மோதிக்கொண்டும் இருந்த போது, அவளுடைய கடைசி மகள் முறைவாசல் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு குடித்தனமும் தத்தமக்குள்ளே முறை வைத்துக் கொண்டு, சதுரமாக அமைந்திருக்கும் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். பொது இடமான களத்தைப் பெருக்க வேண்டும். இதற்கு முறைவாசல் பரிபாஷை. இன்னொரு மகன் சரியாய் எட்டு மணிக்கு, ராஜாதி ராஜ கம்பீரத்துடன், தோழி சகிதமாய் வரும் வீட்டுக்கார அம்மாவுக்கு குழாயை விட்டுவிட வேண்டும் என்பதற்காக அவசரமாகத் தண்ணீர் பிடித்தான். ஒரு பையன் தெருவில் நின்ற ஒரு டிரக் வண்டியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
செல்லம்மாளின், பித்துப் பிடித்த தலைக்குள்ளும் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
கணவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது. இந்த கல்யாணத்தைத் தடுத்து ஆக வேண்டும். அவள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். பெருமாள் பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவார். கோணி வியாபாரம் செய்பவர் கோணிக்கடையில் கோணிகளை லைட்டீஸ் கோணி, உப்புக் கோணி, அஸ்கா கோணி என்று பிரிவு படுத்தி, பிரிவுப்படியான பணத்தை ஒன்றுபடுத்தி பத்து ரூபாய் லாபத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்ததும் வராததுமாக செல்லம்மா, அவரிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நேரமோ ஆகிக் கொண்டிருந்தது. அவர்கள் ஜாதியில் நிச்சய தாம்பூலம் ஆகிவிட்டால் பாதிக் கல்யாணம் முடிந்தது மாதிரி. வேறு எவனும் கல்யாணம் செய்ய முன் வர மாட்டான்.
புருஷன், தான் சொல்லப் போகும் செய்தி கேட்டு தன்னை அடித்தாலும் அடிக்கலாம் என்று நினைத்து, அப்படி அடித்தால் முகத்திலோ தலையிலோ படக்கூடாது என்று எண்ணியவள் போல், செல்லம்மா, ஒரு புறமாக தோளைக் காட்டிக் கொண்டு, ஜாக்கிரதையான இடைவெளி கொடுத்துப் பேசினாள். கணவனுக்கு இதுவரை விஷயம் தெரியாது.
“உங்கள் மகள் மல்லிகாவை கூட்டி வாறீங்களா?”
“அவளை என் மகள்னு சொல்லாதடி. இங்க வந்தவுடனேயே வீட்டுக்குப் போகணுமுன்னு சொல்றவள், என் மகளாய் இருக்க மாட்டாள்.”
“நீங்க அப்படிச் சொல்றதுனால்தான், நாம் பெத்த பொண்ணு சீரழிகிறாள்.”
“என்ன சொல்றே?”
“பார்வதியோட அக்காள் மகன் ராமனுக்கு அவளை கொடுக்கிறதுன்னு நிச்சயம் பண்ணிட்டாங்களாம்.”
“என்ன... இன்னொரு தடவை சொல்லு?”
செல்லம்மா, இன்னொரு தடவை சொல்லிவிட்டு, விஷயத்தை ஆதியோடு அந்தமாக விளக்கிவிட்டு, நாத்தனார்காரியிடம் தான் போய் மன்றாடியதையும், அவள் தன்னை உதாசீனப்படுத்தியதையும், ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு, “செத்தாலும் வாழ்ந்தாலும்