இன்று என்ன விசேஷம்?' என்று ரகுபதி யோசித்தான்.
"ஓஹோ! நவராத்திரி - ஆரம்பம்போல் இருக்கிறது. கல்யாணம் நடந்த வருஷத்தில் மங்களகரமாகக் கணவனுடன் இருந்து பண்டிகைகள் கொண்டாட வேண்டியவள் பிறந்தகத்தில் - போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்! ஆயிற்று, நவராத்திரி முடிந்ததும் தீபாவளி வரும். இந்தத் தீபாவளி தலை தீபாவளி ஆயிற்றே?. மாமனார் வீட்டிலிருந்து பலமாக அழைப்பு வரும்! பெட்டி நிறையப் பட்டாசுக் கட்டுகளும் ஆருயிர் மனைவிக்கு வண்ணச்சேலையும் வாங்கிப் போகவேண்டியது தான் பாக்கி.
ரகுபதிக்கு எதையோ, என்னவோ நினைத்து நினைத்துத் தலையை வலிக்க ஆரம்பித்தது. அவன் சிந்தனையைக் கலைத்து அவன் தாய், "ரகு!" என்று ஆதரவுடன் கூப்பிட்டாள். திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது ஸ்வர்ணம் அவனுக்கு வெகு அருகிலேயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
"ஏண்டா அப்பா! திறப்பு விழாவுக்காவது சாவித்திரி வந்துவிட்டால் தேவலை. நாம்தான் பேசாமல் இருக்கிறோம். ஊரில் நாலுபேர் கேட்பதற்குப் பதில் சொல்ல முடியவில்லையே. உன் மாமனாருக்காவது ஒரு கடிதம் எழுதிப் பாரேன்" என்றாள்
ஸ்வர்ணம்.
"அவருக்கு இன்று தான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்" --வரட்சியுடன் பதிலளித்த மகனின் முகத்தைப் பார்த்ததும் ஸ்வர்ணத்தின் மனம் உருகியது. இப்படிச் செய்வதுதான் நல்லது. இது தான் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்' என்று குழந்தையில் அதட்டித் திருத்தி அவள் வளர்த்த மகன்தான் ரகுபதி. இருந்தாலும், இன்று அவன் மனத்துக்கு நல்லது கெட்டது தெரிந்திருக்கிறது. அதிகமாக அவனை ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அப்படிச் சொல்லித் திருத்துவதற்கும் பிரமாதமாகத் தவறு ஒன்றும் அவன் இழைத்துவிடவில்லை. இந்தப் பிளவு - இந்த வைராக்கியம் - ஒரு வேளை நீடித்து நிலைத்துவிடுமோ? அப்படியானால், அவள் ஒரே மகன் வாழ்க்கை முற்றும் இப்படித் தான் ஒண்டிக் கட்டையாக நிற்கப்போகிறானா? ஸ்வர்ணத்தின் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அநுபவித்தாள்.
பெற்ற அன்னை மகனைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கிறாள். அவன் அறிவு பெற அரிய கதைகளை மனதில் பதியும்படி கூறுகிறாள். பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் கல்வியில் தேர்ந்து பட்டம் பெற்று வரும்போது திருஷ்டி கழிக்கிறாள். பொங்கிப் பூரிக்கிறாள். அவனுக்கு ஆசையோடு மணம் முடித்து வைத்துப் பேரன் பேத்தியோடு குலம் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறாள். நடு நடுவில் குடும்பங்களில் சிறு பூசல்கள் எழலாம். மாமியாரும், மரு மகளும் சண்டை போட்டுக்கொண்டு விலகி வாழலாம். இவை தினமும் நடக்கின்றன.