பேசினார்.
“நீ என்ன பார்வதி... கல்யாணம் ஆகும் முன்னால், கட்டிக்கப் போறவனாய் இருந்தாலும் சைக்கிள்லே ஏறலாமா? மல்லிகா அப்படிப்பட்டவளாய் இருந்தால், உன் மகளை அவனுக்கு கேட்பேனா? கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பாரு அவன் ராமன் சைக்கிள்ல, பின்னால உட்கார மாட்டாள். முன்னால்தான் உட்காருவாள். இல்லியா மல்லிகா?”
‘இல்லை, இல்லவே இல்லை’ என்று கத்த வேண்டும் போலிருந்தது மல்லிகாவுக்கு. ஆனால் அப்படிக் கத்தவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அப்பாவையும் இறங்கப் பார்த்துவிட்டு, தனது அறைக்குள் போனாள். தலை திடீரென்று கனத்தது. “நாளைக்கே வெத்திலைப் பாக்கு மாத்திடலாம்” என்று வெளியே கேட்ட பார்வதியின் சத்தம், அவளுக்கு தன் தலையே வெடித்து, அப்படி ஒரு சத்தத்தை எழுப்புவது போல் தோன்றியது.
பேசாமல் அந்த ‘ஆளோட’ வீட்டுக்கு போயிடலாமா? அம்மாவோட ‘நாத்தனார்’, நல்லவங்கதானே. சீ... அங்கே... அந்த குண்டு குழி விழுந்த வீட்டுக்குள்ள, எப்படி இருக்க முடியும்? அப்பாவை விட்டுட்டு எப்படிப் பிரிஞ்சு இருக்க முடியும்? அதோட, அந்த ‘ஆளு’ வேற குடுச்சிட்டு திட்டுவாரு. அதுக்காக இந்த நொள்ள ராமனை கட்டிக்க முடியுமா? இப்படியெல்லாம் எண்ணினாள், மல்லிகா. வெறித்த கண்களுடன், கடித்த உதடுகளுடன் அவள் கலங்கினாள்.
கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும், எந்த மேளத்தை அமர்த்த வேண்டும், யார் யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று வெளியே பலமாக விவாதங்கள் எழுந்தன.
மல்லிகா குப்புறப்படுத்தாள். அவள் மனத்திரையில் சரவணன் வந்தான். வந்த வேகத்திலேயே போய் விட்டான். ஆனால் கிழிந்த புடவையும், மஞ்சள் கயிற்றுக் கழுத்தும், தனித்தனியாக வந்து, பின்பு மருண்ட பார்வையோடு, மிரண்ட முகத்தோடு, கூனிக்குறுகிய தோற்றத்தோடு, ஒரு உருவம் வந்தது. அது எவ்வளவு விரட்டியும் போக மறுத்தது. அவள் செல்லம்மா... மல்லிகாவின் நிஜமான அம்மா. அவளால் இதுவரை ஒதுக்கப்பட்ட அவளைப் பெற்ற பாவி!
செல்லம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “கடைசியில் ராமனுக்குத்தான் கட்டப் போகிறார்களா? இதுக்கா பெத்தேன்? அவரு, தத்து கொடுக்காதே கொடுக்காதேன்னு சொன்னாரே, நான் பாவி. தூரத்தில் நின்னாவது, மகள் உயரத்துல இருக்கறதை தலைநிமிர்ந்து பார்க்கலாமுன்னு நினைச்சேன். இப்போ பள்ளத்தில் விழப்போறவளை, நானுல்லே தலைகுனிந்து பார்க்கணும் போலிருக்கு. அட கடவுளே. இங்கே கூட்டி வந்துடலாமா? எப்படி முடியும்? ராணி மாதிரி இருக்கிற அவளால், இந்த தேனிக் கூட்டில் இருக்க முடியுமா? இருக்கத்தான் சொல்லலாமா?”
செல்லம்மா, முழங்கால்களுக்குள் தலையை வைத்து, முட்டிக் கொண்டும், மனதுக்குள்