சாவித்திரியை இந்த மாசக் கடைசிக்குள் நம் வீட்டில் கொண்டுவந்து விடும்படி அம்மா தங்களுக்கு எழுதச் சொன்னாள். வரும் தேதியை முன்னாடியே தெரியப்படுத்தவும். மாமிக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.
தங்கள் அன்புள்ள,
ரகுபதி.
காதில் ஜ்வலிக்கும் வைரக் கம்மல்களைப் புடைவை முன்றானையால் துடைத்துக் கொண்டே மங்களம், "என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கணவரைக் கேட்டாள்.
ராஜமையர் யோசனையுடன் தலையைத் தடவிக்கொண்டார், பிறகு, கம்மிய குரலில் வருத்தம் தேங்கும் முகத்துடன், பார்த்தாயா மங்களம்! நேற்றுவரை பெற்று வளர்த்தவர்களுக்கு இல்லாத உரிமை ரகுபதிக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது! பெண்ணை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் கதறிக்கொண்டு ஓடுகிறோம். இது விந்தை அல்லவா?" என்றார்.
"ஆமாம். . ஆமாம் . . உங்கள் காலத்தைக் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். நமக்குக் கல்யாணம் முடிந்ததும், 'என் அண்ணா பிள்ளைக்கு ஆண்டு நிறைவு. அத்தை பெண்ணுக்குச் சீமந்தம்' என்று என்னை எங்கே பிறந்தகத்தில் தங்கவிட்டீர்கள்? வேண்டியதுதான் உங்களுக்கும்!" என்று மங்களம் பழைய விஷயங்களை நினைவு படுத்தினாள். இருந்தாலும், அவள் குரலும் கம்மிப்போயிருந்தது.
இவர்கள் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சமயம் காமரா அறையில் சாவித்திரி தன் கணவன் எழுதி இருந்த கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். திரும்பத் திரும்பப் படிக்கும்படியாக அக்கடிதம் காதல் ரஸத்தில் தோய்ந்த தாகவோ, சிறிது இன்ப மொழிகளைக் கொண்டதாகவோ இல்லை. அதற்கு மாறாகக் கடிதத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், ஸரஸ்வதி, சாவித்திரியைத் தினமும் எதிர்பார்ப்பதைப் பற்றியும், அவன் மனம் கோணாமல் அவள் ஸரஸ்வதியிடம் சங்கீதம் பயின்று இன்னும் சில வருஷங்களில் ஒரு பாடகி ஆக வேண்டும் என்பதை வற்புறுத்தியும் எழுதப்பட்டிருந்தது.
சாவித்திரி பற்றிவரும் எரிச்சலுடன் கடிதத்தைப் பெட்டியில் வைத்து, 'டப்' பென்று அகங்காரத்துடன் மூடினாள். கீழே சந்துருவின் குரல் பலமாகக் கேட்டது.
"ஊருக்குப் போகும்போது நல்ல வீணையாக ஒன்று வாங்கித் தந்துவிடேன். மாப்பிள்ளைக்குப் பரம திருப்தியாக இருக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான் சந்துரு.
தடதடவென்று கோபத்தில் இரண்டொரு படிகளைத் தாண்டி இறங்கிக் கீழே வந்தாள் சாவித்திரி. வந்த வேகத்தில் மேல்மூச்சு வாங்குவதையும் பாராட்டாமல், "எனக்கு வீணையும் வேண்டாம்! பூனையும் வேண்டாம். உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா என்ன?' என்று எரிந்து விழுந்தாள் அவள்.