்மா! நீ அப்பாவை முதலில் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாயா?" என்று விஷமச் சிரிப்புடன் கேட்டான்.
”ஏண்டா, எனக்கென்ன குறைச்சல்? பாட்டி காதில் விழுந்தால் உனக்குப் பிடித்திருக்கிற சனியை விடுவித்து விடுவாளே! கறுப்பாக இருக்கிறேன் என்றுதானேடா கேலி செய்கிறாய்? ' யானை கறுத்தால் ஆயிரம் பொன்' என்று சொல்லுவார்கள். ஆண்பிள்ளை எப்படி இருந்தால் என்ன? புருஷ காம்பீர்யம் என்பது ஒன்று இருந்தால் போதும்" என்றார் ராஜமையர்.
மங்களம் முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு, "போகிறது. அந்த மட்டும் பழமொழியைச் சொல்லியாவது ஆறுதல் அடைகிறீர்களே! பிள்ளையும், பெண்களும் என் நிறத்தைக் கொள்ளாமல் இருந்திருந்தால் உங்கள் பெண்களுக்கு வரன் தேட காலுக்கு விளக்கெண்ணெய்தான் போட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள்!" என்று ஒரு போடு போட்டாள்.
"அதான் நான் கறுப்பு என்று அந்த நாளில் உன் வீட்டார் என்னைக் கொஞ்சமாகவா ஏசினார்கள்? உன் அத்தை கூட, 'பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்தமாதிரி' என்று எனக்கும், உனக்கும் 'பச்சை' பூசும்போது பந்தலிலேயே சொல்லவில்லையா மங்களம்?”
"ஐயோ! எனக்கு நாழிகை ஆகிறது. தடி தடியாய் அததுகள் தின்றுவிட்டு ரேடியோ கேட்கப் போய்விட்டதுகளே. போதாக்குறைக்கு நீங்கள் வேறே எதையாவது பேசிக் கொண்டு!" என்று கூறிவிட்டு மங்களம் அடுக்களையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் .
-------------------
தொடரும்