அடித்துக் கொண்ட து.
”பவானி! ஏன் அழுகிறாய்?" என்று கவலை தொனிக்கக் கேட்டான் அவன். அவள் பதில் பேசவில்லை.
”பைத்தியம்! நான் போய் விடுவேன் என்று தானே அழுகிறாய்? பிறந்தவன் இறப்பது உறுதி என்று கீதை படித்து எனக்கு உபதேசம் செய்தாயே! அதற்குள்ளாகவே மறந்து விட்டாயே பவானி?"
"ஆம்" என்கிற பாவனையாக அவள் கண்ணீருக்கிடையில் தலையசைத்தாள்.
" நான் பூமியில் பிறந்தேன். இன்றோ நாளையோ இறக்கப் போகிறேன். நான் பிறந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இறக்கப் போவதும்..." என்று அவன் இன்னும் ஏதோ முணு முணுத்துக்கொண்டே இருந்தான்.
பவானி ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நீலவானில் மேலே எழும்பி வரும் கதிரவனின் ஒளி வையகமெல்லாம் பரவிப் புத்துணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருந்தது.
நீள் விசும்பையும் வெட்ட வெளியையும் உற்று நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்த அவள் கவனத்தை குழந்தை பாலுவின் மென் குரல் கலைத்தது .
"அம்மா! அம்மா!" என்று அழைத்துக் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாலு தட்டுத் தடுமாறிய வண்ணம் அவளைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தான்.
பவானி திரும்பிப் பார்த்தாள். தூக்கக் கலக்கத்தில் தடுமாறி நடந்து வரும் அவனை, ”வாடா கண்ணு இங்கே!" என்று அவள் கணவன் அழைத்து அவனுடைய தளிர்க்கரங்களைச் சேர்த்துத் தன் கைக்குள் புதைத்துக் கொண்டான். அதனால் மட்டற்ற மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அடைந்தான். அவன் மகிழ்ச்சி பொங்கும் குரலில், ”பவானி. குழந்தையின் கைகளைப் பிடித்துப் பாரேன். உனக்கு அந்த ஸ்பரிசம் எவ்வளவு இதமாக இருக்கிறது என்பது தெரியும்" என்றான்.
பவானி ஆசையுடன் பாலுவின் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். மெத்து மெத்தென் றிருந்த அந்தப் பிஞ்சுக் கரங்களின் பராமரிப்பில் தன் கணவன் தன்னை விட்டுப் போவதாகவே நினைத்தாள்.
”அம்மா! எனக்குக் காப்பி வேணும் அம்மா" என்றான் குழந்தை. அப்பொழுது தான் பவானிக்குத் தான் இது வரையில் அடுப்பே மூட்டவில்லை என்பது நினைவுக்கு வந்தது. விடிந்து ஏழரை மணி ஆகிவிட்டது. இதுவரையில் வியாதிக்காரனுக்கும் ஆகாரம் ஒன்றும் கொடுக்காமல் என்னவோ நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததை நினைத்து வருந்திக் கொண்டே பவானி சமையலறைக்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள்.
பதினைந்து நிமிஷங்களில் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு அவள் வெளியே வந்தாள்.