Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 7. ரகுபதியின் கடிதம்
கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் 'கலீர், கலீர்' என்று சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதீட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலியவை, சந்துருவின் மனதில் அழியாத ஓவியமாகப் பதிந்து விட்டன. தனிமையில் உட்கார்ந்து அவன் மானசிகமாக ஸரஸ்வதியை நினைத்து. நினைத்துப் பார்த்துக் களிப்பெய்தினான், அவளைப்பற்றி வீட்டிலே யாராவது பேசிக் கொண்டிருந்தால் ஆனந்தம் பொங்க அங்கு நின்று அதை முற்றும் கேட்டு விட்டுத்தான் நகருவான். படிக்கும் போது ஒருவருக்கும் தெரியாமல் காகிதத்தில், 'ஸரஸ்வதி, ஸரஸ்வதி' என்று எழுதிப் பார்ப்பதில் அவன் மனம் திருப்தியடைந்தது.
கல்யாணமெல்லாம் கழித்து, பாலம் டில்லிக்குப் புறப்படுவதற்கு முதல் தினம் சாப்பிடும் கூடத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். சீதா கல்யாண அவசரத்தில் ஸரஸ்வதியிடமிருந்து புதுப் பாட்டுகளாக இரண்டு கற்றுக் கொண்டிருந்தாள். பூஜை அறையில் அவள் தம்பூரை மீட்டி அதைப் பாடும்போது சந்துரு அங்கு வந்து சேர்ந்தான். பாட்டைச் சிறிது நேரம் கேட்டுவிட்டு அவன், "இந்தப் பாட்டில் தானே அநுபல்லவியில் 'நிரவல்' செய்தாள் ஸரஸ்வதி? அபாரமாக இருந்தது. இப்பொழுது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது சீதா" என்றான் அவன்.
"செதுக்கி எடுத்த சிலை மாதிரி மூக்கும், விழியும், பாவம், பச்சைக் கிளிமாதிரி இருக்கிறது அந்தப் பெண்; கால்கூட அப்படி ஒன்றும் ஊனம் இல்லை; வெளியிலே ஒன்றும் தெரியவில்லை. ஒரே பிடிவாதமாகக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளாமே. நான்கூட என் மைத்துனனுக்குப் பண்ணிக்கொள்ளலாம் என்று சம்பந்தி அம்மாளை விசாரித்துப் பார்த்தேன்" என்றாள் பாலம்.
“தகப்பனார் வெளிநாட்டில் இருக்கிறாராம். மாசம் இந்தப் பொண்ணுக்கென்று நூறு ரூபாய் அனுப்புகிறாராம். கல்யாணத்துக்கென்று பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறாராம்! ' பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விடுகிறேன் அத்தை' என்று சொல்லுகிறதாம் அந்தப் பெண்! அங்கங்கே கல்யாணத்துக்குப் பணமில்லாமல் பெண்கள் நிற்கறதுகள். இது என்னடா என்றால் புதுமாதிரியாக இருக்கிறது' என்று மங்களம் நாத்தனாரிடம் சொல்லி அதிசயப்பட்டாள்.
"அதிசயந்தான்! இந்தக் காலத்தில் பெண்களும், பிள்ளைகளும், கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது ஒரு 'பாஷன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறதுகள். நம்ப சுப்பரமணியின்