டாக்டர் தம் மனசைத் தேற்றிக் கொண்டு வெளியே போய் விட்டார். அப்புறம் அவர் முன்னைப் போல் சிரத்தையுடன் பவானியின் கணவனைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை.
பவானி எந்த நாளை ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்துக் கலங்கி இருந்தாளோ அந்தப் பதினைந்தாம் தேதி வந்தது. அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. கிழக்கே உதய சூரியன் பளீரென்று உதயமானான். மலர்கள் மலர்ந்தன. பறவைகள் உதய கீதம் இசைத்தன. தென்றல் வீசியது. பவானி சோர்ந்த உள்ளத்துடன் எழுந்தாள். பல் விளக்கி, முகம் கழுவி, கண்ணாடி முன் நின்று நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள ஆரம்பித்தாள்.
”பவானி" என்று கூப்பிட்டு இருமிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் அவள் கணவன். குங்குமச் சிமிழை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பவானி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
செக்கச் செவேல் என்று ராஜாவைப் போல் இருந்த அந்த உருவம் தான் எப்படி வற்றி உலர்ந்து போய் விட்டது! சுருள் சுருளாக அலைபாயும் அந்தக் கிராப்பு எப்படிக் கலைந்து சிதறிப் போய் இருக்கிறது? பார்வையிலேயே தன் உள்ளத்தின் அன்பை வெளியிடும் அந்தக் கண்களின் காந்த சக்தி எங்கே மறைந்து போய் விட்டது? ஆஜானுபாகுவாக இருந்த அந்த நெடிய உருவம் எப்படிப் பூனை போல் ஒடுங்கிக் கிடக்கிறது?
இளமையையும் இன்ப வாழ்க்கையையும் படைத்த இறைவன் ஏன் இந்த நோய் என்னும் துன்பத்தையும் கூடவே படைக்க வேண்டும்? இத்தனை கோடி இன்பங்களைப் படைத்த இறைவன் ஏன் இப்படிப் பயங்கரமான வியாதிகளைப் படைத்து. அதற்குப் பலி ஆகிறவர்கள விதி என்று சொல்லித் தேற்ற வேண்டும்?
மதுவைப் படைத்தவன் நஞ்சைப் படைத்திருக்கிறான். மலரைப் படைத்தவன் முட்களைப் படைத் திருக்கிறான். மானைப் படைத்தவன் புலியைப் படைத்-திருக்கிறான். அது தான் சிருஷ்டியின் தத்துவம். யாரும் கண்டறிய முடியாத ரகசியம்.
முகத்தில் வேதனை விளையாட எதிரில் தங்கச் சிலை மாதிரி நிற்கும் பவானியை அவன் ஆசை தீரப் பார்த்த பிறகு அமைதியான குரலில் ”பவானி! இங்கே வாயேன், இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்" என்று ஆசை பொங்க அழைத்தான்.
பவானி பதில் ஒன்றும் கூறாமல் அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள். மெலிந்து போயிருந்த தன் கையால் அவள் இடுப்பைச் சுற்றி அணைத்தவாறு அவன் அவள் கையிலிருந்த குங்குமச் சிமிழை வாங்கிக் கொண்டான். அன்புடன் அவள் முகவாயைப் பற்றித் தன் முகத்துக்கு நேராக அவள் முகத்தைத் திருப்பினான். ஆள் காட்டி விரலைச் சிமிழுக்குள் தோய்த்துக் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வட்ட வடிவமாகப் பொட்டு வைத்தான்.
பவானியின் கண்கள் குளமாக இருந்தன. உதடுகள் துடித்தன. நெஞ்சுக் குமிழ் திக் திக் கென்று