ஆனால் சில மாதங்களுக்கு அப்புறம் அந்தச் செடியிலிருந்து தனித்தனியே பல கொடிகள் தோன்றுகின்றன. மெல்லிய காற்றிலே அசைந்தாடுகின்றன. பற்றிக் கொண்டு படர ஊன்று கோல் இல்லாமல் தவிக்கின்றன. தோட்டக்காரன் சிந்தனை செய்கிறான். நல்ல கொம்பாக ஒன்றைத் தேடி எடுத்து வந்து அருகில் நட்டு அதன் மீது கொடிகளைச் சேர்த்துப் படர விடுகிறான். முல்லைக் கொடி கொழு கொம்பைப் பற்றிக் கொண்டு பந்தலின் மீது படர்ந்து வெள்ளை மலர்களைத் தாங்கி நிற்கிறது.
ஒரு பெண்ணும் அண்ணன் தம்பிகளுடன் ஒரு குடும்பத்தில் பிறக்கிறாள். அவர்களிடையில் வளருகிறாள். அவள் மங்கைப் பருவத்தை அடையும் வரை அவளைப் பற்றிப் பெற்றோர் அவ்வளவாகக் கவலைப் படுவதில்லை. தள தளவென்று வளர்ந்து வாளிப்பாகத் தன் முன் நிற்கும் மகளைப் பார்த்து தாய் முதலில் கவலைப் படுகிறாள். ”பார்த்தீர்களா நம் மகளை? எப்படித் திடீரென்று வளர்ந்து விட்டாள் ! இனிமேல் நீங்கள் கவலையில்லாமல் தூங்க முடியாது" என்று கணவனை எச்சரிக்கிறாள். தந்தையும் மகளைப் பார்த்துப் பிரமித்துத்தான் போகிறார். மண்ணில் சிறு வீடுகள் செய்து விளையாடிய பெண்ணா இவள்? பந்துக்காகச் சகோதரர்களிடம் சண்டை-யிட்டவளா இவள்? ’அப்பா' என்று அழைத்து மடியில் உட்கார்ந்து கதை பேசிய கண்மணியா இவள்? எப்படி வளர்ந்து விட்டாள்!' என்று ஆச்சரியம் ததும்ப மகளைப் பார்க்கிறார்.
”நல்ல இடமாக வந்தால் பாருங்கள். காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விடலாம்" என்கிறாள் தாய்.
நல்ல நாயகனை, கொடிக்குத் தேவையான கொழு கொம்பைத் தேடுகிறார் தந்தை. மணமுடித்து வைக்கிறார். மனதிலே ஆறுதலும் திருப்தியும் அடைகிறார்கள் பெற்றோர்.
ஆனால் முல்லைக் கொடிக்கு ஆதாரமாக ஊன்றிய கொழு கொம்பை ஒரு பேய்க்காற்று, புயல், சூறாவளி அலைக்கழித்துத் தரையில் சாய்த்து விட்டுப் போய் விடுகிறது. முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பில்லாமல் தவக்கிறது. காற்றிலே ஊசலாடுகிறது.
இதைப் போலத்தான் இருக்கிறது பவானியின் வாழ்க்கை என்கிற தீர்மானத்துக்குக்