நடைபாதைகளிலும் விற்கப்படும் ஒரு சரக்காக மாறி இருப்பதை நினைத்து இந்த நிலைமைக்குப் பொறுப்பாளி யார் என்பது புரியாமல் திகைத்தார். தாமே நேரில் சென்று மாப்பிள்ளையிடம் பெண்ணைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரமாகக் கூறி, விவாகத்துக்குச் சம்மதிக்கச் செய்து, தாமும் உடனிருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
மாமாவே பொறுப்பேற்று கல்யாணத்தை முடித்து வைத்து விட்டார். இனிமேல் தன் ஜம்பம் ஒன்றும் அங்கே சாயாது என்பது புரிந்ததும் மூர்த்தி பசுமலைப் பக்கமே ஒரு வருஷத்துக்குத் தலை காட்டவில்லை.
பசுமலையில் இருக்கும்போதே இவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டவன். இப்பொழுது பம்பாய் என்றும் கல்கத்தா என்றும் பல பெரிய நகரங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறான். மூர்த்தியின் அறிவு பல விஷயங்களைப் பற்றியும் விரிவடைந்து தானே இருக்கும்?
'பெண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறையைப் பற்றியே அறியாதவன் பவானியின் வீட்டுக்குள் எதற்குப் போனான்? இதேதடா சங்கடம்?' என்று நினைத்துக் கொண்டு கல்யாணம் மனதுக்குள் அருவருப்பும் கவலையும் அடைந்தார்.
வெளியே வந்த மூர்த்தி மாமாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அங்கிருந்த வெற்றிலைப் பெட்டியிலிருந்து வெற்றிலையை எடுத்துப் போட ஆரம்பித்தான் . கல்யாணம் கண்ணை மூடிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து இருந்தார்.
"ஏன் மாமா!" என்று அழைத்தான் மூர்த்தி.
"உம்..." என்றார் கல்யாணம்.
“இந்தப் பெண், பாவம் --- இப்படி இந்த வயசில்... பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது மாமா..."