சாந்தமே வடிவமாக, ஆனால் சலனமே இதயமாக அவர் எதிரில் உட்கார்ந்திருந்த பார்வதிக்குப் பேசத் தோன்ற வில்லை; என்ன பேசுவது என்றும் புரியவில்லை.
இருவரும் ஒரே மாதிரி எண்ணிக்கொண்டு, பார்த்துக் கொண்டு, சிந்தித்துக் கொண்டு, என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துக்கொண்டு அப்படியே, அதே நிலையில், எப்போதும், என்றென்றும், இருந்துவிடவே விரும்பினார்கள். அந்த மெளன நிலையில் அவர்கள் இருவருக்குமே அத்தனை இன்பமும் சுகமும் இருந்தன. அப்படி ஒரு சுகம் இருப்பதை இருவருமே தனித்தனியாக உணர்ந்து அனுபவித்தார்கள். ஆனால் வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளவில்லை.
இருவர் உள்ளங்களும் நெருங்கிய நிலையில் உறவாடிக் கொண்டிருந்த போதிலும், இருவருக்கும் தங்கள் ஆர்வத்தை வெளியிட முடியாத நிலை! அது ஓர் அபூர்வ நிலை!
வயது ஐம்பத்திரண்டு கடந்து விட்ட பிறகு, இன்னொருத்தியின் துணையை,உறவை நாடுகிறது அவருடைய உள்ளம். இதைக் காதல் என்று கூறமுடியாது; காதலுக்கும் உடலுறவுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆசை இது.
பார்வதிக்கு வயது நாற்பத்தாறு ஆகிவிட்டது. இத்தனைக் காலமும் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட அவள், திருமண வாழ்க்கையை என்றுமே விரும்பியதில்லை. தன் கன்னிப் பருவத்தை, இளமையின் பைசாச உணர்ச்சிகளுக்குப் பலியாக்கி விடாமல் புனிதமாகப் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்து விட்ட பின்னர், இத்தனைப் பிராயம் கடந்து இப்படி ஒரு விசித்திரமான ஆசை!
சேதுபதியின் உறவை அவள் விரும்புகிறாள். ஆயினும் அந்த எண்ணம் தற்கால இலக்கியங்களில் சர்வ சாதாரணமாக வர்ணிக்கப்படும் காதல் அல்ல. அவரிடம் அவளுக்கு ஏற்பட்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு, பரிவுக்குக் காரணம் அறிவு பூர்வமான தொடர்பேயாகும்.
சேதுபதியின் அறைச் சுவரைப் பெரிய உலகப்படம் ஒன்று அலங்கரித்தது. உலகத்திலுள்ள தேசங்கள், தீவுகள், கடல்கள், மலைகளெல்லாம் அதில் வரையப்பட்டிருந்தன. இன்னொரு புறம் உலக மகா மேதைகள் எழுதிய அறிவு நூல் கள் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் வெண்கலத்திலான புத்தர் சிலை, மேஜை மீது உருண்டை வடிவமான சுழலும் உலகத்தின் கோளம் ஒன்று.
சுற்றியுள்ள படங்களும், அறிவு நூல்களும் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல; சேதுபதியின் அறிவு விசாலத்துக்குச் சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும் உன்னதப் பொக்கிஷங்கள் அவை.
'தான் ஓர் அறிவாளி; கல்வி கேள்விகளில் வல்லமை வாய்ந்த ஓர் இலக்கிய மேதை' என்ற பெருமை பார்வதிக்கு உண்டு. ஆயினும் அந்தப் பெருமையை அவள் அகம்பாவ மாக்கி